பத்தாம்-திருமுறை

8ம் தந்திரம் - 33. சுத்தாசுத்தம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நாசி நுனியினின் நான்மூ விரலிடை

ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்

பேசி யிருக்கும் பெருமறை யம்மறை

கூசி யிருக்குங் குணமது வாமே.  1 

 

 

கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்

துரிமையுங் கன்மமும் உன்னும் பிறவிப்

கருவினை யாவது கண்டகன் றன்பின்

புரிவன கன்மக் கயத்துட் புகுமே.  2 

 

 

மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்

மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்

மாயை மறைய மறையவல் லார்கட்குக்

காயமும் இல்லை கருத்தில்லை தானே.  3 

 

 

மோழை யடைந்து முழைதிறந் துள்புக்குக்

கோழை யடைகின்ற தண்ணற் குறிப்பினில்

ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து

தாழ அடைப்பது தன்வலி யாமே.  4 

 

 

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்

காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்

தேயத்து ளேயெங்குந் தேடித் திரிவர்கள்

காயத்துள் நின்ற கருத்தறி யாரே.  5 

 

 

ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார்

ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின்

ஆசூச மானிடம் ஆசூச மாமே.  6 

 

 

ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு

ஆசூச மில்லை அரனை அர்ச் சிப்பவர்க்கு

ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போர்க்கு

ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே.  7 

 

 

வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்

சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்

குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்

கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே.  8 

 

 

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்

தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை

தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்

தூய்மணி தூயனல் தூயவு மாமே.  9 

 

 

தூயது வாளா வைத்தது தூநெறி

தூயது வாளா நாதன் திருநாமம்

தூயது வாளா அட்டமா சித்தியும்

தூயது வாளாத் தூயடிச் சொல்லே.  10 

 

 

பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை

அருளது போற்றும் அடியவ ரன்றிச்

சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்

மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.  11 

 

 

வினையா மசத்து விளைவ துணரார்

வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்

வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்

வினையாளர் மிக்க விளைவறி யாரே.  12 

 

திருச்சிற்றம்பலம்