அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும்
தொன்மை மலை நாட்டுப்
பா வீற்றிருந்த பல்புகழில் பயிலும்
இயல்பில் பழம்பதி தான்
சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும்
நிலவிச் சேரர் குலக்
கோவீற்றிருந்து முறை புரியும்
குலக்கோ மூதூர் கொடுங்கோளூர். 1
காலை எழும் பல் கலையின் ஒலி
களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி
சோலை எழும் மென் சுரும்பின் ஒலி
துரகச் செருக்கால் சுலவும் ஒலி
பாலை விபஞ்சி பயிலும் ஒலி
பாடல் ஆடல் முழவின் ஒலி
வேலை ஒலியை விழுங்கிஎழ
விளங்கி ஓங்கும் வியப்பினதால். 2
மிக்க செல்வம் மனைகள் தொறும்
விளையும் இன்பம் விளங்குவன
பக்கம் நெருங்கும் சாலை தொறும்
பயில் சட்ட அறங்கள் பல்குவன
தக்க அணி கொள் மாடங்கள்
தொறும் சைவ மேன்மை சாற்றுவன
தொக்க வளங்கள் இடங்கள் தொறும்
அடங்க நிதியம் துவன்றுவன. 3
வேத நெறியின் முறை பிறழா
மிக்க ஒழுக்கம் தலை நின்ற
சாதி நான்கு நிலை தழைக்கும்
தன்மைத்து ஆகி தடமதில் சூழ்
சூத வகுள சரள நிரை துதையும்
சோலை வள நகர் தான்
கோதை அரசர் மகோதை எனக்
குலவும் பெயரும் உடைத்துலகில். 4
முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர்
அதன் கண் முறை மரபின்
அருதி அழியும் கலி நீக்கி அறம்
கொள் சைவத் திறம் தழைப்பத்
திருகு சின வெம் களியானைச்
சேரர் குலமும் உலகும் செய்
பெருகும் தவத்தால் அரன் அருளால்
பிறந்தார் பெருமாக் கோதையார். 5
திருமா நகரம் திரு அவதாரம்
செய் விழவின் சிறப்பினால்
வருமா களிகூர் நெய்யாடல் எடுப்ப
வான மலர் மாரி
தருமா விசும்பின் மிக நெருங்கத்
தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்
பெருமா நிலத்தில் எவ்வுயிரும்
பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால். 6
மண் மேல் சைவ நெறி வாழ
வளர்ந்து முன்னை வழி அன்பால்
கண் மேல் விளங்கு நெற்றியினார்
கழலே பேணூம் கருத்தினராய்
உள் மேவிய அன்பினர் ஆகி
உரிமை அரசர் தொழில் புரியார்
தெள் நீர் முடியார் திரு வஞ்சைக்
களத்தில் திருத்தொண்டே புரிவார். 7
உலகின் இயல்பும் அரசு இயல்பும்
உறுதி அல்ல என உணர்வார்
புலரி எழுந்து புனல் மூழ்கிப்
புனித வெண்ணீற்றினும் மூழ்கி
நிலவு திரு நந்தன வனத்து
நீடும் பணிகள் பல செய்து
மலரும் முகையும் கொணர்ந்து திருமாலை
சாத்த மகிழ்ந்து அமைத்து. 8
திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும்
இட்டுத் திரு மெழுக்கு
வரும் அன்புடன் இன்புறச் சாத்தி
மற்றும் உள்ள திருப்பணிகள்
பெருமை பிறங்கச் செய்து அமைத்துப்
பேணும் விருப்பில் திருப்பாட்டும்
ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப்
பணிந்தே ஒழுகும் நாள். 9
நீரின் மலிந்த கடல் அகழி
நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்
சீரின் மலிந்த திரு நகரம்
அதனில் செங்கோல் பொறையன் எனும்
காரின் மலிந்த கெடை நிழல் மேல்
கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்
தாரின் மலிந்த புயத்து அரசன்
தரணி நீத்துத் தவம் சார்ந்தான். 10
வந்த மரபின் அரசு அளிப்பான் வனம்
சார் தவத்தின் மருவிய பின்
சிந்தை மதி நூல் தேர் அமைச்சர்
சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி
முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு
முயல்வார் முதற்று ஆக
இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில்
அவர் பால் எய்தினார். 11
எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி
இருந்தண் சாரல் மலை நாட்டுச்
செய்தி முறைமையால் உரிமைச்
செங்கோல் அரசு புரிவதற்கு
மைதீர் நெறியின் முடி சூடி
அருளும் மரபால் வந்தது எனப்
பொய்தீர் வாய்மை மந்திரிகள்
போற்றிப் புகன்ற பொழுதின்கண். 12
இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு
இடையூறாக இவர் மொழிந்தார்
அன்பு நிலைமை வழுவாமை அரசு
புரக்கும் அருள் உண்டேல்
என்பும் அரவும் புனைந்தாரை இடை
பெற்று அறிவேன் எனப் புக்கு
முன்பு தொழுது விண்ணப்பம்
செய்தார் முதல்வர் அருளினால். 13
மேவும் உரிமை அரசு அளித்தே
விரும்பு காதல் வழிபாடும்
யாவும் யாரும் கழறினவும் அறியும்
உணர்வும் ஈறு இல்லாத்
தாவில் விறலும் தண்டாத கொடையும்
படை வாகனம் முதலாம்
காவல் மன்னர்க்கு உரியனவும்
எல்லாம் கைவந்துறப் பெற்றார். 14
ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து
இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்
ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு
எனினும் உடையான் அருளாலே
மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும்
அமைச்சர்க்கு உடன் படலும்
மான அமைச்சர் தாம் பணிந்து அவ்
வினைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார். 15
உரிமை நாளில் ஓரை நலன்
எய்த மிக்க உபகரணம்
பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம்
பிறங்க மங்கலம் செய்து
இருமை உலகுக்கு ஒருமை முடி
கவித்தார் எல்லா உயிரும் மகிழ்
தரும நிலைமை அறிந்து புவி
தாங்கும் கழறிற் அறிவார் தாம். 16
தம்பிரானார் கோயில் வலம் கொண்டு
திருமுன் தாழ்ந்து எழுந்து
கும்ப யானை மேல் கொண்டு
கொற்றக் குடையும் சாமரையும்
நம்பும் உரிமை யவர் தாங்க நலம்
கொள் நகர் சூழ் வலம் கொள்வார்
மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர்
வண்ணான் முன்னே வரக் கண்டார். 17
மழையில் கரைந்து அங்கு உவர்
ஊறி மேனி வெளுத்த வடிவினால்
உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார்
வேடம் என்று உணர்ந்தே
இழையிற் சிறந்த ஓடை நுதல்
யானைக் கழுத்தின் நின்று இழிந்து
விழைவில் பெருகும் காதலினால் விரைந்து
சென்று கை தொழுதார். 18
சேரர் பெருமான் தொழக் கண்டு
சிந்தை கலங்கி முன் வணங்கி
யார் என்று அடியேனைக் கொண்டது
அடி வண்ணான் எனச்
சேரர் பிரானும் அடிச்சேரன்
அடியேன் என்று திருநீற்றின்
வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது
ஏகும் என மொழிந்தார். 19
மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு
மதி நீடு அமைச்சர் எலாம்
சென்னி மிசை அஞ்சலி செய்து
போற்றச் சினமால் களிறு ஏறி
மின்னு மணிப் பூண் கொடி மாட
வீதி மூதூர் வலம் கொண்டு
பொன்னின் மணி மாளிகை வாயில்
புக்கார் புனை மங்கலம் பொலிய. 20
யானை மிசை நின்று இழிந்தருளி
இலங்கு மணி மண்டபத்தின் கண்
மேன்மை அரிஆசனத்து ஏறி விளங்கும்
கொற்றக் குடை நிழற்றப்
பானல் விழியார் சாமரை முன்
