பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

043 கழறிற்றறிவார் நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மாவீற்றிருந்த பெரும் சிறப்பின் மன்னும் 

  தொன்மை மலை நாட்டுப்

பா வீற்றிருந்த பல்புகழில் பயிலும் 

  இயல்பில் பழம்பதி தான்

சேவீற்று இருந்தார் திருவஞ்சைக் களமும் 

  நிலவிச் சேரர் குலக்

கோவீற்றிருந்து முறை புரியும் 

  குலக்கோ மூதூர் கொடுங்கோளூர்.  1 

 

 

காலை எழும் பல் கலையின் ஒலி 

  களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி

சோலை எழும் மென் சுரும்பின் ஒலி 

  துரகச் செருக்கால் சுலவும் ஒலி

பாலை விபஞ்சி பயிலும் ஒலி 

  பாடல் ஆடல் முழவின் ஒலி

வேலை ஒலியை விழுங்கிஎழ 

  விளங்கி ஓங்கும் வியப்பினதால்.  2 

 

 

மிக்க செல்வம் மனைகள் தொறும் 

  விளையும் இன்பம் விளங்குவன

பக்கம் நெருங்கும் சாலை தொறும் 

  பயில் சட்ட அறங்கள் பல்குவன

தக்க அணி கொள் மாடங்கள் 

  தொறும் சைவ மேன்மை சாற்றுவன

தொக்க வளங்கள் இடங்கள் தொறும் 

  அடங்க நிதியம் துவன்றுவன.  3 

 

 

வேத நெறியின் முறை பிறழா 

  மிக்க ஒழுக்கம் தலை நின்ற

சாதி நான்கு நிலை தழைக்கும் 

  தன்மைத்து ஆகி தடமதில் சூழ்

சூத வகுள சரள நிரை துதையும் 

  சோலை வள நகர் தான்

கோதை அரசர் மகோதை எனக் 

  குலவும் பெயரும் உடைத்துலகில்.  4 

 

 

முருகு விரியும் மலர்ச் சோலை மூதூர் 

  அதன் கண் முறை மரபின்

அருதி அழியும் கலி நீக்கி அறம் 

  கொள் சைவத் திறம் தழைப்பத்

திருகு சின வெம் களியானைச் 

  சேரர் குலமும் உலகும் செய்

பெருகும் தவத்தால் அரன் அருளால் 

  பிறந்தார் பெருமாக் கோதையார்.  5 

 

 

திருமா நகரம் திரு அவதாரம் 

  செய் விழவின் சிறப்பினால்

வருமா களிகூர் நெய்யாடல் எடுப்ப 

  வான மலர் மாரி

தருமா விசும்பின் மிக நெருங்கத் 

  தழங்கும் ஒலி மங்கலம் தழைப்பப்

பெருமா நிலத்தில் எவ்வுயிரும் 

  பெருகு மகிழ்ச்சி பிறங்கினவால்.  6 

 

 

மண் மேல் சைவ நெறி வாழ 

  வளர்ந்து முன்னை வழி அன்பால்

கண் மேல் விளங்கு நெற்றியினார் 

  கழலே பேணூம் கருத்தினராய்

உள் மேவிய அன்பினர் ஆகி 

  உரிமை அரசர் தொழில் புரியார்

தெள் நீர் முடியார் திரு வஞ்சைக் 

  களத்தில் திருத்தொண்டே புரிவார்.  7 

 

 

உலகின் இயல்பும் அரசு இயல்பும் 

  உறுதி அல்ல என உணர்வார்

புலரி எழுந்து புனல் மூழ்கிப் 

  புனித வெண்ணீற்றினும் மூழ்கி

நிலவு திரு நந்தன வனத்து 

  நீடும் பணிகள் பல செய்து

மலரும் முகையும் கொணர்ந்து திருமாலை 

  சாத்த மகிழ்ந்து அமைத்து.  8 

 

 

திரு மஞ்சனமும் கொணர்ந்து திரு அலகும் 

  இட்டுத் திரு மெழுக்கு

வரும் அன்புடன் இன்புறச் சாத்தி 

  மற்றும் உள்ள திருப்பணிகள்

பெருமை பிறங்கச் செய்து அமைத்துப் 

  பேணும் விருப்பில் திருப்பாட்டும்

ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப் 

  பணிந்தே ஒழுகும் நாள்.  9 

 

 

நீரின் மலிந்த கடல் அகழி 

  நெடுமால் வரையின் கொடிமதில் சூழ்

சீரின் மலிந்த திரு நகரம் 

  அதனில் செங்கோல் பொறையன் எனும்

காரின் மலிந்த கெடை நிழல் மேல் 

  கவிக்கும் கொற்றக் குடை நிழல் கீழ்த்

தாரின் மலிந்த புயத்து அரசன் 

  தரணி நீத்துத் தவம் சார்ந்தான்.  10 

 

 

வந்த மரபின் அரசு அளிப்பான் வனம் 

  சார் தவத்தின் மருவிய பின்

சிந்தை மதி நூல் தேர் அமைச்சர் 

  சில நாள் ஆய்ந்து தெளிந்த நெறி

முந்தை மரபில் முதல்வர் திருத் தொண்டு 

  முயல்வார் முதற்று ஆக

இந்து முடியார் திருவஞ்சைக் களத்தில் 

  அவர் பால் எய்தினார்.  11 

 

 

எய்தி அவர் தம் எதிரில் இறைஞ்சி 

  இருந்தண் சாரல் மலை நாட்டுச்

செய்தி முறைமையால் உரிமைச் 

  செங்கோல் அரசு புரிவதற்கு

மைதீர் நெறியின் முடி சூடி 

  அருளும் மரபால் வந்தது எனப்

பொய்தீர் வாய்மை மந்திரிகள் 

  போற்றிப் புகன்ற பொழுதின்கண்.  12 

 

 

இன்பம் பெருகும் திருத் தொண்டுக்கு 

  இடையூறாக இவர் மொழிந்தார்

அன்பு நிலைமை வழுவாமை அரசு 

  புரக்கும் அருள் உண்டேல்

என்பும் அரவும் புனைந்தாரை இடை 

  பெற்று அறிவேன் எனப் புக்கு

முன்பு தொழுது விண்ணப்பம் 

  செய்தார் முதல்வர் அருளினால்.  13 

 

 

மேவும் உரிமை அரசு அளித்தே 

  விரும்பு காதல் வழிபாடும்

யாவும் யாரும் கழறினவும் அறியும் 

  உணர்வும் ஈறு இல்லாத்

தாவில் விறலும் தண்டாத கொடையும் 

  படை வாகனம் முதலாம்

காவல் மன்னர்க்கு உரியனவும் 

  எல்லாம் கைவந்துறப் பெற்றார்.  14 

 

 

ஆன அருள் கொண்டு அஞ்சலி செய்து 

  இறைஞ்சிப் புறம் போந்து அரசு அளித்தல்

ஊனம் ஆகும் திருத் தொண்டுக்கு 

  எனினும் உடையான் அருளாலே

மேன்மை மகுடம் தாங்குதற்கு வேண்டும் 

  அமைச்சர்க்கு உடன் படலும்

மான அமைச்சர் தாம் பணிந்து அவ் 

  வினைமேல் கொண்டு மகிழ்ந்து எழுந்தார்.  15 

 

 

