அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சூதம் பயிலும் பொழில்
அம்பரில் தூய வாய்மை
வேதம் பயிலும் மறையாளர்
குலத்தின் மேலோர்
ஏதம் புரியும் எயில்
செற்றவர்க்கு அன்பர் வந்தால்
பாதம் பணிந்தார் அமுது
ஊட்டு(ம்) நற் பண்பின் மிக்கார். 1
யாழின் மொழியாள் தனிப்
பாகரைப் போற்றும் யாகம்
ஊழின் முறைமை வழுவாது
உலகங்கள் ஆன
ஏழும் உவப்பப் புரிந்து
இன்புறச் செய்த பேற்றால்
வாழும் திறம் ஈசர் மலர்க்
கழல் வாழ்த்தல் என்பார். 2
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு
அன்பர் என்றால்
அத் தன்மையர் தாம் நமை
ஆள்பவர் என்று கொள்வார்
சித்தம் தெளியச் சிவன்
அஞ்செழுத்து ஓதும் வாய்மை
நித்தம் நியமம் எனப்
போற்றும் நெறியில் நின்றார். 3
சீரும் திருவும் பொலியும்
திருவாரூர் எய்தி
ஆரம் திகழ் மார்பின்
அணுக்கவன் தொண்டர்க்கு அன்பால்
சாரும் பெரு நண்பு
சிறப்ப அடைந்து தங்கிப்
பாரும் விசும்பும் பணியும்
பதம் பற்றி உள்ளார். 4
துன்றும் புலன் ஐந்துடன்
ஆறு தொகுத்த குற்றம்
வென்று இங்கு இது நல்நெறி
சேரும் விளக்கம் என்றே
வன் தொண்டர் பாதம்
தொழுதான சிறப்பு வாய்ப்ப
என்றும் நிலவும் சிவலோ கத்தில்
இன்பம் உற்றார். 5
பணையும் தடமும் புடை
சூழும் ஒற்றியூரில் பாகத்தோர்
துணையும் தாமும் பிரியாதார்
தோழத்தம் பிரானாரை
இணையும் கொங்கைச் சங்கிலியார் எழில்
மென்பணை தோள் எய்துவிக்க
அணையும் ஒருவர் சரணமே
அரணமாக அடைந்தோமே 6
திருச்சிற்றம்பலம்