பணி மாறப்பன் மலர் தூவி
மான அரசர் போற்றிட
வீற்றிருந்தார் மன்னர் பெருமானார். 21
உலகு புரக்கும் கொடைவளவர்
உரிமைச் செழியருடன் கூட
நிலவு பெருமுக் கோக்களாய் நீதி
மனுநூல் நெறி நடத்தி
அலகில் அரசர் திறை கொணர
அகத்தும் புறத்தும் பகை அறுத்து
மலரும் திரு நீற்று ஒளிவளர
மறைகள் வளர மண் அளிப்பார். 22
நீடும் உரிமைப் பேரரசால் நிகழும்
பயனும் நிறை தவமும்
தேடும் பொருளும் பெருந் துணையும்
தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்
ஆடும் கழலே எனத் தெளிந்த
அறிவால் எடுத்த திருப்பாதம்
கூடும் அன்பில் அர்ச்சனை மேற்
கொண்டார் சேரர் குலப் பெருமாள். 23
வாசத் திருமஞ்சனம் பள்ளித்
தாமம் சாந்தம் மணித் தூபம்
தேசில் பெருகும் செழும் தீபம்
முதலாயினவும் திரு அமுதும்
ஈசர்க்கு ஏற்ற பரிசினால்
அர்ச்சித்து அருள எந்நாளும்
பூசைக்கு அமர்ந்த பெருங் கூத்தர்
பொற்பார் சிலம்பின் ஒலி அளித்தார். 24
நம்பர் தாளின் வழிபாட்டால்
நாளும் இன்புற்று அமர்கின்றார்
இம்பர் உலகில் இரவலர்க்கும்
வறியோர் எவர்க்கும் ஈகையினால்
செம் பொன் மழையாம் எனப்
பொழிந்து திருந்து வென்றியுடன் பொருந்தி
உம்பர் போற்றத் தம் பெருமாற்கு
உரிய வேள்வி பல செய்தார். 25
இன்ன வண்ணம் இவர் ஓழுக
எழில் கொள் பாண்டி நன்னாட்டு
மன்னும் மதுரைத் திருவால வாயில்
இறைவர் வரும் அன்பால்
பன்னும் இசைப் பாடலில்
பரவும் பாணனார் பத்திரனார்க்கு
நன்மை நீடு பெரும் செல்வம்
நல்க வேண்டி அருள் புரிவார். 26
இரவு கனவில் எழுந்து அருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவும் சேரன் தனக்கு உனக்குப்
பைம் பொன் காணம் பட்டாடை
விரவு கதிர் செய் நவமணிப்
பூண் வேண்டிற்று எல்லாம் குறைவின்றித்
தர நம் ஓலை தருகின்றோம்
தாழாது ஏகி வருக என்று. 27
அதிர் கழல் உதியர் வேந்தற்கு
அருள் செய்த பெருமை யாலே
எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற
இருநிதி கொடுக்க என்று
மதிமலி புரிசை என்னும்
வாசகம் வரைந்த வாய்மைக்
கதிர் ஒளி விரிந்த தோட்டுத்
திருமுகம் கொடுத்தார் காண. 28
சங்கப் புலவர் திருமுகந்தந்
தலைமேல் கொண்டு பத்திரனார்
அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை
நாடு அணைய வந்து எய்தித்
துங்கப் பரிசை கொடுங் கோளூர்
தன்னில் புகுந்து துன்னு கொடி
மங்குல் தொடக்கும் மாளிகை முன்
வந்து மன்னர்க்கு அறிவித்தார். 29
கேட்ட பொழுதே கை தலைமேல்
கொண்டு கிளர்ந்த பேரன்பால்
நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய
எழுந்து நடுக்கம் மிக எய்தி
ஓட்டத் தம் பொன் மாளிகையின்
புறத்தில் உருகும் சிந்தையுடன்
பாட்டின் தலைமைப் பாணனார்
பாதம் பலகால் பணிகின்றார். 30
அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு
அணைந்தது என்ன அவர் தாமும்
கொடிசேர் விடையார் திருமுகம்
கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்
முடிமேல் கொண்டு கூத்து ஆடி
மொழியும் குழறிப் பொழி கண்ணீர்
பொடியார் மார்பில் பரந்து விழப்
புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார். 31
பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால்
தொழுது படி எடுக்க
உரிய வகையில் எடுத்து ஓதி
உம்பர் பெருமான் அருள் போற்றி
விரிபொன் சுடர் மாளிகை புக்கு
மேவும் உரிமைச் சுற்றம் எலாம்
பெரிது விரைவில் கொடு போந்து
பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார். 32
நங்கள் குல மாளிகை இதனுள்
நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு
வகையில் பொலிந்த பண்டாரம்
அம்கண் ஒன்றும் ஒழியாமை
அடையக் கண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய
ஏற்றிக் கெணரும் என. 33
சேரர் பெருமான் அருள் செய்யத்
திருந்து மதிநூல் மந்திரிகள்
சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள்
எல்லாம் நிறைந்த பெரும்
சீர் கொள் நிதியம் எண்ணிறந்த
எல்லாம் பொதி செய்தாளின் மேல்
பாரில் நெருங்க மிசை ஏற்றிக்
கொண்டு வந்து பணிந்தார்கள். 34
பரந்த நிதியின் பரப்பு
எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வேறு வேறு
நிரைத்துக் கட்டி மற்று இவையும்
உரம் தங்கிய வெம் கரிபரிகள்
முதலாம் உயிர் உள்ளன தனமும்
புரந்த அரசும் கொள்ளும் என
மொழிந்தார் பொறையர் புரவலனார். 35
பாணனார் பத்திரனாரும் பைம்பொன்
மௌலிச் சேரலனார்
காணக் கொடுத்த நிதி எல்லாம்
கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்
பேண எனக்கு வேண்டுவன அடியேன்
கொள்ள பிஞ்ஞகனார் ஆணை
அரசும் அரசு உறுப்பும் கைக்
கொண்டு அருளும் என இறைஞ்ச. 36
இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு
அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்
நிறையும் நிதியின் பரப்பு எல்லாம்
நிலத்தை நெளிய உடன் கொண்டே
உறை மும்மதத்துக் களிறு பரி
உள் இட்டன வேண்டுவ கொண்டோர்
பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர். 37
பண்பு பெருகும் பெருமாளும்
பாணனார் பத்திரனார் பின்
கண்கள் பொழிந்த காதல் நீர்
வழியக் கையால் தொழுது அணைய
நண்பு சிறக்கும் அவர் தம்மை
நகரின் புறத்து விடை கொண்டு
திண் பொற் புரிசைத் திரு மதுரை
புக்கார் திருந்தும் இசைப் பாணர். 38
வான வரம்பர் குலம் பெருக்கும்
மன்னனாரும் மறித்து ஏகிக்
கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி
முடியார் அடிமை கொண்டு அருளும்
பான்மை அருளின் பெருமையினை நினைந்து
பலகால் பணிந்து ஏத்தி
மேன்மை விளங்கு மாளிகை
மண்டபத்துள் அரசு வீற்றிருந்தார். 39
அளவில் பெருமை அகில யோனிகளும்
கழறிற்று அறிந்து அவற்றின்
உளம் மன்னிய மெய்யுறு துயரம்
ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்
களவு கொலைகள் முதலான கடிந்து
கழற்றிற்று அறிவார் தாம்
வளவர் பெருமானுடன் செழியர் மகிழும்
கலப்பில் மகிழும் நாள். 40
வானக் கங்கை நதி பொதிந்த
மல்கு கடையார் வழிபாட்டுத்
தூ நல் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு
புரிவார் தமக்கு ஒரு நாள்
தேன் நக்கலர்ந்த கொன்றையினார் ஆடல்
சிலம்பின் ஒலி முன் போல்
மானப் பூசை முடிவின்கண்
கேளாது ஒழிய மதிமயங்கி. 41
பூசை கடிது முடித்து அடியேன்
என்னோ பிழைத்தது எனப் பொருமி
ஆசை உடம்பால் மற்று இனி வேறு
அடையும் இன்பம் யாது என்று
தேசின் விளங்கும் உடைவாளை
உருவித் திருமார்பினில் நாட்ட
ஈசர் விரைந்து திருச்சிலம்பின்
ஓசை மிகவும் இசைப்பித்தார். 42
ஆடல் சிலம்பின் ஒலிகேளா