உரிமை நாளில் ஓரை நலன் 

  எய்த மிக்க உபகரணம்

பெருமை சிறக்க வேண்டுவன எல்லாம் 

  பிறங்க மங்கலம் செய்து

இருமை உலகுக்கு ஒருமை முடி 

  கவித்தார் எல்லா உயிரும் மகிழ்

தரும நிலைமை அறிந்து புவி 

  தாங்கும் கழறிற் அறிவார் தாம்.  16 

 

 

தம்பிரானார் கோயில் வலம் கொண்டு 

  திருமுன் தாழ்ந்து எழுந்து

கும்ப யானை மேல் கொண்டு 

  கொற்றக் குடையும் சாமரையும்

நம்பும் உரிமை யவர் தாங்க நலம் 

  கொள் நகர் சூழ் வலம் கொள்வார்

மொய்ம்பில் உவரின் பொதி சுமந்தோர் 

  வண்ணான் முன்னே வரக் கண்டார்.  17 

 

 

மழையில் கரைந்து அங்கு உவர் 

  ஊறி மேனி வெளுத்த வடிவினால்

உழையில் பொலிந்த திருக்கரத்தார் அடியார் 

  வேடம் என்று உணர்ந்தே

இழையிற் சிறந்த ஓடை நுதல் 

  யானைக் கழுத்தின் நின்று இழிந்து

விழைவில் பெருகும் காதலினால் விரைந்து 

  சென்று கை தொழுதார்.  18 

 

 

சேரர் பெருமான் தொழக் கண்டு 

  சிந்தை கலங்கி முன் வணங்கி

யார் என்று அடியேனைக் கொண்டது 

  அடி வண்ணான் எனச்

சேரர் பிரானும் அடிச்சேரன் 

  அடியேன் என்று திருநீற்றின்

வார வேடம் நினைப்பித்தீர் வருந்தாது 

  ஏகும் என மொழிந்தார்.  19 

 

 

மன்னர் பெருமான் திருத்தொண்டு கண்டு 

  மதி நீடு அமைச்சர் எலாம்

சென்னி மிசை அஞ்சலி செய்து 

  போற்றச் சினமால் களிறு ஏறி

மின்னு மணிப் பூண் கொடி மாட 

  வீதி மூதூர் வலம் கொண்டு

பொன்னின் மணி மாளிகை வாயில் 

  புக்கார் புனை மங்கலம் பொலிய.  20 

 

 

யானை மிசை நின்று இழிந்தருளி 

  இலங்கு மணி மண்டபத்தின் கண்

மேன்மை அரிஆசனத்து ஏறி விளங்கும் 

  கொற்றக் குடை நிழற்றப்

பானல் விழியார் சாமரை முன் 

  பணி மாறப்பன் மலர் தூவி

மான அரசர் போற்றிட 

  வீற்றிருந்தார் மன்னர் பெருமானார்.  21 

 

 

உலகு புரக்கும் கொடைவளவர் 

  உரிமைச் செழியருடன் கூட

நிலவு பெருமுக் கோக்களாய் நீதி 

  மனுநூல் நெறி நடத்தி

அலகில் அரசர் திறை கொணர 

  அகத்தும் புறத்தும் பகை அறுத்து

மலரும் திரு நீற்று ஒளிவளர 

  மறைகள் வளர மண் அளிப்பார்.  22 

 

 

நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் 

  பயனும் நிறை தவமும்

தேடும் பொருளும் பெருந் துணையும் 

  தில்லைச் திருச்சிற்றம் பலத்துள்

ஆடும் கழலே எனத் தெளிந்த 

  அறிவால் எடுத்த திருப்பாதம்

கூடும் அன்பில் அர்ச்சனை மேற் 

  கொண்டார் சேரர் குலப் பெருமாள்.  23 

 

 

வாசத் திருமஞ்சனம் பள்ளித் 

  தாமம் சாந்தம் மணித் தூபம்

தேசில் பெருகும் செழும் தீபம் 

  முதலாயினவும் திரு அமுதும்

ஈசர்க்கு ஏற்ற பரிசினால் 

  அர்ச்சித்து அருள எந்நாளும்

பூசைக்கு அமர்ந்த பெருங் கூத்தர் 

  பொற்பார் சிலம்பின் ஒலி அளித்தார்.  24 

 

 

நம்பர் தாளின் வழிபாட்டால் 

  நாளும் இன்புற்று அமர்கின்றார்

இம்பர் உலகில் இரவலர்க்கும் 

  வறியோர் எவர்க்கும் ஈகையினால்

செம் பொன் மழையாம் எனப் 

  பொழிந்து திருந்து வென்றியுடன் பொருந்தி

உம்பர் போற்றத் தம் பெருமாற்கு 

  உரிய வேள்வி பல செய்தார்.  25 

 

 

இன்ன வண்ணம் இவர் ஓழுக 

  எழில் கொள் பாண்டி நன்னாட்டு

மன்னும் மதுரைத் திருவால வாயில் 

  இறைவர் வரும் அன்பால்

பன்னும் இசைப் பாடலில் 

  பரவும் பாணனார் பத்திரனார்க்கு

நன்மை நீடு பெரும் செல்வம் 

  நல்க வேண்டி அருள் புரிவார்.  26 

 

 

இரவு கனவில் எழுந்து அருளி 

  என்பால் அன்பால் எப்பொழுதும்

பரவும் சேரன் தனக்கு உனக்குப் 

  பைம் பொன் காணம் பட்டாடை

விரவு கதிர் செய் நவமணிப் 

  பூண் வேண்டிற்று எல்லாம் குறைவின்றித்

தர நம் ஓலை தருகின்றோம் 

  தாழாது ஏகி வருக என்று.  27 

 

 

அதிர் கழல் உதியர் வேந்தற்கு 

  அருள் செய்த பெருமை யாலே

எதிர் இல் செல்வத்துக்கு ஏற்ற 

  இருநிதி கொடுக்க என்று

மதிமலி புரிசை என்னும் 

  வாசகம் வரைந்த வாய்மைக்

கதிர் ஒளி விரிந்த தோட்டுத் 

  திருமுகம் கொடுத்தார் காண.  28 

 

 

சங்கப் புலவர் திருமுகந்தந் 

  தலைமேல் கொண்டு பத்திரனார்

அங்கு அப்பொழுதே புறப்பட்டு மலை 

  நாடு அணைய வந்து எய்தித்

துங்கப் பரிசை கொடுங் கோளூர் 

  தன்னில் புகுந்து துன்னு கொடி

மங்குல் தொடக்கும் மாளிகை முன் 

  வந்து மன்னர்க்கு அறிவித்தார்.  29 

 

 

கேட்ட பொழுதே கை தலைமேல் 

  கொண்டு கிளர்ந்த பேரன்பால்

நாட்டம் பொழி நீர் வழிந்து இழிய 

  எழுந்து நடுக்கம் மிக எய்தி

ஓட்டத் தம் பொன் மாளிகையின் 

  புறத்தில் உருகும் சிந்தையுடன்

பாட்டின் தலைமைப் பாணனார் 

  பாதம் பலகால் பணிகின்றார்.  30 

 

 

அடியேன் பொருளாத் திருமுகம் கொண்டு 

  அணைந்தது என்ன அவர் தாமும்

கொடிசேர் விடையார் திருமுகம் 

  கைக்கொடுத்து வணங்கக் கொற்றவனார்

முடிமேல் கொண்டு கூத்து ஆடி 

  மொழியும் குழறிப் பொழி கண்ணீர்

பொடியார் மார்பில் பரந்து விழப் 

  புவிமேல் பலகால் வீழ்ந்து எழுந்தார்.  31 

 

