ஈசனின் நடனத்தை கண்ட முனிவர்கள் உணவருந்த அமர்ந்தனர். அறுசுவை உணவு விருந்தை முடித்துவிட்டு தாம்பூலம் வாங்கிக் கொண்டு புறப்பட்டனர்,
வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட, சமையல்காரர் காஞ்சனமாலையிடம் வந்து "பூதநாதனுடன் பூதகணங்கள் நிறைய வரும் என எண்ணி நிறைய உணவுகளை தயார் செய்தோம். இப்போது உணவு மிச்சம் இருக்கின்றது, என்ன செய்வது? என கேட்டார்.
இதை அறிந்த தேவி தன் தோழிகளுடன் அன்ன பதார்த்தங்களைப் பார்வையிட்டாள். பின் சுவாமியிடம் "உங்கள் வீட்டின் உறவினர்கள் அவ்வளவுதானா? நிறைய உணவுகள் மிஞ்சிவிட்டன என கூறினாள்.
சுவாமியும் தேவியுடன் விளையாடும் நோக்கில் "நீ அரசி என்ற கர்வத்தினால் அதிகம் ஏற்பாடு செய்திருந்தால் நான் என்ன செய்வது?" என கூறி அருகிலிருந்த குண்டோதரனை அருள் பார்வை பார்த்தார். அவர் தன்னுடைய நெற்றிக்கண்ணிலிருந்து ஒரு பொறியை அவன் வயிற்றினுள் செலுத்தினார்.
உடனே குண்டோதரன் ஈசனை வணங்கி "உமது குடையை பிடித்து பின் தொடர்ந்து வந்ததாலோ என்னவோ எனக்கு பெரும் பசியாக இருக்கிறது. நான் சாப்பிட வேண்டும்?" எனக் கேட்டான்.
குடையை பிடிக்க இந்த குட்டை பூதத்தை மட்டும் அழைத்து வந்தேன், உங்கள் அரண்மனையில் இப்படி உண்ண உணவு கிடைக்கும் என்றால் நான் மற்ற பூதங்களையும் அழைத்து வந்திருப்பேன் என கூறியது. குண்டோதரா, நீ போய் சாப்பிட்டு வருவதற்குள் மற்ற பூதங்களை அழைத்து வர நான் ஆள் அனுப்புகிறேன் என பதில் உரைத்தார்.
தேவி அந்தப்புரம் சென்றுவிட்டால். குண்டோதரன் சமையல் அறைக்கு செல்ல, பணிப்பெண்கள் அவனுக்கு இலைபோட்டு உணவு எடுத்து வைத்தனர்.
"எனக்கு இலை எல்லாம் பத்தாது என கூறி ஒரு பெரிய அன்னக் குன்றுகளில் சாம்பாரை நதி போல ஓட விட்டான். அவன் சாப்பிட ஆரம்பித்தான். அதை பார்த்த பணிப்பெண்கள் பயந்து ஓடினர். இரண்டே நிமிடத்தில் அனைத்தையும் காலி செய்துவிட்டான். முதலில் அன்னபருப்பு மலை, பொரியல், கூட்டுக்களும், பிறகு நெய்ப்பானை, தயிர்க்குடம், பால்அண்டா எல்லாம் காலி ஆகின. பின் பழவகைகளை கொட்டை, தோலுடன் உண்டு கழித்தான். லட்டு, மைசூர்பாகு பாதாம் போன்ற எல்லாம் தீர்ந்துவிட்டது. அதுமட்டும் அல்லாமல் அடுத்த நாள் இரவு உணவுக்கு வேண்டிய காய்கள், தேங்காய், மாங்காய், அரிசி, பருப்பு போன்ற எதையும் விட்டு வைக்காமல் காலி செய்ய பணிப்பெண்கள் தேவியிடம் போய் முறையிட்டனர். குண்டோதரன் நிறைய சாப்பிட்டும் அவன் வயிறு பெரிதாகவில்லை. ஏனென்றால் அவன் வயிற்றில் இருந்ததோ அக்கினி ஆயிற்றே! நெருப்பில் எதை போட்டாலும் பஸ்மமாகித்தானே விடும். ,
தேவி ஈசனிடம் இதைப்பற்றி சொல்ல தயங்கினாள். அவள் ஈசனிடம் சொல்ல வந்த சமயம், எல்லாம் அறிந்திருந்த ஈசன் தேவியை பார்த்து"என்ன தேவி, குண்டோதரன் சாப்பிட்டு முடித்துவிட்டானா?" மற்ற பூதங்களை அழைத்து வர ஆட்கள் சென்றிருக்கிறார்கள்" என்றார் குறும்பாக.
உடனே தேவி "சுவாமி குண்டோதரனையே இங்கு சமாளிக்க முடியவில்லை. இவனை எப்படி திருப்தி அடைய வைப்பதென்று தெரியவில்லை. இதில் மற்ற பூதங்கள் வந்தால் அவர்கள் இந்த ஊரையே சாப்பிட்டு விடுவார்கள் என மக்கள் பேசிக்கொள்வது உங்களுக்கு கேட்கவில்லையா? உமது திருவிளையாடல் என்னிடமுமா? என கேட்டு ஈசனின் காலை தொட்டு வேண்டிக்கொண்டாள்.
அக்கினியை குண்டோதரனின் வயிற்றில் வைத்து அவன் நிறைய உணவு உட்கொண்டதை அனைவரையும் பார்க்கவைத்ததே ஈசனின் ஏழாம் திருவிளையாடல்.
இறைவனின் ஏழாம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் வயிறு தொடர்பான பிணிகள் தீரும். வீடுகளில் தானியம் செழிக்கும். மகப்பேறு ஏற்படும்.