உடைவாள் அகற்றி அங்கைமலர்
கூடத் தலைமேல் குவித்து அருளிக்
கொண்டு விழுந்து தொழுது எழுந்து
நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால்
பிரமன் அருமறை முன்
தேடற்கு அரியாய் திருவருள் முன்
செய்யாதொழிந்தது என் என்றார். 43
என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர்
நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றினிடை நம் கூத்தாடல் வந்து
வணங்கி வன் தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
உரை சேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்
என்றார் அவரை நினைப்பிப்பார். 44
என்னே அடியார்க்கு இவர் அருளும்
கருணை இருந்தவாறு என்று
பொன் நேர் சடையார் திருநடம்
செய் புலியூர் பொன்னம்பலம் இறைஞ்சித்
தன் நேர் இல்லா வன்தொண்டர்
தமையும் காண்பன் என விரும்பி
நன்னீர் நாட்டுக் செல நயந்தார்
நாமச் சேரர் கோமானார். 45
பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும்
அமைச்சர்க்கு அஃது இயம்பி
நல் நாள் கொண்டு பெரும் பயணம்
எழுக என்று நலம் சாற்ற
மின்னார் அயில் வேல் குல மறவர்
வென்றி நிலவும் சிலை வீரர்
அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து
அணைந்தார் வஞ்சி அகநகர்வாய். 46
இட்ட நல்நாள் ஓரையினில்
இறைவர் திருவஞ்சைக் களத்து
மட்டுவிரிபூங் கொன்றையினார் தம்மை
வலம் கொண்டு இறைஞ்சிப் போய்
பட்டநுதல் வெங் களியானைப்
பிடர்மேல் கொண்டு பனி மதியம்
தொட்ட கொடிமாளிகை மூதூர்
கடந்தார் உதியர் தோன்றலார். 47
யானை அணிகள் பரந்து வழி
எங்கும் நிரந்து செல்லுவன
மான மலை நாட்டினில் மலிந்த
மலைகள் உடன் போதுவ போன்ற
சேனைவீரர் புடைபரந்து செல்வது
அங்கண் மலை சூழ்ந்த
கானம் அடைய உடன் படர்வ
போலும் காட்சி மேவினதால். 48
புரவித் திரள்கள் ஆயோகப்
பொலிவின் அசைவில் போதுவன
அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து
மேல் மேல் அடர்வன போல்
விரவிப் பரந்து சென்றனவால்
மிசையும் அவலும் ஒன்றாக
நிரவிப் பரந்த நெடுஞ் சேனை
நேமி நெளியச் சென்றனவால். 49
அந் நாட்டு எல்லை கடந்து அணைய
அமைச்சர்க்கு எல்லாம் விடையருளி
மின்னார் மணிப்பூண் மன்னவனார்
வேண்டுவாரை உடன்கொண்டு
கொன்னார் அயில் வேல் மறவர்
பயில் கொங்கர் நாடு கடந்தருளி
பொன் நாட்டவரும் அணைந்து ஆடும்
பொன்னி நீர் நாட்டிடைப் போவார். 50
சென்ற திசையில் சிவன்
அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்
குன்றும் கானும் உடைக் குறும்பர்
இடங்கள் தோறும் குறைவறுப்பத்
துன்று முரம்பும் கான் ஆறும்
துறுகற் சுரமும் பல கடந்து
வென்றி விடையாரிடம் பலவும்
மேவிப் பணிந்து செல்கின்றார். 51
பொருவில் பொன்னித் திருநதியின் கரை
வந்து எய்திப் புனித நீர்
மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி
மருங்கு வடபால் கரை ஏறித்
திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன்
மன்றுள் நடம் போற்ற
உருகும் மனத்தினுடன் சென்றார் ஒழியா
அன்பின் வழி வந்தார். 52
வந்து தில்லை மூதூரின்
எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்
அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த
போதில் எதிர் வணங்கிச்
சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித்
தலைமேல் கரம் முகிழ்ப்பச்
சிந்தை மகிழ எழு நிலைக்
கோபுரத்தை அணைந்தார் சேரலனார். 53
நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின்
முன்னர் நிலத்து இறைஞ்சி
மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து
மணி மாளிகை வலம் கொண்டு
உலகு விளக்கும் திருப் பேரம்பலத்தை
வணங்கி உள் அணைந்தார்
அலகில் அண்டம் அளித்தவர்
நின்றாடும் திருச்சிற்றம்பலம் முன். 54
அளவில் இன்பப் பெரும் கூத்தர்
ஆட எடுத்த கழல் காட்ட
உளமும் புலனும் ஒருவழிச் சென்று
உருகப் போற்றி உய்கின்றார்
களனில் விடம் வைத்து அளித்த அமுது
அன்றி மன்றில் கழல் வைத்து
வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு
அளித்த கருணை வழுத்தினார். 55
ஆரா ஆசை ஆனந்தக் கடலுள்
திளைத்தே அமர்ந்து அருளால்
சீரார் வண்ணப் பொன் வண்ணத்
திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்
பாரா தரிக்க எடுத்து ஏத்திப்
பணிந்தார் பருவ மழை பொழியும்
காரால் நிகர்க்க அரிய கொடைக்
கையார் கழற்றிவார் தாம். 56
தம்பிரானார்க்கு எதிர் நின்று
தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க
உம்பர் வாழ நடம் ஆடும்
ஒருவர் அதற்குப் பரிசில் எனச்
செம்பொன் மணி மன்றினில் எடுத்த
செய்ய பாதத் திருச்சிலம்பின்
இம்பர் நீட எழுந்த
ஒலிதாமும் எதிரே கேட்பித்தார். 57
ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார்
அளவில் இன்ப ஆனந்தம்
கூடப் பெற்ற பெரும் பேற்றின்
கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்
நீடப் பணியும் காலம் எலாம்
நின்று தொழுது புறம் போந்து
மாடத் திரு மாளிகை வீதி
வணங்கிப் புறத்து வைகினார். 58
பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார்
பைம் பொன் அம்பலத்துள்
அரவும் புனலும் சடை ஆட
ஆடுவார் கூத்து ஆராமை
விரவும் காதல் மிக்கு ஓங்க
வேதம் படியும் திருப்படிக்கீழ்
இரவும் பகலும் பணிந்து ஏத்தி
இன்பம் சிறக்கும் அந் நாளில். 59
ஆடும் பெருமான் பாடல் கேட்டருளித்
தாழ்த்த படி தமக்குக்
கூடும் பரிசால் முன்பு அருளிச்
செய்த நாவலூர்க் கோவை
நீடும் பெரும் காதலில் காண
நிறைந்த நினைவு நிரம்பாமல்
தேடும் பாதர் அருளினால் திருவாரூர்
மேல் செல எழுந்தார். 60
அறிவின் எல்லை ஆய திருத்தில்லை
எல்லை அமர்ந்து இறைஞ்சிப்
பிறிவிலாத திருவடியைப் பெருகும்
உள்ளத்தினில் பெற்று
செறியும் ஞான போனகர் வந்து
அருளும் புகலி சென்று இறைஞ்சி
மறி சேர் கரத்தார் கோயில் பல
வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார். 61
வழியில் குழியில் செழுவயலின் மதகின்
மலர் வாவிகளின் மடுச்
சுழியில் தரளம் திரை சொரியும்
துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி
விழியில் திகழும் திருநுதலார் விரும்பும்
இடங்கள் இறைஞ்சி உகக்
கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளாக்
கழனி ஆரூர் கண்ணுற்றார். 62
நம்பி தாமும் அந் நாள்
போய் நாகைக் காரோணம் பாடி
அம் பொன் மணிப்பூண் நவமணிகள்
ஆடை சாந்தம் அடல் பரிமா
பைம் பொன் சுரிகை முதலான
பெற்று மற்றும் பல பதியில்
தம்பிரானைப் பணிந்து ஏத்தித்