 

பரிவில் போற்றித் திருமுகத்தைப் பலகால் 

  தொழுது படி எடுக்க

உரிய வகையில் எடுத்து ஓதி 

  உம்பர் பெருமான் அருள் போற்றி

விரிபொன் சுடர் மாளிகை புக்கு 

  மேவும் உரிமைச் சுற்றம் எலாம்

பெரிது விரைவில் கொடு போந்து 

  பேணு அமைச்சர்க்கு அருள் செய்வார்.  32 

 

 

நங்கள் குல மாளிகை இதனுள் 

  நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்

பொங்கி நிறைந்த பலவேறு 

  வகையில் பொலிந்த பண்டாரம்

அம்கண் ஒன்றும் ஒழியாமை 

  அடையக் கண்டு புறப்பட்டுத்

தங்கும் பொதிசெய் தாளின்மேல் சமைய 

  ஏற்றிக் கெணரும் என.  33 

 

 

சேரர் பெருமான் அருள் செய்யத் 

  திருந்து மதிநூல் மந்திரிகள்

சாரும் மணி மாளிகையுள்ளால் தனங்கள் 

  எல்லாம் நிறைந்த பெரும்

சீர் கொள் நிதியம் எண்ணிறந்த 

  எல்லாம் பொதி செய்தாளின் மேல்

பாரில் நெருங்க மிசை ஏற்றிக் 

  கொண்டு வந்து பணிந்தார்கள்.  34 

 

 

பரந்த நிதியின் பரப்பு 

  எல்லாம் பாணனார் பத்திரனார்க்கு

நிரந்த தனங்கள் வேறு வேறு 

  நிரைத்துக் கட்டி மற்று இவையும்

உரம் தங்கிய வெம் கரிபரிகள் 

  முதலாம் உயிர் உள்ளன தனமும்

புரந்த அரசும் கொள்ளும் என 

  மொழிந்தார் பொறையர் புரவலனார்.  35 

 

 

பாணனார் பத்திரனாரும் பைம்பொன் 

  மௌலிச் சேரலனார்

காணக் கொடுத்த நிதி எல்லாம் 

  கண்டு மகிழ்வுற்று அதிசயித்துப்

பேண எனக்கு வேண்டுவன அடியேன் 

  கொள்ள பிஞ்ஞகனார் ஆணை

அரசும் அரசு உறுப்பும் கைக் 

  கொண்டு அருளும் என இறைஞ்ச.  36 

 

 

இறைவர் ஆணை மறுப்ப அதனுக்கு 

  அஞ்சி இசைந்தார் இகல் வேந்தர்

நிறையும் நிதியின் பரப்பு எல்லாம் 

  நிலத்தை நெளிய உடன் கொண்டே

உறை மும்மதத்துக் களிறு பரி 

  உள் இட்டன வேண்டுவ கொண்டோர்

பிறை வெண் கோட்டுக் களிற்றுமேல் 

  கொண்டு போந்தார் பெரும்பாணர்.  37 

 

 

பண்பு பெருகும் பெருமாளும் 

  பாணனார் பத்திரனார் பின்

கண்கள் பொழிந்த காதல் நீர் 

  வழியக் கையால் தொழுது அணைய

நண்பு சிறக்கும் அவர் தம்மை 

  நகரின் புறத்து விடை கொண்டு

திண் பொற் புரிசைத் திரு மதுரை 

  புக்கார் திருந்தும் இசைப் பாணர்.  38 

 

 

வான வரம்பர் குலம் பெருக்கும் 

  மன்னனாரும் மறித்து ஏகிக்

கூனல் இளம் வெண் பிறைக் கண்ணி 

  முடியார் அடிமை கொண்டு அருளும்

பான்மை அருளின் பெருமையினை நினைந்து 

  பலகால் பணிந்து ஏத்தி

மேன்மை விளங்கு மாளிகை 

  மண்டபத்துள் அரசு வீற்றிருந்தார்.  39 

 

 

அளவில் பெருமை அகில யோனிகளும் 

  கழறிற்று அறிந்து அவற்றின்

உளம் மன்னிய மெய்யுறு துயரம் 

  ஒன்றும் ஒழியா வகை அகற்றிக்

களவு கொலைகள் முதலான கடிந்து 

  கழற்றிற்று அறிவார் தாம்

வளவர் பெருமானுடன் செழியர் மகிழும் 

  கலப்பில் மகிழும் நாள்.  40 

 

 

வானக் கங்கை நதி பொதிந்த 

  மல்கு கடையார் வழிபாட்டுத்

தூ நல் சிறப்பின் அர்ச்சனையாம் தொண்டு 

  புரிவார் தமக்கு ஒரு நாள்

தேன் நக்கலர்ந்த கொன்றையினார் ஆடல் 

  சிலம்பின் ஒலி முன் போல்

மானப் பூசை முடிவின்கண் 

  கேளாது ஒழிய மதிமயங்கி.  41 

 

 

பூசை கடிது முடித்து அடியேன் 

  என்னோ பிழைத்தது எனப் பொருமி 

ஆசை உடம்பால் மற்று இனி வேறு 

  அடையும் இன்பம் யாது என்று

தேசின் விளங்கும் உடைவாளை 

  உருவித் திருமார்பினில் நாட்ட

ஈசர் விரைந்து திருச்சிலம்பின் 

  ஓசை மிகவும் இசைப்பித்தார்.  42 

 

 

ஆடல் சிலம்பின் ஒலிகேளா 

  உடைவாள் அகற்றி அங்கைமலர்

கூடத் தலைமேல் குவித்து அருளிக் 

  கொண்டு விழுந்து தொழுது எழுந்து

நீடப் பரவி மொழிகின்றார் நெடுமால் 

  பிரமன் அருமறை முன்

தேடற்கு அரியாய் திருவருள் முன் 

  செய்யாதொழிந்தது என் என்றார்.  43 

 

 

என்ற பொழுதில் இறைவர் தாம் எதிர் 

  நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றினிடை நம் கூத்தாடல் வந்து 

  வணங்கி வன் தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி 

  உரை சேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம் 

  என்றார் அவரை நினைப்பிப்பார்.  44 

 

 

என்னே அடியார்க்கு இவர் அருளும் 

  கருணை இருந்தவாறு என்று

பொன் நேர் சடையார் திருநடம் 

  செய் புலியூர் பொன்னம்பலம் இறைஞ்சித் 

தன் நேர் இல்லா வன்தொண்டர் 

  தமையும் காண்பன் என விரும்பி

நன்னீர் நாட்டுக் செல நயந்தார் 

  நாமச் சேரர் கோமானார்.  45 

 

 

பொன்னார் மௌலிச் சேரலனார் போற்றும் 

  அமைச்சர்க்கு அஃது இயம்பி

நல் நாள் கொண்டு பெரும் பயணம் 

  எழுக என்று நலம் சாற்ற

மின்னார் அயில் வேல் குல மறவர் 

  வென்றி நிலவும் சிலை வீரர்

அந் நாட்டு உள்ளார் அடைய நிரந்து 

  அணைந்தார் வஞ்சி அகநகர்வாய்.  46 

 

 

