அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
திருத்தங்கு மார்பில்
திருமால் வரைபோல்
எருத்தத் திலங்கியவெண்
கோட்டுப் - பருத்த
குறுத்தாள் நெடுமூக்கிற்
குன்றிக்கண் நீல
நிறத்தாற் பொலிந்து
நிலமேழ் - உறத்தாழ்ந்து
பன்றித் திருவுருவாய்க்
காணாத பாதங்கள்
நின்றவா நின்ற
நிலைபோற்றி - அன்றியும்
புண்டரிகத் துள்ளிருந்த
புத்தேள் கழுகுருவாய்
அண்டரண்டம் ஊடுருவ
ஆங்கோடிப் - பண்டொருநாள்
காணான் இழியக்
கனக முடிகவித்துக்
கோணாது நின்ற
குறிபோற்றி - நாணாளும் (5)
பேணிக்கா லங்கள்
பிரியாமைப் பூசித்த
மாணிக்கா அன்று
மதிற்கடவூர்க் - காண
வரத்திற் பெரிய
வலிதொலைத்த காலன்
உரத்தில் உதைத்தஉதை
போற்றி - கரத்தாமே
வெற்பன் மடப்பாவை
கொங்கைமேற் குங்குமத்தின்
கற்பழியும் வண்ணங்
கசிவிப்பான் - பொற்புடைய
வாமன் மகனாய்
மலர்க்கணையொன் றோட்டியஅக்
காமன் அழகழித்த
கண்போற்றி - தூமப்
படமெடுத்த வாளரவம்
பார்த்தடரப் பற்றி
விடமெடுத்த வேகத்தால்
மிக்குச் - சடலம் (10)
முடங்க வலிக்கும்
முயலகன்தன் மொய்ம்பை
அடங்க மிதித்தஅடி
போற்றி - நடுங்கத்
திருமால் முதலாய
தேவா சுரர்கள்
கருமால் கடல்நாகம்
பற்றிக் - குருமாற
நீலமுண்ட நீள்முகில்போல்
நெஞ்சழல வந்தெழுந்த
ஆலமுண்ட கண்டம்
அதுபோற்றி - சாலமண்டிப்
போருகந்த வானவர்கள்
புக்கொடுங்க மிக்கடர்க்கும்
தாருகன்தன் மார்பில்
தனிச்சூலம் - வீரம்
கொடுத்தெறியும் மாகாளி
கோபந் தவிர
எடுத்த நடத்தியல்பு
போற்றி - தடுத்து (15)
வரையெடுத்த வாளரக்கன்
வாயா றுதிரம்
நிரையெடுத்து நெக்குடலம்
இற்றுப் - புரையெடுத்த
பத்தனைய பொன்முடியும்
தோளிருப தும்நெரிய
மெத்தனவே வைத்த
விரல்போற்றி - அத்தகைத்த
வானவர்கள் தாங்கூடி
மந்திரித்த மந்திரத்தை
மேனவில ஓடி
விதிர்விதிர்த்துத் - தானவருக்
கொட்டிக் குறளை
உரைத்த அயன்சிரத்தை
வெட்டிச் சிரித்த
விறல்போற்றி - மட்டித்து
வாலுகத்தால் நல்லிலிங்க
மாவகுத்து மற்றதன்மேல்
பாலுகுப்பக் கண்டு
பதைத்தோடி - மேலுதைத்தங் (20)
கோட்டியவன் தாதை
இருதாள் எறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு
வேறாக - நாட்டின்கண்
பொற்கோயில் உள்ளிருத்திப்
பூமாலை போனகமும்
நற்கோலம் ஈந்த
நலம்போற்றி - நிற்க
வலந்தருமால் நான்முகனும்
வானவரும் கூடி
அலந்தருமால் கொள்ள
அடர்க்கும் - சலந்தரனைச்
சக்கரத்தால் ஈர்ந்தரிதன்
தாமரைக்கண் சாத்துதலும்
மிக்கஅஃதீந்த
விறல்போற்றி - அக்கணமே
நக்கிருந்த நாமகளை
மூக்கரிந்து நால்வேதம்
தொக்கிருந்த வண்ணம்
துதிசெய்ய - மிக்கிருந்த (25)
அங்கைத் தலத்தே
அணிமானை ஆங்கணிந்த
செங்கைத் திறத்த
திறல்போற்றி - திங்களைத்
தேய்த்ததுவே செம்பொற்
செழுஞ்சடைமேல் சேர்வித்து
வாய்த்திமையோர் தம்மைஎல்லாம்
வான்சிறையில் - பாய்த்திப்
பிரமன் குறையிரப்பப்
பின்னும் அவர்க்கு
வரமன் றளித்தவலி
போற்றி - புரமெரித்த
அன்றுய்ந்த மூவர்க்
கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம்
நிகழ்வித்து - நன்று
நடைகாவல் மிக்க
அருள்கொடுத்துக் கோயில்
கடைகாவல் கொண்டவா
போற்றி - விடைகாவல் (30)
தானவர்கட் காற்றாது
தன்னடைந்த நன்மைவிறல்
வானவர்கள் வேண்ட
மயிலூரும் - கோனவனைக்
சேனா பதியாகச்
செம்பொன் முடிகவித்து
வானாள வைத்த
வரம்போற்றி - மேனாள்
அதிர்த்தெழுந்த அந்தகனை
அண்டரண்டம் உய்யக்
கொதித்தெழுந்த சூலத்தாற்
கோத்துத் -துதித்தங்
கவனிருக்கும் வண்ணம்
அருள்கொடுத்தங் கேழேழ்
பவமறுத்த பாவனைகள்
போற்றி - கவைமுகத்த
பொற்பா கரைப்பிளந்து
கூறிரண்டாப் போகட்டும்
எற்பா சறைப்போக
மேல்விலகி- நிற்பால (35)
மும்மதத்து வெண்கோட்டுக்
கார்நிறத்துப் பைந்தறுகண்
வெம்மதத்த வேகத்தால்
மிக்கோடி - விம்மி
அடர்த்திரைத்துப் பாயும்
அடுகளிற்றைப் போக
எடுத்துரித்துப் போர்த்த
இறைபோற்றி - தொடுத்தமைத்த
நாண்மாலை கொண்டணிந்த நால்வர்க்
கன் றால்நிழற்கீழ்
வாண்மாலை ஆகும்
வகையருளித் - தோள்மாலை
விட்டிலங்கத் தக்கிணமே
நோக்கி வியந்தகுணம்
எட்டிலங்க வைத்த
இறைபோற்றி - ஒட்டி
விசையன் விசையளப்பான்
வேடுருவம் ஆகி
அசைய உடல்திரியா
நின்று - வசையினால் (40)
பேசு பதப்பாற்
பிழைபொறுத்து மற்றவற்குப்
பாசுபதம் ஈந்த
பதம்போற்றி - நேசத்தால்
வாயில்நீர் கொண்டு
மகுடத் துமிழ்ந்திறைச்சி
ஆயசீர் போனகமா
அங்கமைத்துத் - தூயசீர்க்
கண்ணிடந்த கண்ணப்பர்
தம்மைமிகக் காதலித்து
விண்ணுலகம் ஈந்த
விறல்போற்றி - மண்ணின்மேல்
காளத்தி போற்றி
கயிலைமலை போற்றிஎன
நீளத்தி னால்நினைந்து
நிற்பார்கள் - தாளத்தோ
டெத்திசையும் பன்முரசம்
ஆர்த்திமையோர் போற்றிசைப்ப
அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. 1
திருச்சிற்றம்பலம்