திருவாரூரில் சார்ந்து இருந்தார். 63
வந்து சேரர் பெருமானார்
மன்னும் திருவாரூர் எய்த
அந்தணாளர் பெருமானும் அரசர்
பெருமான் வரப்பெற்றுச்
சிந்தை மகிழ எதிர் கொண்டு
சென்று கிடைத்தார் சேரலனார்
சந்த விரைத்தார் வன்தொண்டர்
முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார். 64
முன்பு பணிந்த பெருமாளைத் தாமும்
பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருகத் தழுவ
விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ
இன்ப வெள்ளத்திடை நீந்தி
ஏற மாட்டாதலைவார் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி
உடம்பும் ஒன்றாம் என இசைந்தார். 65
ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர்
அளவில் மகிழ்வு எய்த
மானச் சேரர் பெருமானார்
தாமும் வன்தொண்டரும் கலந்த
பான்மை நண்பால் சேரமான் தோழர்
என்று பார் பரவும்
மேன்மை நாமம் முனைப்பாடி
வேந்தர்க்கு ஆகி விளங்கியதால். 66
ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால்
இன்ப மொழி உரைத்து
மருவ இனியார் பால் செய்வது
என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்
பருவ மழைச் செங்கை பற்றிக்
கொண்டு பரமர் தாள் பணியத்
தெருவு நீங்கிக் கோயிலினுள்
புகுந்தார் சேரமான் தோழர். 67
சென்று தேவாசிரியனை முன் இறைஞ்சித்
திருமாளிகை வலம் கொண்டு
ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார்
உடைய நம்பி முன் ஆக
நின்று தொழுது கண் அருவி
வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே
என்றும் இனிய தம் பெருமான்
பாதம் இறைஞ்சி ஏத்தினார். 68
தேவர் முனிவர் வந்து இறைஞ்சும்
தெய்வப் பெருமாள் கழல் வணங்கி
மூவர் தமக்கு முதல் ஆகும்
அவரைத் திருமும் மணிக் கோவை
நாவலூரர் தம் முன்பு
நன்மை விளங்கக் கேட்பித்தார்
தாவில் பெருமைச் சேரலனார்
தம்பிரானார் தாம் கொண்டார். 69
அங்கண் அருள் பெற்று எழுவாரைக்
கொண்டு புறம் போந்து ஆரூரர்
நங்கை பரவையார் திருமாளிகையில்
நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கு நிறை குடமும்
பூ மாலைகளும் புகை அகிலும்
எங்கும் மடவார் எடுத்து ஏத்த
அணைந்து தாமும் எதிர் கொண்டார். 70
சோதி மணி மாளிகையின் கண்
சுடரும் பசும் பொற்கால் அமளி
மீது பெருமாள் தமை இருத்தி
நம்பி மேவி உடன் இருப்பக்
கோதில் குணத்துப் பரவையார்
கொழுநனார்க்கும் தோழர்க்கும்
நீதி வழுவா ஒழுக்கத்து நிறை
பூசனைகள் முறை அளித்தார். 71
தாண்டு புரவிச் சேரர் குலப்
பெருமாள் தமக்குத் திரு அமுது
தூண்டும் சோதி விளக்கு அனையார்
அமைக்கத் துணைவர் சொல்லுதலும்
வேண்டும் பரிசு வெவ்வேறு
விதத்துக் கறியும் போனகமும்
ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு
எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார். 72
அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல்
அடியார்க்கு ஏற்கும் படியாக
விரவிப் பெருகும் அன்பினுடன்
விரும்பும் அமுது சமைத்ததன்பின்
புரசைக் களிற்றுச் சேரலனார் புடை
சூழ்ந்து அவரோடு அமுது செயப்
பரவைப் பிறந்த திருவனைய
பரவையார் வந்து அறிவித்தார். 73
சேரர் பெருமான் எழுந்தருளி
அமுத செய்யச் செய்தவத்தால்
தாரின் மலிபூம் குழல் மடவாய்
தாழாது அமுது செய்வி எனப்
பாரின் மலிசீர் வன்தொண்டர்
அருளிச் செய்யப் பரிகலங்கள்
ஏரின் விளங்கத் திருத்திக்கால்
இரண்டில் படியா ஏற்றுதலும். 74
ஆண்ட நம்பி பெருமாளை
உடனே அமுது செய்தருள
வேண்டும் என்ன ஆங்கு அவரும்
விரைந்து வணங்கி வெருவுறலும்
நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும்
நேரே குறை கொள்ள
ஈண்ட அமுது செய்வதனுக்கு
இசைந்தார் பொறையர்க்கு இறையவனார். 75
ஒக்க அமுது செய்தருள
உயர்ந்த தவத்துப் பரவையார்
மிக்க விருப்பால் அமுது
செய்வித்தருளி மேவும் பரிசனங்கள்
தக்க வகையால் அறுசுவையும் தாம்
வேண்டியவாறு இனிது அருந்தத்
தொக்க மகிழ்ச்சி களி சிறப்பத்
தூய விருந்தின் கடன் முடித்தார். 76
பனிநீர் விரவு சந்தனத்தின்
பசுங்கர்ப்பூர விரைக் கலவை
வனிதையவர்கள் சமைத்து எடுப்பக்
கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்
புனித நறும் பூ மாலைகளும்
போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்
இனிய பஞ்ச வாசமுடன்
அடைக்காய் அமுதும் ஏந்தினார். 77
ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த
எல்லாம் அமர்ந்து அருளித்
தூய நீறு தங்கள் திருமுடியில்
வாங்கித் தொழுது அணிந்து
மேய விருப்பினுடன் இருப்பக்
கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்
சேய நீர்மை அடைந்தாராய் நம்பி
செம்பொற் கழல் பணிந்தார். 78
மலை நாட்டு அரசர் பெருமானார்
வணங்க வணங்கி எதிர் தழுவிக்
கலை நாள் பெருகு மதி
முகத்துப் பரவையார் தம் கணவனார்
சிலை நாட்டிய வெல் கொடியாரைச்
சேரத் தந்தார் எனக் கங்கை
அலை நாள் கொன்றை முடிச் சடையார்
அருளே போற்றி உடன் அமர்ந்தார். 79
செல்வத் திருவாரூர் மேவும் செம்பொற்
புற்றில் இனிது அமர்ந்த
வில் வெற்பு உடையார் கழல்
வணங்கி வீதி விடங்கப் பெருமானை
மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து
நாளும் மனம் மகிழ்ந்து
சொல் வித்தகர் தாம் இருவர்களும்
தொடர்ந்த காதலுடன் சிறந்தார். 80
இவ்வாறு ஒழுகும் நாளின் கண்
இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்
மைவாழ் களத்து மறையவனார் மருவும்
இடங்கள் பல வணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமையால் நினைந்தார். 81
சேரர் பிரானும் ஆரூரர்
தம்மைப் பிரியாச் சிறப்பாலும்
வாரம் பெருகத் தமக்கு அன்று
மதுரை ஆலவாய் அமர்ந்த
வீரர் அளித்த திருமுகத்தால்
விரும்பும் அன்பின் வணங்குதற்குச்
சார எழுந்த குறிப்பாலும் தாமும்
உடனே செலத் துணிந்தார். 82
இருவர் திரு உள்ளமும் இசைந்த
பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி
உடன்பாட்டு அருளால் போந்தருளி
மருவும் உரிமைப் பெரும் சுற்றம்
வரம்பில் பணிகள் வாகனங்கள்
பொருவில் பண்டாரங் கொண்டு
போதுவார்கள் உடன் போத. 83
சேவித்து அணையும் பரிசனங்கள்
சூழத் திருவாரூர் இறைஞ்சிக்
காவில் பயிலும் புறம்பணையைக்
கடந்து போந்து கீழ்வேளூர்
மேவிப் பரமர் கழல் வணங்கிப்
போந்து வேலைக் கழிக் கானல்
பூவில் திகழும் பொழில் நாகை
புகுந்து காரோணம் பணிந்தார். 84
திருக்காரோணச் சிவக் கொழுந்தைச்
சென்று பணிந்து சிந்தையினை
உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச்
சில நாள் உறைந்து போய்