இட்ட நல்நாள் ஓரையினில் 

  இறைவர் திருவஞ்சைக் களத்து

மட்டுவிரிபூங் கொன்றையினார் தம்மை 

  வலம் கொண்டு இறைஞ்சிப் போய்

பட்டநுதல் வெங் களியானைப் 

  பிடர்மேல் கொண்டு பனி மதியம்

தொட்ட கொடிமாளிகை மூதூர் 

  கடந்தார் உதியர் தோன்றலார்.  47 

 

 

யானை அணிகள் பரந்து வழி 

  எங்கும் நிரந்து செல்லுவன

மான மலை நாட்டினில் மலிந்த 

  மலைகள் உடன் போதுவ போன்ற

சேனைவீரர் புடைபரந்து செல்வது 

  அங்கண் மலை சூழ்ந்த

கானம் அடைய உடன் படர்வ 

  போலும் காட்சி மேவினதால்.  48 

 

 

புரவித் திரள்கள் ஆயோகப் 

  பொலிவின் அசைவில் போதுவன

அரவச் சேனைக் கடல் தரங்கம் மடுத்து 

  மேல் மேல் அடர்வன போல்

விரவிப் பரந்து சென்றனவால் 

  மிசையும் அவலும் ஒன்றாக

நிரவிப் பரந்த நெடுஞ் சேனை 

  நேமி நெளியச் சென்றனவால்.  49 

 

 

அந் நாட்டு எல்லை கடந்து அணைய 

  அமைச்சர்க்கு எல்லாம் விடையருளி

மின்னார் மணிப்பூண் மன்னவனார் 

  வேண்டுவாரை உடன்கொண்டு

கொன்னார் அயில் வேல் மறவர் 

  பயில் கொங்கர் நாடு கடந்தருளி

பொன் நாட்டவரும் அணைந்து ஆடும் 

  பொன்னி நீர் நாட்டிடைப் போவார்.  50 

 

 

சென்ற திசையில் சிவன் 

  அடியார் சிறப்பினோடும் எதிர்கொள்ளக்

குன்றும் கானும் உடைக் குறும்பர் 

  இடங்கள் தோறும் குறைவறுப்பத்

துன்று முரம்பும் கான் ஆறும் 

  துறுகற் சுரமும் பல கடந்து

வென்றி விடையாரிடம் பலவும் 

  மேவிப் பணிந்து செல்கின்றார்.  51 

 

 

பொருவில் பொன்னித் திருநதியின் கரை 

  வந்து எய்திப் புனித நீர்

மருவும் தீர்த்தம் மகிழ்ந்து ஆடி 

  மருங்கு வடபால் கரை ஏறித்

திருவில் பொலியும் திருப்புலியூர் செம்பொன் 

  மன்றுள் நடம் போற்ற

உருகும் மனத்தினுடன் சென்றார் ஒழியா 

  அன்பின் வழி வந்தார்.  52 

 

 

வந்து தில்லை மூதூரின் 

  எல்லை வணங்கி மகிழ்ச்சியினால்

அந்தணாளர் தொண்டர் குழாம் அணைந்த 

  போதில் எதிர் வணங்கிச்

சந்த விரைப் பூந்திருவீதி இறைஞ்சித் 

  தலைமேல் கரம் முகிழ்ப்பச்

சிந்தை மகிழ எழு நிலைக் 

  கோபுரத்தை அணைந்தார் சேரலனார்.  53 

 

 

நிலவும் பெருமை எழுநிலைக் கோபுரத்தின் 

  முன்னர் நிலத்து இறைஞ்சி

மலரும் கண்ணீர்த் துளி ததும்பப் புகுந்து 

  மணி மாளிகை வலம் கொண்டு

உலகு விளக்கும் திருப் பேரம்பலத்தை 

  வணங்கி உள் அணைந்தார்

அலகில் அண்டம் அளித்தவர் 

  நின்றாடும் திருச்சிற்றம்பலம் முன்.  54 

 

 

அளவில் இன்பப் பெரும் கூத்தர் 

  ஆட எடுத்த கழல் காட்ட

உளமும் புலனும் ஒருவழிச் சென்று 

  உருகப் போற்றி உய்கின்றார்

களனில் விடம் வைத்து அளித்த அமுது 

  அன்றி மன்றில் கழல் வைத்து

வளரும் திருக்கூத்து அமுது உலகுக்கு 

  அளித்த கருணை வழுத்தினார்.  55 

 

 

ஆரா ஆசை ஆனந்தக் கடலுள் 

  திளைத்தே அமர்ந்து அருளால்

சீரார் வண்ணப் பொன் வண்ணத் 

  திரு அந்தாதி திருப்படிக்கீழ்ப்

பாரா தரிக்க எடுத்து ஏத்திப் 

  பணிந்தார் பருவ மழை பொழியும்

காரால் நிகர்க்க அரிய கொடைக் 

  கையார் கழற்றிவார் தாம்.  56 

 

 

தம்பிரானார்க்கு எதிர் நின்று 

  தமிழ்ச்சொல் மாலை கேட்பிக்க

உம்பர் வாழ நடம் ஆடும் 

  ஒருவர் அதற்குப் பரிசில் எனச்

செம்பொன் மணி மன்றினில் எடுத்த 

  செய்ய பாதத் திருச்சிலம்பின்

இம்பர் நீட எழுந்த 

  ஒலிதாமும் எதிரே கேட்பித்தார்.  57 

 

 

ஆடல் சிலம்பின் ஒலி கேட்பார் 

  அளவில் இன்ப ஆனந்தம்

கூடப் பெற்ற பெரும் பேற்றின் 

  கொள்கை வாய்ப்பக் கும்பிடுவார்

நீடப் பணியும் காலம் எலாம் 

  நின்று தொழுது புறம் போந்து

மாடத் திரு மாளிகை வீதி 

  வணங்கிப் புறத்து வைகினார்.  58 

 

 

பரவும் தில்லை வட்டத்துப் பயில்வார் 

  பைம் பொன் அம்பலத்துள்

அரவும் புனலும் சடை ஆட 

  ஆடுவார் கூத்து ஆராமை

விரவும் காதல் மிக்கு ஓங்க 

  வேதம் படியும் திருப்படிக்கீழ்

இரவும் பகலும் பணிந்து ஏத்தி 

  இன்பம் சிறக்கும் அந் நாளில்.  59 

 

 

ஆடும் பெருமான் பாடல் கேட்டருளித் 

  தாழ்த்த படி தமக்குக்

கூடும் பரிசால் முன்பு அருளிச் 

  செய்த நாவலூர்க் கோவை

நீடும் பெரும் காதலில் காண 

  நிறைந்த நினைவு நிரம்பாமல்

தேடும் பாதர் அருளினால் திருவாரூர் 

  மேல் செல எழுந்தார்.  60 

 

 

அறிவின் எல்லை ஆய திருத்தில்லை 

  எல்லை அமர்ந்து இறைஞ்சிப்

பிறிவிலாத திருவடியைப் பெருகும் 

  உள்ளத்தினில் பெற்று

செறியும் ஞான போனகர் வந்து 

  அருளும் புகலி சென்று இறைஞ்சி

மறி சேர் கரத்தார் கோயில் பல 

  வணங்கி மகிழ்ந்து வழிக்கொள்வார்.  61 

 

 

