உக்கிர பாண்டியன் தன் தந்தையை போலவே சிறப்பான ஆட்சியை ஏற்படுத்தினார். குடிமக்கள் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர். நாடெங்கும் புல்வெளிகள் செழித்து வளர்ந்திருந்தது. மரங்கள், செடி, கொடிகளுடன் பூக்களும் பூத்து குலுங்கியது. அவனின் ஆட்சியில் குறைகளே கிடையாது.
மன்னன் தொண்ணுற்றாரு அசுவமேத யாகங்களை முடித்ததை கண்டு, தேவேந்திரன் பொறாமை கொண்டான். பின் வருணனை அழைத்து பொங்கிப் பெருகி மதுரையை அழித்திடுக என ஆணையிட்டான்.
உடனே வருணனோ ஆலவாயின் மகிமையை அறியாமல் இரவில் பெரும் அலைகளுடன் கடலை பொங்கச் செய்தான். அப்போது சுந்தரேசப்பெருமான் மகன் கனவில் வந்து "மன்னா! தண்ணீர் ஊருக்குள் வந்து மக்கள் தத்தளித்து கொண்டிருக்கின்றனர். இது தெரியாமல் நீ உறங்கிக்கொண்டிருக்கிறாயே! நான் உனக்கு தந்த வேலை, கடலை நோக்கி வீசி, மக்களை காப்பாற்று, இல்லையென்றால் தண்ணீர் மதுரையை அழித்துவிடும்" என கூறி மறைந்துவிட்டார். தன் தந்தை கனவில் சொன்னபடியே வேலை உக்கிரபாண்டியன் வீச, பெரும் அலைகளுடன் பொங்கி எழுந்துவந்த நீர் கட்டுக்குள் வந்து வைகையை சேர்ந்தது.
இவர் மீனாக்ஷி ஆலயத்திற்குள் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சுந்தரலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். அப்போது சித்தர் உருவில் வந்த ஈசன், "வைகைக்கரையில் கடைச்சங்கத்தை நிறுவி தமிழ் வளர்ப்பாயாக!" எனக்கூறி ஜோதி வடிவில் லிங்கத்தில் கலந்தார்.
வேலால் தண்ணீரை கட்டுப்படுத்தியதே இறைவனின் 13 -இம் திருவிளையாடல்.
இறைவனின் 13 -இம் திருவிளையாடலை கேட்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் நீரால் ஏற்பட்ட கண்டம் விலகும். காமம், குரோதம், லோபம், மோகம், கோபம் போன்ற குணங்கள் கட்டுப்படும். கல்வியில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.