பெருக்காறு உலவு சடைமுடியார் இடங்கள்
பிறவும் பணிந்து ஏத்தி
அருள் காரணர் தம் திருமறைக்காடு
அணைந்தார் சேரர் ஆரூரர். 85
முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர்
கோயில் சென்று இறைஞ்சிச்
செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும்
புகலிச் சிவக் கன்றும்
அந்நேர் திறக்க அடைக்க
எனப்பாடும் திருவாயிலை அணைந்து
நன்னீர் பொழியும் விழியினராய் நாயன்
மாரை நினைந்து இறைஞ்சி. 86
நிறைந்த மறைகள் அர்ச்சித்த
நீடு மறைக்காட்டு அருமணியை
இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து
போற்றி யாழைப் பழித்து என்னும்
அறைந்த பதிகத் தமிழ் மாலை
நம்பி சாத்த அருட்சேரர்
சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித்
திளைத்து எழுந்தார். 87
எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர்
பெருந் தொண்டரும் சில நாள்
செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து
தென்பால் திரைக் கடல் நஞ்சு
அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி
இறைஞ்சி அவிர் மதியக்
கொழுந்து வளர் செம் கடைக்
குழகர் கோடிக் கோயில் குறுகினார். 88
கோடிக் குழகர் கோயில் அயல்
குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்
நாடிக் காணாது உள்புக்கு நம்பர்
பாதம் தொழுது உள்ளம்
வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று
எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்
பாடிக் காடு காள் புணர்ந்த
பரிசும் பதிகத்திடை வைத்தார். 89
அங்கு வைகிப் பணிந்து அருளால்
போவார் அகன் கோணாட்டு அரனார்
தங்கும் இடங்கள் வணங்கிப் போய்
பாண்டி நாடுதனைச் சார்ந்து
திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி
போந்து சேண் விளங்கும்
மங்குல் தவழும் மணிமாட மதுரை
மூதூர் வந்து அணைந்தார். 90
சேரமான் தோழரும் அச்
சேரர் பிரானும் பணிப்பூண்
ஆரமார்பரை மதுரை
ஆலவாயினில் வணங்க
வாரமா வந்து அணைய
வழுதியார் மனக்காதல்
கூர மாநகர் கோடித்து எதிர்
கொண்டு கொடு புக்கார். 91
தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே
தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்
அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி
மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார். 92
திரு ஆலவாய் அமர்ந்த
செஞ்சடையார் கோயில் வலம்
வருவார் முன் வீழ்ந்து
இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு
தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து
எழுந்து வாழ்ந்த தமிழ்ப்
பெரு வாய்மை மலர் புனைந்து
பெரு மகிழ்ச்சி பிறங்கினார். 93
படியேறு புகழ்ச் சேரர் பெருமானும்
பார் மிசை வீழ்ந்து
அடியேனைப் பொருளாக அளித்த
திருமுகக் கருணை
முடிவேது என்று அறிந்திலேன்
என மொழிகள் தடுமாறக்
கடியேறு கொன்றையார் முன்
பரவிக் களி கூர்ந்தார். 94
செம்பியனார் உடன் செழியர் தாம்
பணிந்து சேரர் உடன்
நம்பியும் முன் புறத்து அணைய
நண்ணிய பேர் உவகையால்
உம்பர்பிரான் கோயிலின் இன்று
உடன் கொண்டுபோய் இருவர்க்கும்
பைம்பொன் மணி மாளிகையில்
குறை அறுத்தார் பஞ்சவனார். 95
உளம் மகிழக் கும்பிட்டு அங்கு
உறையும் நாள் உதியர் உடன்
கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர்
தாம் இருந்த இடம் கெழுமி
வளவனார் மீனவனார் வளம்
பெருக மற்றவரோடு
அளவளாவிய விருப்பால் அமர்ந்து
கலந்து இனிது இருந்தார். 96
அந் நாளில் மதுரை நகர்
மருங்கரனார் அமர் பதிகள்
பொன்னாரம் அணி மார்பில்
புரவலர் மூவரும் போதச்
செந்நாவின் முனைப்பாடித் திருநாடர்
சென்று இறைஞ்சிச்
சொன்மாலைகளும் சாத்தித் தொழத்
திருப்பூவணத்து அணைந்தார். 97
நீடு திருப் பூவணத்துக்
அணித்தாக நேர் செல்ல
மாடு வரும் திருத்தொண்டர்
மன்னிய அப் பதிகாட்டத்
தேடு மறைக்கு அரியாரைத்
திருவுடையார் என்று எடுத்துப்
பாடி இசையில் பூவணம் மீதோ
என்று பணிந்து அணைவார். 98
சென்று திருப் பூவணத்துத் தேவர்
பிரான் மகிழ் கோயில்
முன்றில் வலம் கொண்டு இறைவர்
முன் வீழ்ந்து பணிந்து எழுந்து
நின்று பரவிப்பாடி நேர்
நீங்கி உடன் பணிந்த
வென்றி முடி வேந்தருடன்
போந்து அங்கண் மேவினார். 99
அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச்
சில நாளில் ஆரூரர்
முப்பெரும் வேந்தர்களோடு முதன்
மதுரை நகர் எய்தி
மெய்ப் பரிவில் திருவால வாயுடையார்
விரை மலர்த்தாள்
எப்பொழுதும் பணிந்து ஏத்தி
இன்புற்று அங்கு அமர்கின்றார். 100
செஞ்சடையார் திருவாப்பனூர்
திருவேடகம் முதலாம்
நஞ்சு அணியும் கண்டர் அவர்
நயந்த பதி நண்ணியே
எஞ்சலிலாக் காதலினால் இனிது
இறைஞ்சி மீண்டு அணைந்து
மஞ்சணையும் மதில் மதுரை
மாநகரில் மகிழ்ந்து இருந்தார். 101
பரமர் திருப்பரம் குன்றில்
சென்று பார்த்திபர் ஓடும்
புரம் எரித்தார் கோயில் வலம்
கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்
சிரமலிமாலைச் சடையார்
திருவடிக்கீழ் ஆட்செய்யும்
அருமை நினைந்து அஞ்சுதும்
என்று ஆரூரர் பாடுவார். 102
கோத்திட்டை என்று எடுத்துக்
கோதில் திருப்பதிக இசை
மூர்த்தியார் தமை வணங்கி
முக்கோக்கள் உடன் முன்பே
ஏத்திய வண் தமிழ் மாலை
இன் இசைப் பாடிப் பரவி
சாத்தினார் சங்கரனார்
தங்கு திருப்பரங்குன்றில். 103
இறைவர் திருத்தொண்டு புரி
அருமையினை இரு நிலத்து
முறை புரியும் முதல் வேந்தர்
மூவர்களும் கேட்டு அஞ்சி
மறை முந் நூல் மணி மார்பின்
வன்தொண்டர் தமைப் பணிந்தார்
நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர்
பதி தொழ நினைந்தார். 104
அந் நாட்டுத் திருப்பதிகள்
பலவும் அணைந்து இறைஞ்சமலை
நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம்
எழுந்து அருள
மின்னாட்டும் பல் மணிப்பூண்
வேந்தர் இருவரும் மீள்வார்
தென்னாட்டு வேண்டுவன செய்து
அமைப்பார் தமை விடுத்தார். 105
இரு பெரு வேந்தரும் இயல்பின்
மீண்டதற் பின் எழுந்து அருளும்
பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச்
சேரர் உடன் புனிதர்
மருவிய தானம் பலவும்
பணிந்து போய் மலைச்சாரல்
குருமணிகள் வெயில் எறிக்கும்
குற்றாலம் சென்று அடைந்தார். 106
குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர்
குரை கழல் வணங்கிச்
சொல்தாம மலர் புனைந்து குறும்
பலாத் தொழுது இப்பால்
முற்றா வெண்மதி முடியார்
பதிபணிந்து மூவெயில்கள்
செற்றார் மன்னிய செல்வத்
திருநெல் வேலியை அணைந்தார். 107