வழியில் குழியில் செழுவயலின் மதகின் 

  மலர் வாவிகளின் மடுச்

சுழியில் தரளம் திரை சொரியும் 

  துறை நீர்ப் பொன்னி கடந்து ஏறி

விழியில் திகழும் திருநுதலார் விரும்பும் 

  இடங்கள் இறைஞ்சி உகக்

கழிவில் பெரும் வெள்ளமும் கொள்ளாக் 

  கழனி ஆரூர் கண்ணுற்றார்.  62 

 

 

நம்பி தாமும் அந் நாள் 

  போய் நாகைக் காரோணம் பாடி

அம் பொன் மணிப்பூண் நவமணிகள் 

  ஆடை சாந்தம் அடல் பரிமா

பைம் பொன் சுரிகை முதலான 

  பெற்று மற்றும் பல பதியில்

தம்பிரானைப் பணிந்து ஏத்தித் 

  திருவாரூரில் சார்ந்து இருந்தார்.  63 

 

 

வந்து சேரர் பெருமானார் 

  மன்னும் திருவாரூர் எய்த

அந்தணாளர் பெருமானும் அரசர் 

  பெருமான் வரப்பெற்றுச்

சிந்தை மகிழ எதிர் கொண்டு 

  சென்று கிடைத்தார் சேரலனார்

சந்த விரைத்தார் வன்தொண்டர் 

  முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்.  64 

 

 

முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் 

  பணிந்து முகந்து எடுத்தே

அன்பு பெருகத் தழுவ 

  விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ

இன்ப வெள்ளத்திடை நீந்தி 

  ஏற மாட்டாதலைவார் போல்

என்பும் உருக உயிர் ஒன்றி 

  உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.  65 

 

 

ஆன நிலைமை கண்ட திருத்தொண்டர் 

  அளவில் மகிழ்வு எய்த

மானச் சேரர் பெருமானார் 

  தாமும் வன்தொண்டரும் கலந்த

பான்மை நண்பால் சேரமான் தோழர் 

  என்று பார் பரவும்

மேன்மை நாமம் முனைப்பாடி 

  வேந்தர்க்கு ஆகி விளங்கியதால்.  66 

 

 

ஒருவர் ஒருவரில் கலந்த உணர்வால் 

  இன்ப மொழி உரைத்து

மருவ இனியார் பால் செய்வது 

  என்னாம் என்னும் மகிழ்ச்சியினால்

பருவ மழைச் செங்கை பற்றிக் 

  கொண்டு பரமர் தாள் பணியத்

தெருவு நீங்கிக் கோயிலினுள் 

  புகுந்தார் சேரமான் தோழர்.  67 

 

 

சென்று தேவாசிரியனை முன் இறைஞ்சித் 

  திருமாளிகை வலம் கொண்டு

ஒன்றும் உள்ளத்தொடும் புகுவார் 

  உடைய நம்பி முன் ஆக

நின்று தொழுது கண் அருவி 

  வீழ நிலத்தின் மிசை வீழ்ந்தே

என்றும் இனிய தம் பெருமான் 

  பாதம் இறைஞ்சி ஏத்தினார்.  68 

 

 

தேவர் முனிவர் வந்து இறைஞ்சும் 

  தெய்வப் பெருமாள் கழல் வணங்கி

மூவர் தமக்கு முதல் ஆகும் 

  அவரைத் திருமும் மணிக் கோவை

நாவலூரர் தம் முன்பு 

  நன்மை விளங்கக் கேட்பித்தார்

தாவில் பெருமைச் சேரலனார் 

  தம்பிரானார் தாம் கொண்டார்.  69 

 

 

அங்கண் அருள் பெற்று எழுவாரைக் 

  கொண்டு புறம் போந்து ஆரூரர்

நங்கை பரவையார் திருமாளிகையில் 

  நண்ண நன்னுதலார்

பொங்கு விளக்கு நிறை குடமும் 

  பூ மாலைகளும் புகை அகிலும்

எங்கும் மடவார் எடுத்து ஏத்த 

  அணைந்து தாமும் எதிர் கொண்டார்.  70 

 

 

சோதி மணி மாளிகையின் கண் 

  சுடரும் பசும் பொற்கால் அமளி

மீது பெருமாள் தமை இருத்தி 

  நம்பி மேவி உடன் இருப்பக்

கோதில் குணத்துப் பரவையார் 

  கொழுநனார்க்கும் தோழர்க்கும்

நீதி வழுவா ஒழுக்கத்து நிறை 

  பூசனைகள் முறை அளித்தார்.  71 

 

 

தாண்டு புரவிச் சேரர் குலப் 

  பெருமாள் தமக்குத் திரு அமுது

தூண்டும் சோதி விளக்கு அனையார் 

  அமைக்கத் துணைவர் சொல்லுதலும்

வேண்டும் பரிசு வெவ்வேறு 

  விதத்துக் கறியும் போனகமும்

ஈண்டச் சமைப்பித்து உடன் வந்தார்க்கு 

  எல்லாம் இயல்பின் விருந்து அமைத்தார்.  72 

 

 

அரசர்க்கு அமைத்த சிறப்பினும் மேல் 

  அடியார்க்கு ஏற்கும் படியாக

விரவிப் பெருகும் அன்பினுடன் 

  விரும்பும் அமுது சமைத்ததன்பின்

புரசைக் களிற்றுச் சேரலனார் புடை 

  சூழ்ந்து அவரோடு அமுது செயப்

பரவைப் பிறந்த திருவனைய 

  பரவையார் வந்து அறிவித்தார்.  73 

 

 

சேரர் பெருமான் எழுந்தருளி 

  அமுத செய்யச் செய்தவத்தால்

தாரின் மலிபூம் குழல் மடவாய் 

  தாழாது அமுது செய்வி எனப்

பாரின் மலிசீர் வன்தொண்டர் 

  அருளிச் செய்யப் பரிகலங்கள்

ஏரின் விளங்கத் திருத்திக்கால் 

  இரண்டில் படியா ஏற்றுதலும்.  74 

 

 

ஆண்ட நம்பி பெருமாளை 

  உடனே அமுது செய்தருள

வேண்டும் என்ன ஆங்கு அவரும் 

  விரைந்து வணங்கி வெருவுறலும்

நீண்ட தடக்கை பிடித்தருளி மீண்டும் 

  நேரே குறை கொள்ள

ஈண்ட அமுது செய்வதனுக்கு 

  இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.  75 

 

 

ஒக்க அமுது செய்தருள 

  உயர்ந்த தவத்துப் பரவையார்

மிக்க விருப்பால் அமுது 

  செய்வித்தருளி மேவும் பரிசனங்கள்

தக்க வகையால் அறுசுவையும் தாம் 

  வேண்டியவாறு இனிது அருந்தத்

தொக்க மகிழ்ச்சி களி சிறப்பத் 

  தூய விருந்தின் கடன் முடித்தார்.  76 

 

 

பனிநீர் விரவு சந்தனத்தின் 

  பசுங்கர்ப்பூர விரைக் கலவை

வனிதையவர்கள் சமைத்து எடுப்பக் 

  கொடுத்து மகிழ்மான் மதச் சாந்தும்

புனித நறும் பூ மாலைகளும் 

  போற்றிக் கொடுத்துப் பொற்கொடியார்

இனிய பஞ்ச வாசமுடன் 

  அடைக்காய் அமுதும் ஏந்தினார்.  77 

 

 

