தன் தந்தை விக்கிரம பாண்டியனை போல ராஜசேகர பாண்டியனும் சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தான். மற்ற எல்லா கலைகளையும் கற்ற அவன் சிவனின் மேல் கொண்ட பற்றினாள் அவர் ஆடிய நாட்டியக் கலையை மட்டும் கற்றுக் கொள்ளவில்லை.
ஒரு முறை கரிகால சோழனிடம் பரிசு பெற்ற புலவர் ஒருவர் பாண்டியனின் அவைக்கு வந்தான். வந்தவன் பாண்டியனின் கோபத்தை தூண்டும் விதத்தில் "சோழ மன்னனோ அறுபத்து நான்கு கலைகளை கற்று சிறந்திருக்கிறான். ஆனால் உம்மிடம் ஒரு கலை குறைவாக இருக்கிறது". என கூறிவிட்டு சென்றுவிட்டான்.
இதை கேட்ட ராஜசேகர பாண்டியன் நாட்டியக் கலையை கற்ற ஆரம்பித்தான். சிவராத்திரியன்று பாண்டியன் வெள்ளியம்பலம் வந்து பஞ்சாட்சரத்தை கூறிக் கொண்டு நடராஜர் சந்நிதிக்கு வந்தார். நடராஜரின் நாட்டிய கோலம் அவனது மனதில் தோன்றியது.
"நான் நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இரு காலால் நிற்கவே கால் கடுக்கிறது, நீரோ வெகு காலமாக வலது காலிலே நிற்கிறீர். தயவுசெய்து எனக்காக காலை மாற்றி நில்லுங்கள்" என கூறியும் விக்கிரகத்தில் மாற்றம் ஏதும் இல்லாததால் தன் சிரத்தை அறுத்துக் கொள்ள கத்தியை எடுத்தான்.
அவன் கத்தியை எடுத்ததைக் கண்ட ஈசன் தன் வலது காலைத் தூக்கி இடது காலை ஊன்றி கொண்டார். வலதுக் காலை தூக்கி இறைவனை ஆடிய கோலத்தை காண ரிஷிகளும் தேவர்களும் கூடினர். அனைவரும் இறைவனுக்கு பூஜை செய்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.
இதை கண்டு ஆனந்தத்தில் திகைத்து போனார் மன்னர். என் உயிரை காக்க கால் மாற்றிக் கொண்டாயே! இனி வரும் எல்லா பிறவிகளிலும் உன்னை நினைத்து உனக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை எனக்கு தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டான் மன்னன்.
"இந்த காட்சியை அனைவரும் காண வேண்டும். எனவே தாங்கள் இதே கோலத்தில் அனைத்து மக்களுக்கும் காட்சிக் கொடுக்க வேண்டும் என வேண்டி கொண்டான்". உடனே வானத்தில் இருந்து "அப்படியே ஆகட்டும்" என ஒரு குரல் கேட்டது. வெள்ளியம்பலத்தில் இறைவன் கால் மாறி நிற்கும் கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காத ஒன்று.
சில நாட்களில் இறைவன் அருளால் ராஜசேகர பாண்டியனுக்கு புத்திர பாக்கியம் உண்டானது. குழந்தைக்கு குலோத்துங்கன் எனப் பெயரிட்டு மகிழ்ந்தான். கால் மாறியாடியதே இறைவனின் 24 -ஆம் திருவிளையாடல்.
ஈசனின் 24 -ஆம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் எல்லா பிறவிகளிலும் நல்லதே நடக்கும்.