அ௫ளியவர் :திருஞானசம்பந்தர்
திருமுறை :மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நீறுவரி யாடரவொ டாமைமன
வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ
லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே
சொற்பிரிவி லாதமறை பாடிநட,
மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந்
நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு
னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக
ரென்பர்திரு வேதிகுடியே
போழுமதி பூணரவு கொன்றைமலர்
துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு
ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி
நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி
யென்பர்திரு வேதிகுடியே
காடர்கரி காலர்கனல் கையரனன்
மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ
ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல
ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை
மேவுதிரு வேதிகுடியே
சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற
முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர
னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல்
பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர்
போகநல்கு வேதிகுடியே
செய்யதிரு மேனிமிசை வெண்பொடி
யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ
டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ்
யாதவவர் வேதிகுடியே
உன்னியிரு போதுமடி பேணுமடி
யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ
லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம்
விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய
ரியற்றுபதி வேதிகுடியே
உரக்கநெ ருப்பெழநெ ருக்கிவரை
பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது
நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு
மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை
யுலாவுதிரு வேதிகுடியே
பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி
யங்கையனு நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென
நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய
தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர்
வீதிநிகழ் வேதிகுடியே
வஞ்சமணர் தேரர்மதி கேடர்த
மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி
யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு
டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ்
கின்றதிரு வேதிகுடியே
கந்தமலி தண்பொழினன் மாடமிடை
காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு
வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க
ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது
வேசரத மாணைநமதே
திருச்சிற்றம்பலம்