ஆய சிறப்பில் பூசனைகள் அளித்த 

  எல்லாம் அமர்ந்து அருளித்

தூய நீறு தங்கள் திருமுடியில் 

  வாங்கித் தொழுது அணிந்து

மேய விருப்பினுடன் இருப்பக் 

  கழறிற்றறிவார் மெய்த்தொண்டின்

சேய நீர்மை அடைந்தாராய் நம்பி 

  செம்பொற் கழல் பணிந்தார்.  78 

 

 

மலை நாட்டு அரசர் பெருமானார் 

  வணங்க வணங்கி எதிர் தழுவிக்

கலை நாள் பெருகு மதி 

  முகத்துப் பரவையார் தம் கணவனார்

சிலை நாட்டிய வெல் கொடியாரைச் 

  சேரத் தந்தார் எனக் கங்கை

அலை நாள் கொன்றை முடிச் சடையார் 

  அருளே போற்றி உடன் அமர்ந்தார்.  79 

 

 

செல்வத் திருவாரூர் மேவும் செம்பொற் 

  புற்றில் இனிது அமர்ந்த

வில் வெற்பு உடையார் கழல் 

  வணங்கி வீதி விடங்கப் பெருமானை

மல்லல் பவனி சேவித்து வாழ்ந்து 

  நாளும் மனம் மகிழ்ந்து

சொல் வித்தகர் தாம் இருவர்களும் 

  தொடர்ந்த காதலுடன் சிறந்தார்.  80 

 

 

இவ்வாறு ஒழுகும் நாளின் கண் 

  இலங்கு மணிப்பூண் வன்தொண்டர்

மைவாழ் களத்து மறையவனார் மருவும் 

  இடங்கள் பல வணங்கிச்

செய்வார் கன்னித் தமிழ் நாட்டுத் 

  திருமா மதுரை முதலான

மொய்வார் சடையார் மூதூர்கள் 

  இறைஞ்ச முறைமையால் நினைந்தார்.  81 

 

 

சேரர் பிரானும் ஆரூரர் 

  தம்மைப் பிரியாச் சிறப்பாலும்

வாரம் பெருகத் தமக்கு அன்று 

  மதுரை ஆலவாய் அமர்ந்த

வீரர் அளித்த திருமுகத்தால் 

  விரும்பும் அன்பின் வணங்குதற்குச்

சார எழுந்த குறிப்பாலும் தாமும் 

  உடனே செலத் துணிந்தார்.  82 

 

 

இருவர் திரு உள்ளமும் இசைந்த 

  பொழுதில் எழுந்து திருவாரூர்

ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி 

  உடன்பாட்டு அருளால் போந்தருளி

மருவும் உரிமைப் பெரும் சுற்றம் 

  வரம்பில் பணிகள் வாகனங்கள்

பொருவில் பண்டாரங் கொண்டு 

  போதுவார்கள் உடன் போத.  83 

 

 

சேவித்து அணையும் பரிசனங்கள் 

  சூழத் திருவாரூர் இறைஞ்சிக்

காவில் பயிலும் புறம்பணையைக் 

  கடந்து போந்து கீழ்வேளூர்

மேவிப் பரமர் கழல் வணங்கிப் 

  போந்து வேலைக் கழிக் கானல்

பூவில் திகழும் பொழில் நாகை 

  புகுந்து காரோணம் பணிந்தார்.  84 

 

 

திருக்காரோணச் சிவக் கொழுந்தைச் 

  சென்று பணிந்து சிந்தையினை

உருக்கார்வச் செம்தமிழ் மாலை சாத்திச் 

  சில நாள் உறைந்து போய்

பெருக்காறு உலவு சடைமுடியார் இடங்கள் 

  பிறவும் பணிந்து ஏத்தி

அருள் காரணர் தம் திருமறைக்காடு 

  அணைந்தார் சேரர் ஆரூரர்.  85 

 

 

முந்நீர் வலங்கொள் மறைக்காட்டு முதல்வர் 

  கோயில் சென்று இறைஞ்சிச் 

செந்நீர் வாய்மைத் திருநாவுக்கரசும் 

  புகலிச் சிவக் கன்றும்

அந்நேர் திறக்க அடைக்க 

  எனப்பாடும் திருவாயிலை அணைந்து

நன்னீர் பொழியும் விழியினராய் நாயன் 

  மாரை நினைந்து இறைஞ்சி.  86 

 

 

நிறைந்த மறைகள் அர்ச்சித்த 

  நீடு மறைக்காட்டு அருமணியை

இறைஞ்சி வீழ்ந்து பணிந்து எழுந்து 

  போற்றி யாழைப் பழித்து என்னும்

அறைந்த பதிகத் தமிழ் மாலை 

  நம்பி சாத்த அருட்சேரர்

சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் 

  திளைத்து எழுந்தார்.  87 

 

 

எழுந்து பணிந்து புறத்து எய்தி இருவர் 

  பெருந் தொண்டரும் சில நாள்

செழுந்தண் பழனப் பதியதனுள் அமர்ந்து 

  தென்பால் திரைக் கடல் நஞ்சு

அழுந்து மிடற்றார் அகத்தியான் பள்ளி 

  இறைஞ்சி அவிர் மதியக்

கொழுந்து வளர் செம் கடைக் 

  குழகர் கோடிக் கோயில் குறுகினார்.  88 

 

 

கோடிக் குழகர் கோயில் அயல் 

  குடிகள் ஒன்றும் புறத்து எங்கும்

நாடிக் காணாது உள்புக்கு நம்பர் 

  பாதம் தொழுது உள்ளம்

வாடிக் கடிதாய்க் கடல் காற்று என்று 

  எடுத்து மலர்க் கண்ணீர் வாரப்

பாடிக் காடு காள் புணர்ந்த 

  பரிசும் பதிகத்திடை வைத்தார்.  89 

 

 

அங்கு வைகிப் பணிந்து அருளால் 

  போவார் அகன் கோணாட்டு அரனார்

தங்கும் இடங்கள் வணங்கிப் போய் 

  பாண்டி நாடுதனைச் சார்ந்து

திங்கள் முடியார் திருப்புத்தூர் இறைஞ்சி 

  போந்து சேண் விளங்கும்

மங்குல் தவழும் மணிமாட மதுரை 

  மூதூர் வந்து அணைந்தார்.  90 

 

 

சேரமான் தோழரும் அச் 

  சேரர் பிரானும் பணிப்பூண்

ஆரமார்பரை மதுரை 

  ஆலவாயினில் வணங்க

வாரமா வந்து அணைய 

  வழுதியார் மனக்காதல்

கூர மாநகர் கோடித்து எதிர் 

  கொண்டு கொடு புக்கார்.  91 

 

 

தென்னவர் கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே

தொன் மதுரை நகரின் கண் இனிது இருந்த சோழனார்

அன்னவர்கள் உடன் கூட அணைய அவரும் கூடி

மன்னு திரு ஆலவாய் மணிக் கோயில் வந்து அணைந்தார்.  92 

 

 

திரு ஆலவாய் அமர்ந்த 

  செஞ்சடையார் கோயில் வலம்

வருவார் முன் வீழ்ந்து 

  இறைஞ்சி வன்தொண்டர் வழித்தொண்டு

தருவாரைப் போற்றி இசைத்துத் தாழ்ந்து 

  எழுந்து வாழ்ந்த தமிழ்ப் 

பெரு வாய்மை மலர் புனைந்து 

  பெரு மகிழ்ச்சி பிறங்கினார்.  93 

 