நெல்வேலி நீற்று அழகர் தமைப்
பணிந்து பாடி நிகழ்
பல்வேறு பதி பிறவும் பணிந்து
அன்பால் வந்து அணைந்தார்
வில்வேடராய் வென்றி விசயன்
எதிர் பன்றிப் பின்
செல் வேத முதல்வரமர்
திரு இராமேச்சரத்து. 108
மன்னும் இராமேச்சரத்து மாமணியை
முன் வணங்கிப்
பன்னும் தமிழ்த் தொடைசாத்திப்
பயில்கின்றார் பாம்பு அணிந்த
சென்னியர் மாதோட்டத்துத்
திருக்கேதீச்சரம் சார்ந்த
சொல்மலர் மாலைகள் சாத்தித்
தூரத்தே தொழுது அமர்ந்தார். 109
திரு இராமேச்சரத்துச் செழும்
பவளச் சுடர்க் கொழுந்தைப்
பரிவினால் தொழுது அகன்று
பரமர் பிற பணிந்து
பெருவிமானத்து இமையோர் வணங்கும்
பெரும் திருச்சுழியல்
மருவினார் வன்தொண்டர்
மலை வேந்தருடன் கூட. 110
திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன்
மலைச் சிலையாரைக்
கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக்
கடல் விடத்தின்
இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி
எதிர் இதழி மலர்ப்
பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர்
எனும் பா மலர் புனைந்தார். 111
அங்கணரைப் பணிந்து உறையும்
ஆரூரர்க்கு அவ்வூரில்
கங்குல் இடைக் கனவின்
கண் காளையாந் திருவடிவால்
செங்கையினில் பொன் செண்டும்
திருமுடியில் சுழியம் உடன்
எங்கும் இலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி. 112
கானப் பேர் யாம் இருப்பது எனக்
கழறிக் கங்கை எனும்
வானப் பேராறும் உலவும் மா
முடியார் தாம் அகல
ஞானப் பேராளர் உணர்ந்து
அதிசயித்து நாகம் உடன்
ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள்
இருந்த பரிசு என்பார். 113
கண்டு அருளும் படி
கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்
புண்டரிகப் புனல் சுழியல் புனிதர்
கழல் வணங்கிப் போய்
அண்டர் பிரான் திருக்கானப்பேர்
அணைவார் ஆரூரர்
தொண்டர் அடித் தொழலும் எனும்
சொல் பதிகத் தொடை புனைவார். 114
காளையார் தமைக் கண்டு தொழப்
பெறுவது என்று என்று
தாளை நாளும் பரவத்
தருவார் பால் சார்கின்றார்
ஆளை நீள் இடைக் காண
அஞ்சிய நீர் நாய் அயலே
வாளைபாய் நுழைப் பழன
முனைப்பாடி வள நாடார். 115
மன்னு திருக்கானப் பேர் வளம்
பதியில் வந்து எய்தி
சென்னி வளர்மதி அணிந்தார் செழுங்
கோயில் வலம் கொண்டு
முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர்
சேவடி தாழ்ந்து
பன்னு செழுந்தமிழ் மாலை
பாடினார் பரவினார். 116
ஆராத காதலுடன் அப்பதியில்
பணிந்து ஏத்திச்
சீராரும் திருத்தொண்டர் சில நாள்
அங்கு அமர்ந்து அருளிக்
காராரும் மலர்ச்சோலைக் கானப்
பேர் கடந்து அணைந்தார்
போரானேற்றார் கயிலைப்
பொருப்பர் திருப்புனவாயில். 117
புனல் வாயில் பதி அமர்ந்த
புனிதர் ஆலயம் புக்கு
மனம் ஆர்வம் உறச் சித்த நீ
நினை என்னொடு என்றே
வின வான தமிழ் பாடி
வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்
சினயானை உரித்து அணிந்தார்
திருப்பாதம் தொழுது இருந்தார். 118
திருப்புன வாயில் பதியில்
அமர்ந்த சிவனார் மகிழும்
விருப்புடைய கோயில் பல
பணிந்து அருளால் மேவினார்
பொருப்பினொடு கானகன்று புனல்
பொன்னி நாடு அணைந்து
பருப்பத வார் சிலையார் தம்
பாம்பு அணிமா நகர் தன்னில். 119
பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன்
மருங்கு பல பதியும்
வேதாதி நாதர் கழல் வணங்கி
மிகு விரைவின் உடன்
சூதாரும் துணை முலையார்
மணிவாய்க்குத் தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும்
திருவாரூர் வந்து அணைந்தார். 120
திருநாவலூர் வேந்தர் சேரர்
குல வேந்தர் உடன்
வருவாரைத் திருவாரூர்
வாழ்வார்கள் எதிர்கொள்ளத்
தரும் காதலுடன் வணங்கித்
தம் பெருமான் கோயிலினுள்
பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும்
பேறு பெறப் புகுந்தார். 121
வாச மலர்க் கொன்றையார்
மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசமுற முன் இறைஞ்சி நெடும்
பொழுது எலாம் பரவி
ஏசறவால் திருப்பதிகம் எடுத்து
ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார்
பயில் கோயில் பணிந்து அணைவார். 122
பரவையார் மாளிகையில் பரிசனங்கள்
முன் எய்த
விரவு பேர் அலங்கார விழுச்
செல்வம் மிகப் பெருக
வரவு எதிர் கொண்டு அடிவணங்க
வன் தொண்டர் மலைநாட்டுப்
புரவலனாரையும் கொண்டு பொன்
அணி மாளிகை புகுந்தார். 123
பரவியே பரவையார் பரிவு
உடனே பணிந்து ஏத்தி
விரவிய போனகங்கறிகள் விதம்
பலவாகச் சமைத்துப்
பரிகலமும் பாவாடை பகல்
விளக்கும் உடன் அமைத்துத்
திரு அமுது செய்வித்தார்
திருந்திய தேன் மொழியினார். 124
மங்கலமாம் பூசனைகள் பரவையார்
செய மகிழ்ந்து
தங்கி இனிது அமர்
கின்றார் தம்பிரான் கோயிலினுள்
பொங்கு பெரும் காலம் எலாம்
புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து
நங்கள் பிரான் அருள் மறவா
நல் விளையாட்டினை நயந்தார். 125
நிலைச் செண்டும் பரிச் செண்டும்
வீசி மிக மகிழ்வு எய்தி
விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல்
கண்டு அருளி வென்றி பெற
மலைக்கு நெடு முள் கணைக்கால்
வாரணப் போர் மகிழ்ந்து அருளி
அலைக்கும் அறப் பல புள்ளின்
அமர் விரும்பி அமர்கின்றார். 126
விரவு காதல் மீக்கூர மேவும்
நாள்கள் பல செல்லக்
கரவில் ஈகைக் கேரளனார் தங்கள்
கடல் சூழ் மலை நாட்டுப்
பரவையார் தம் கொழுநனார் தம்மைப்
பணிந்து கொண்டு அணைவான்
இரவும் பகலும் தொழுது இரக்க
இசைந்தார் அவரும் எழுந்து அருள. 127
நங்கை பரவையார் உள்ளத்து இசைவால்
நம்பி எழுந்து அருளத்
திங்கள் முடியார் திரு அருளைப்
பரவிச் சேரமான் பெருமாள்
எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற
பூசை செய்து அருளிப்
பொங்கும் முயற்சி இருவரும் போய்ப்
புக்கார் புனிதர் பூங்கோயில். 128
தம்பிரானைத் தொழுது அருளால் போந்து
தொண்டர் சார்ந்து அணைய
நம்பி ஆருரரும் சேரர்
நன்னாட்டு அரசனார் ஆய
பைம் பொன் மணி நீள் முடிக்
கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்
செம்பொன் நீடு மதில் ஆரூர்
தொழுது மேல் பால் செல்கின்றார். 129
பொன் பரப்பி மணிவரன்றி
புனல் பரக்கும் காவேரித்
தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த
கோயில் பல சென்று இறைஞ்சி
மின் பரப்பும் சடை அண்ணல்
விரும்பும் திருக் கண்டியூர்
அன்புருக்கும் சிந்தை உடன்
பணிந்து புறத்து அணைந்தார்கள். 130
வட கரையில் திருவையாறு எதிர்
தோன்ற மலர்க் கரங்கள்
உடலுருக உள்ளுருக உச்சியின்மேல்
குவித்து அருளிக்
கடல் பரந்தது எனப் பெருகும்