 

படியேறு புகழ்ச் சேரர் பெருமானும் 

  பார் மிசை வீழ்ந்து

அடியேனைப் பொருளாக அளித்த 

  திருமுகக் கருணை

முடிவேது என்று அறிந்திலேன் 

  என மொழிகள் தடுமாறக்

கடியேறு கொன்றையார் முன் 

  பரவிக் களி கூர்ந்தார்.  94 

 

 

செம்பியனார் உடன் செழியர் தாம் 

  பணிந்து சேரர் உடன்

நம்பியும் முன் புறத்து அணைய 

  நண்ணிய பேர் உவகையால்

உம்பர்பிரான் கோயிலின் இன்று 

  உடன் கொண்டுபோய் இருவர்க்கும்

பைம்பொன் மணி மாளிகையில் 

  குறை அறுத்தார் பஞ்சவனார்.  95 

 

 

உளம் மகிழக் கும்பிட்டு அங்கு 

  உறையும் நாள் உதியர் உடன்

கிளர் ஒளிப் பூண் வன் தொண்டர் 

  தாம் இருந்த இடம் கெழுமி

வளவனார் மீனவனார் வளம் 

  பெருக மற்றவரோடு

அளவளாவிய விருப்பால் அமர்ந்து 

  கலந்து இனிது இருந்தார்.  96 

 

 

அந் நாளில் மதுரை நகர் 

  மருங்கரனார் அமர் பதிகள்

பொன்னாரம் அணி மார்பில் 

  புரவலர் மூவரும் போதச்

செந்நாவின் முனைப்பாடித் திருநாடர் 

  சென்று இறைஞ்சிச்

சொன்மாலைகளும் சாத்தித் தொழத் 

  திருப்பூவணத்து அணைந்தார்.  97 

 

 

நீடு திருப் பூவணத்துக் 

  அணித்தாக நேர் செல்ல

மாடு வரும் திருத்தொண்டர் 

  மன்னிய அப் பதிகாட்டத்

தேடு மறைக்கு அரியாரைத் 

  திருவுடையார் என்று எடுத்துப்

பாடி இசையில் பூவணம் மீதோ 

  என்று பணிந்து அணைவார்.  98 

 

 

சென்று திருப் பூவணத்துத் தேவர் 

  பிரான் மகிழ் கோயில்

முன்றில் வலம் கொண்டு இறைவர் 

  முன் வீழ்ந்து பணிந்து எழுந்து

நின்று பரவிப்பாடி நேர் 

  நீங்கி உடன் பணிந்த

வென்றி முடி வேந்தருடன் 

  போந்து அங்கண் மேவினார்.  99 

 

 

அப்பதியில் அமர்ந்து இறைஞ்சிச் 

  சில நாளில் ஆரூரர்

முப்பெரும் வேந்தர்களோடு முதன் 

  மதுரை நகர் எய்தி

மெய்ப் பரிவில் திருவால வாயுடையார் 

  விரை மலர்த்தாள்

எப்பொழுதும் பணிந்து ஏத்தி 

  இன்புற்று அங்கு அமர்கின்றார்.  100 

 

 

செஞ்சடையார் திருவாப்பனூர் 

  திருவேடகம் முதலாம்

நஞ்சு அணியும் கண்டர் அவர் 

  நயந்த பதி நண்ணியே

எஞ்சலிலாக் காதலினால் இனிது 

  இறைஞ்சி மீண்டு அணைந்து

மஞ்சணையும் மதில் மதுரை 

  மாநகரில் மகிழ்ந்து இருந்தார்.  101 

 

 

பரமர் திருப்பரம் குன்றில் 

  சென்று பார்த்திபர் ஓடும்

புரம் எரித்தார் கோயில் வலம் 

  கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச்

சிரமலிமாலைச் சடையார் 

  திருவடிக்கீழ் ஆட்செய்யும்

அருமை நினைந்து அஞ்சுதும் 

  என்று ஆரூரர் பாடுவார்.  102 

 

 

கோத்திட்டை என்று எடுத்துக் 

  கோதில் திருப்பதிக இசை

மூர்த்தியார் தமை வணங்கி 

  முக்கோக்கள் உடன் முன்பே

ஏத்திய வண் தமிழ் மாலை 

  இன் இசைப் பாடிப் பரவி

சாத்தினார் சங்கரனார் 

  தங்கு திருப்பரங்குன்றில்.  103 

 

 

இறைவர் திருத்தொண்டு புரி 

  அருமையினை இரு நிலத்து

முறை புரியும் முதல் வேந்தர் 

  மூவர்களும் கேட்டு அஞ்சி

மறை முந் நூல் மணி மார்பின் 

  வன்தொண்டர் தமைப் பணிந்தார்

நிறை தவத்தோர் அப்பாலும் நிருத்தர் 

  பதி தொழ நினைந்தார்.  104 

 

 

அந் நாட்டுத் திருப்பதிகள் 

  பலவும் அணைந்து இறைஞ்சமலை

நன்னாட்டு வேந்தருடன் நம்பிதாம் 

  எழுந்து அருள

மின்னாட்டும் பல் மணிப்பூண் 

  வேந்தர் இருவரும் மீள்வார்

தென்னாட்டு வேண்டுவன செய்து 

  அமைப்பார் தமை விடுத்தார்.  105 

 

 

இரு பெரு வேந்தரும் இயல்பின் 

  மீண்டதற் பின் எழுந்து அருளும்

பொருவருஞ் சீர் வன்தொண்டர் புகழ்ச் 

  சேரர் உடன் புனிதர்

மருவிய தானம் பலவும் 

  பணிந்து போய் மலைச்சாரல்

குருமணிகள் வெயில் எறிக்கும் 

  குற்றாலம் சென்று அடைந்தார்.  106 

 

 

குற்றாலத்து இனிது அமர்ந்த கூத்தர் 

  குரை கழல் வணங்கிச்

சொல்தாம மலர் புனைந்து குறும் 

  பலாத் தொழுது இப்பால்

முற்றா வெண்மதி முடியார் 

  பதிபணிந்து மூவெயில்கள்

செற்றார் மன்னிய செல்வத் 

  திருநெல் வேலியை அணைந்தார்.  107 

 

 

நெல்வேலி நீற்று அழகர் தமைப் 

  பணிந்து பாடி நிகழ்

பல்வேறு பதி பிறவும் பணிந்து 

  அன்பால் வந்து அணைந்தார்

வில்வேடராய் வென்றி விசயன் 

  எதிர் பன்றிப் பின்

செல் வேத முதல்வரமர் 

  திரு இராமேச்சரத்து.  108 

 

 

மன்னும் இராமேச்சரத்து மாமணியை 

  முன் வணங்கிப்

பன்னும் தமிழ்த் தொடைசாத்திப் 

  பயில்கின்றார் பாம்பு அணிந்த

சென்னியர் மாதோட்டத்துத் 

  திருக்கேதீச்சரம் சார்ந்த

சொல்மலர் மாலைகள் சாத்தித் 

  தூரத்தே தொழுது அமர்ந்தார்.  109 

 

 

திரு இராமேச்சரத்துச் செழும் 

  பவளச் சுடர்க் கொழுந்தைப்

பரிவினால் தொழுது அகன்று 

  பரமர் பிற பணிந்து

பெருவிமானத்து இமையோர் வணங்கும் 

  பெரும் திருச்சுழியல்

மருவினார் வன்தொண்டர் 

  மலை வேந்தருடன் கூட.  110 

 