காவிரியைக் கடந்து ஏறித்
தொடர்வு உடைய திருவடியை
தொழுவதற்கு நினைவுற்றார். 131
ஐயாறு அதனைக் கண்டு தொழுது
அருள ஆரூரர் தமை நோக்கி
செய்யாள் பிரியாச் சேரமான்
பெருமாள் அருளிச் செய்கின்றார்
மையார் கண்டர் மருவு
திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி
நையா நின்றது இவ்வாறு கடந்து
பணிவோம் நாம் என்ன. 132
ஆறு பெருகி இரு கரையும்
பொருது விசும்பில் எழுவது போல்
வேறு நாவாய் ஓடங்கள் மீது
செல்லா வகை மிகைப்ப
நீறு விளங்கும் திருமேனி
நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்
ஆறு நெறியாச் செலவுரியார்
தரியாது அழைத்துப் பாடுவார். 133
பரவும் பரிசு ஒன்று எடுத்து
அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்
அரவம் புனைவார் தமை ஐயாறு
உடைய அடிகளோ என்று
விரவும் வேட்கை உடன் அழைத்து
விளங்கும் பெருமைத் திருப்பதிகம்
நிரவும் இசையில் வன்தொண்டர்
நின்று தொழுது பாடுதலும். 134
மன்றில் நிறைந்து நடமாட
வல்லார் தொல்லை ஐயாற்றில்
கன்று தடை உண்டு எதிர்
அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்
ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம்
கேட்க ஓலம் என
நின்று மொழிந்தார் பொன்னி மா
நதியும் நீங்கி நெறி காட்ட. 135
விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால்
பளிக்கு வெற்பு என்ன
நண்ணி நிற்கக் கீழ்பால் நீர்
வடிந்த நடுவு நல்லவழிப்
பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக்
கண்டதொண்டர் பயில் மாரி
கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம்
கலக்கக் கை அஞ்சலி குவித்தார். 136
நம்பி பாதம் சேரமான்
பெருமாள் பணிய நாவலூர்
செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர்
பெருமான் எதிர் வணங்கி
உம்பர் நாதர் உமக்கு அளித்தது
அன்றோ என்ன உடன் மகிழ்ந்து
தம்பிரானைப் போற்றி இசைத்து தடம்
காவேரி நடு அணைந்தார். 137
செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும்
சேரர் பிரானும் தம் பெருமான்
எஞ்சல் இல்லா நிறை ஆற்றின்
இடையே அளித்த மணல் வழியில்
தஞ்சம் உடைய பரிசனமும்
தாமும் ஏறித் தலைச்சென்று
பஞ்ச நதி வாணரைப் பணிந்து
விழுந்தார் எழுந்தார் பரவினார். 138
அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது
ஆற்றித் திளைத்து இறைஞ்சித்
தங்கள் பெருமான் திரு அருளால்
தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்
பொங்கு நதியின் முன் வந்த
படியே நடுவு போந்து ஏறத்
துங்க வரை போல் நின்ற
நீர் துரந்து தொடரப் பெருகியதால். 139
ஆய செயலின் அதிசயத்தைக்
கண்ட கரையில் ஐயாறு
மேய பெருமான் அருள் போற்றி
வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்
தூய மதிவாழ் சடையார் தம்
பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்
சேய கொங்க நாடு அணைந்தார்
திருவாரூரர் சேரர் உடன். 140
கொங்கு நாடு கடந்து போய்க்
குலவு மலைநாட்டு எல்லையுற
நங்கள் பெருமான் தோழனார்
நம்பி தம்பிரான் தோழர்
அங்கண் உடனே அணை எழுந்து
அருளா நின்றார் எனும் விருப்பால்
எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள்
எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர். 141
பதிகள் எங்கும் தோரணங்கள்
பாங்கர் எங்கும் பூவனங்கள்
வதிகள் எங்கும் குளிர் பந்தர்
மனைகள் எங்கும் அகில் புகைக்கார்
நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல்
ஞாங்கர் எங்கும் ஓங்குவன
வீதிகள் எங்கும் முழவின் ஒலி
நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ. 142
திசைகள் தோறும் வரும் பெருமை
அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்
குசை கொள் வாசி நிரை வெள்ளம்
கும்ப யானை அணி வெள்ளம்
மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம்
மேவும் சோற்று வெள்ளம் கண்டு
அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து
கொடுங் கோளூர் அணைந்தார். 143
கொடுங்கோ ளூரின் மதில் வாயில்
அணி கோடித்து மருகில் உடுத்து
தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் சூளி
குளிர் சாலைகள் தெற்றி
நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு
நிரந்த மணித் தாமம் கமுகு
விடுங்கோதைப் பூந் தாமங்கள்
நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து. 144
நகர மாந்தர் எதிர் கொள்ள
நண்ணி எண்ணில் அரங்கு தொறும்
மகர குழை மாதர்கள் பாடி
ஆட மணி வீதியில் அணைவார்
சிகர நெடும் மாளிகை அணையார்
சென்று திருவஞ்சைக் களத்து
நிகரில் தொண்டர் தமைக் கொண்டு
புகுந்தார் உதியர் நெடுந்தகையார். 145
இறைவர் கோயில் மணி முன்றில்
வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு
நிறையும் காதல் உடன் வீழ்ந்து
பணிந்து நேர் நின்று ஆரூரர்
முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது
கங்கை என்று எடுத்துப்
பிறை கொள் முடியார் தமைப்பாடி
பரவிப் பெருமாளுடன் தொழுதார். 146
தொழுது தினைத்துப் புறம் போந்து
தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்
முழுதும் ஏத்த நம்பியை முன்பு
ஏற்றிப் பின்பு தாம் ஏறிப்
பழுதில் மணிச் சாமரை வீசிப்
பைம்பொன் மணி மாளிகையில் வரும்
பொழுது மறுகில் இருபுடையும்
மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார். 147
நல்ல தோழர் நம் பெருமாள்
தமக்கு நம்பி இவர் என்பார்
எல்லை இல்லாத் தவம் முன்பு என்
செய்தோம் இவரைத் தொழ என்பார்
செல்வம் இனி என் பெறுவது நம்
சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்
சொல்லும் தரமோ பெருமாள் செய்
தொழிலைப் பாரீர் எனத் தொழுவார். 148
பூவும் பொரியும் பொன் துகளும்
பொழிந்து பணிவார் பொருவில் இவர்
மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத்
திலதம் என வியப்பார்
பாவும் துதிகள் எம் மருங்கும்
பயில வந்து மாளிகையின்
மாவும் களிறும் நெருங்கும் மணி
வாயில் புகுந்து மருங்கு இழிந்தார். 149
கழறிற்றறியுந் திருவடியும் கலை
நாவலர் தம் பெருமானாம்
முழவில் பொலியும் திரு நெடுந்தோள்
முனைவர் தம்மை உடன் கொண்டு
விழவில் பொலியும் மாளிகையில்
விளங்கு சிங்காசனத்தின் மிசை
நிழல் திக்கு ஒளிரும் பூணாரை
இருத்தித் தாமும் நேர் நின்று. 150
செம்பொன் கரக வாச நீர்
தேவிமார்கள் எடுத்து ஏந்த
அம்பொன் பாதம் தாம் விளக்கி
அருளப் புகலும் ஆரூரர்
தம்பொன் தாளை வாங்கி இது தகாது
என்று அருளத் தரணியில் வீழ்ந்து
எம் பெற்றிமையால் செய்தன இங்கு
எல்லாம் இசைய வேண்டும் என. 151
பெருமாள் வேண்ட எதிர் மறுக்க
மாட்டார் அன்பில் பெரும் தகையார்
திருமா நெடுந்தோள் உதியர் பிரான்
செய்த எல்லாம் கண்டு இருந்தார்
அருமானம் கொள் பூசனைகள் அடைவே
எல்லாம் அளித்து அதன்பின்
ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே
அமுது செய்து வந்தார். 152
சேரர் உடனே திருவமுது செய்த
பின்பு கை கோட்டி
ஆரம் நறுமென் கலவை மான் மதச்
சாந்து ஆடை அணிமணிப் பூண்
ஈர விரை மென்மலர்ப் பணிகள்
இனைய முதலாயின வருக்கம்
சார எடுத்து வன் தொண்டர்
சாத்தி மிகத் தமக்கு ஆக்கி. 153
பாடல் ஆடல் இன்னியங்கள்
பயில்தல் முதலாம் பண்ணையினில்
நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு
காலம் தொறும் நிகழ
மாடு விரைப்பூந்தருமணஞ்செய்
ஆராமங்கள் வைகுவித்துக்
கூட முனைப் பாடியார் கோவை
கொண்டு மகிழ்ந்தார் கோதையார். 154
செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு
சோற்றுப் பெரும் சிறப்பும்
வண்டாடும் மலர் வாவி
மருவிய நீர் விளையாட்டும்
தண்டாமும் மத கும்பத் தட
மலைப்போர் சல மற்போர்
கண்டாரா விருப்பு எய்தக்
காவலனார் காதல் செய்நாள். 155
நாவலர் தம் பெருமானும்
திருவாரூர் நகர் ஆளும்
தேவர் பிரான் கழல் ஒரு
நாள் மிக நினைந்த சிந்தையராய்
ஆவியை ஆரூரானை
மறக்கலுமாமே என்னும்
மேவிய சொல் திருப்பதிகம்
பாடியே வெருவுற்றார். 156
திருவாரூர் தனை நினைந்து
சென்று தொழுவேன் என்று
மரு ஆர்வத் தொண்டர் உடன்
வழி கொண்டு செல்பொழுதில்
ஒருவா நண் புள்ளுருக உடன்
எழுந்து கை தொழுது
பெருவான வரம்பனார் பிரிவு
ஆற்றார் பின் செல்வார். 157
வன் தொண்டர் முன் எய்தி
மனம் அழிந்த உணர்வினராய்
இன்று உமது பிரிவு ஆற்றேன்
என் செய்கேன் யான் என்ன
ஒன்றுநீர் வருந்தாதே உமது
பதியின் கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு
ஆளும் என மொழிந்தார். 158
ஆரூரர் மொழிந்து அருள அது
கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி
எனக்கு உமது பாதமலர்
தேரூரும் நெடும் வீதித்
திருவாரூர்க்கு எழுந்து அருள
நேரூரும் மனக் காதல்
நீக்கவும் அஞ்சுவன் என்றார். 159
மன்னவனார் அது மொழிய
வன்தொண்டர் எதிர் மொழிவார்
என்னுயிருக்கு இன் உயிராம்
எழில் ஆரூர்ப் பெருமானை
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து
இரேன் மதி அணிந்தார்
இன்னருளால் அரசளிப்பீர் நீர்
இருப்பீர் என இறைஞ்ச. 160
மற்றவரும் பணிந்து இசைந்தே
மந்திரிகள் தமை அழைத்து
பொற்பு நிறை தொல்
நகரில் இற்றைக்கு முன்புகுந்த
நற்பெரும் பண்டார நானா
வருக்கம் ஆன வெலாம்
பற்பலவாம் ஆளின் மிசை
ஏற்றிவரப் பண்ணும் என. 161
ஆங்கவரும் அன்று வரை
ஆயம் ஆகிய தனங்கள்
ஓங்கிய பொன் நவ மணிகள்
ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்
ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம்
முதல் நலம் சிறப்பத்
தாங்கு பொதி வினைஞர் மேல்
தலம் மலியக் கொண்டு அணைந்தார். 162
மற்றவற்றின் பரப்பு எல்லாம்
வன் தொண்டர் பரிசனத்தின்
முற்படவே செலவு இட்டு
முனைப்பாடித் திருநாடார்
பொற் பதங்கள் பணிந்து அவரைத்
தொழுது எடுத்துப் புணை அலங்கல்
வெற்புயர் தோள் உறத் தழுவி
விடை அளித்தார் வன்தொண்டர். 163
ஆரூரர் அவர் தமக்கு விடை
அருளி அங்கு அன்று
காரூரும் மலைநாடு கடந்து
அருளிக் கல் சுரமும்
நீரூரும் கான் யாரும்
நெடும் கானும் பலகழிய
சீரூரும் திருமுருன்
பூண்டி வழிச்செல்கின்றார். 164
திரு முருகன் பூண்டி அயல்
செல்கின்ற போழ்தின் கண்
பொருவிடையார் நம்பிக்குத்
தாமே பொன் கொடுப்பதலால்
ஒருவர் கொடுப்பக் கொள்ள
ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்
பெருகருளால் தாம் கொடுக்கப்
பெறுவதற்கோ அது அறியோம். 165
வென்றி மிகு பூதங்கள்
வேடர் வடிவாய் சென்று
வன்தொண்டர் பண்டாரம் கவர
அருள் வைத்து அருள
அன்றினார் புரம் எரித்தார்
அருளால் வேட்டுவப் படையாய்ச்
சென்று அவர் தாம் வரும்
வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து. 166
வில் வாங்கி அலகம்பு
விசை நாணில் சந்தித்துக்
கொல்வோம் இங்கு இட்டுப்போம்
எனக் கோபத்தால் குத்தி
எல்லையில் பண்டாரம் எல்லாம்
கவர்ந்து கொள இரிந்தோடி
அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர்
மருங்கு அணைந்தார். 167
ஆரூரர் தம்பால் அவ்வேடுவர்
சென்று அணையாதே
நீரூருஞ் செஞ்சடையார் அருளினால்
நீங்க அவர்
சேரூராம் திருமுருகன் பூண்டியினில்
சென்று எய்திப்
போரூரு மழவிடையார் கோயிலை
நாடிப் புக்கார். 168
அங்கணர் தம் கோயிலினை
அஞ்சலி கூப்பித் தொழுது
மங்குலுற நீண்ட திருவாயிலினை
வந்து இறைஞ்சிப்
பொங்கு விருப்புடன் புக்கு வலம்
கொண்டு புனித நதி
திங்கள் முடிக்கு அணிந்தவர் தம்
திருமுன்பு சென்று அணைந்தார். 169
உருகிய அன்பொடு கைகள்
குவித்து விழுந்து உமைபாகம்
மருவிய தம் பெருமான்
முன் வன்தொண்டர் பாடினார்
வெருவுறவேடுவர் பறிக்கும்
வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு
அருகு இருந்தீர் எனக்கு
கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம். 170
பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம்
அவர் அருளால்
வேடுவர் தாம் பறித்த பொருள்
அவை எல்லாம் விண்ணெருங்க
நீடு திரு வாயிலின் முன்
குவித்திடலும் நேர் இறைஞ்சி
ஆடும் அவர் திருவருளால்
அப்படியே கைக் கொண்டார். 171
கைக்கொண்டு கொடுபோம் அக்
கைவினைஞர் தமை ஏவி
மைக் கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்கு அன்று
மெய்க் கொண்ட காதலினால் விரைந்து
ஏகி மென் கரும்பும்
செய்க் கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்று அணைந்தார். 172
நாவலர் மன்னவர் அருளால்
விடை கொண்ட நரபதியார்
ஆவியின் ஒன்றா நண்பின்
ஆரூரர் தமை நினைந்து
மாவலரும் சோலை மா
கோதையினில் மன்னிமலைப்
பூவலயம் பொது நீக்கி அரசு
உரிமை புரிந்து இருந்தார். 173
இந் நிலைமை உதியர் பிரான்
எம்பிரான் வன்தொண்டர்
பொன்னி வளநாடு அகன்று
மாகோதையினில் மேல் புகுந்து
மன்னு திருக் கயிலை யினில்
மத வரைமேல் எழுந்து அருள
முன்னர் வயப்பரி உகைக்கும்
திருத்தொழில் பின்மொழிகின்றாம். 174
மலை மலிந்த திருநாட்டு மன்னவனார்
மா கடல் போல்
சிலை மலிந்த கொடித் தானைச்
சேரலனார் கழல் போற்றி
நிலை மலிந்த மணிமாடம் நீள்
மறுகு நான் மறை சூழ்
கலை மலிந்த புகழ்க் காழிக்
கணநாதர் திறம் உரைப்பாம். 175
திருச்சிற்றம்பலம்