 

திருச்சுழியல் இடம் கொண்ட செம்பொன் 

  மலைச் சிலையாரைக்

கருச்சுழியில் வீழாமைக் காப்பாரைக் 

  கடல் விடத்தின்

இருள் சுழியும் மிடற்றாரை இறைஞ்சி 

  எதிர் இதழி மலர்ப்

பருச் சுழியத்துடன் ஊனாய் உயிர் 

  எனும் பா மலர் புனைந்தார்.  111 

 

 

அங்கணரைப் பணிந்து உறையும் 

  ஆரூரர்க்கு அவ்வூரில்

கங்குல் இடைக் கனவின் 

  கண் காளையாந் திருவடிவால்

செங்கையினில் பொன் செண்டும் 

  திருமுடியில் சுழியம் உடன்

எங்கும் இலாத் திருவேடம் 

  என்புருக முன்காட்டி.  112 

 

 

கானப் பேர் யாம் இருப்பது எனக் 

  கழறிக் கங்கை எனும்

வானப் பேராறும் உலவும் மா 

  முடியார் தாம் அகல

ஞானப் பேராளர் உணர்ந்து 

  அதிசயித்து நாகம் உடன்

ஏனப் பேரெயிறு அணிந்தார் அருள் 

  இருந்த பரிசு என்பார்.  113 

 

 

கண்டு அருளும் படி 

  கழறிற்றறிவார்க்கு மொழிந்து அருளிப்

புண்டரிகப் புனல் சுழியல் புனிதர் 

  கழல் வணங்கிப் போய்

அண்டர் பிரான் திருக்கானப்பேர் 

  அணைவார் ஆரூரர்

தொண்டர் அடித் தொழலும் எனும் 

  சொல் பதிகத் தொடை புனைவார்.  114 

 

 

காளையார் தமைக் கண்டு தொழப் 

  பெறுவது என்று என்று

தாளை நாளும் பரவத் 

  தருவார் பால் சார்கின்றார்

ஆளை நீள் இடைக் காண 

  அஞ்சிய நீர் நாய் அயலே

வாளைபாய் நுழைப் பழன 

  முனைப்பாடி வள நாடார்.  115 

 

 

மன்னு திருக்கானப் பேர் வளம் 

  பதியில் வந்து எய்தி

சென்னி வளர்மதி அணிந்தார் செழுங் 

  கோயில் வலம் கொண்டு

முன்னிறைஞ்சி உள்ளணைந்து முதல்வர் 

  சேவடி தாழ்ந்து

பன்னு செழுந்தமிழ் மாலை 

  பாடினார் பரவினார்.  116 

 

 

ஆராத காதலுடன் அப்பதியில் 

  பணிந்து ஏத்திச்

சீராரும் திருத்தொண்டர் சில நாள் 

  அங்கு அமர்ந்து அருளிக்

காராரும் மலர்ச்சோலைக் கானப் 

  பேர் கடந்து அணைந்தார்

போரானேற்றார் கயிலைப் 

  பொருப்பர் திருப்புனவாயில்.  117 

 

 

புனல் வாயில் பதி அமர்ந்த 

  புனிதர் ஆலயம் புக்கு

மனம் ஆர்வம் உறச் சித்த நீ 

  நினை என்னொடு என்றே

வின வான தமிழ் பாடி 

  வீழ்ந்து இறைஞ்சி அப்பதியில்

சினயானை உரித்து அணிந்தார் 

  திருப்பாதம் தொழுது இருந்தார்.  118 

 

 

திருப்புன வாயில் பதியில் 

  அமர்ந்த சிவனார் மகிழும்

விருப்புடைய கோயில் பல 

  பணிந்து அருளால் மேவினார்

பொருப்பினொடு கானகன்று புனல் 

  பொன்னி நாடு அணைந்து

பருப்பத வார் சிலையார் தம் 

  பாம்பு அணிமா நகர் தன்னில்.  119 

 

 

பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் 

  மருங்கு பல பதியும்

வேதாதி நாதர் கழல் வணங்கி 

  மிகு விரைவின் உடன்

சூதாரும் துணை முலையார் 

  மணிவாய்க்குத் தோற்று இரவு

சேதாம்பல் வாய் திறக்கும் 

  திருவாரூர் வந்து அணைந்தார்.  120 

 

 

திருநாவலூர் வேந்தர் சேரர் 

  குல வேந்தர் உடன்

வருவாரைத் திருவாரூர் 

  வாழ்வார்கள் எதிர்கொள்ளத்

தரும் காதலுடன் வணங்கித் 

  தம் பெருமான் கோயிலினுள்

பெருகு ஆர்வத்தொடு விரும்பும் பெரும் 

  பேறு பெறப் புகுந்தார்.  121 

 

 

வாச மலர்க் கொன்றையார் 

  மகிழ்கோயில் வலம் கொண்டு

நேசமுற முன் இறைஞ்சி நெடும் 

  பொழுது எலாம் பரவி

ஏசறவால் திருப்பதிகம் எடுத்து 

  ஏத்தி எழுந்து அருளால்

பாச வினைத் தொடக்கு அறுப்பார் 

  பயில் கோயில் பணிந்து அணைவார்.  122 

 

 

பரவையார் மாளிகையில் பரிசனங்கள் 

  முன் எய்த

விரவு பேர் அலங்கார விழுச் 

  செல்வம் மிகப் பெருக

வரவு எதிர் கொண்டு அடிவணங்க 

  வன் தொண்டர் மலைநாட்டுப்

புரவலனாரையும் கொண்டு பொன் 

  அணி மாளிகை புகுந்தார்.  123 

 

 

பரவியே பரவையார் பரிவு 

  உடனே பணிந்து ஏத்தி

விரவிய போனகங்கறிகள் விதம் 

  பலவாகச் சமைத்துப்

பரிகலமும் பாவாடை பகல் 

  விளக்கும் உடன் அமைத்துத்

திரு அமுது செய்வித்தார் 

  திருந்திய தேன் மொழியினார்.  124 

 

 

மங்கலமாம் பூசனைகள் பரவையார் 

  செய மகிழ்ந்து

தங்கி இனிது அமர் 

  கின்றார் தம்பிரான் கோயிலினுள்

பொங்கு பெரும் காலம் எலாம் 

  புக்கு இறைஞ்சி புறத்து அணைந்து

நங்கள் பிரான் அருள் மறவா 

  நல் விளையாட்டினை நயந்தார்.  125 

 

 

நிலைச் செண்டும் பரிச் செண்டும் 

  வீசி மிக மகிழ்வு எய்தி

விலக்கரும் போர்த் தகர்ப் பாய்ச் சல் 

  கண்டு அருளி வென்றி பெற

மலைக்கு நெடு முள் கணைக்கால் 

  வாரணப் போர் மகிழ்ந்து அருளி

அலைக்கும் அறப் பல புள்ளின் 

  அமர் விரும்பி அமர்கின்றார்.  126 

 

 

விரவு காதல் மீக்கூர மேவும் 

  நாள்கள் பல செல்லக்

கரவில் ஈகைக் கேரளனார் தங்கள் 

  கடல் சூழ் மலை நாட்டுப்

பரவையார் தம் கொழுநனார் தம்மைப் 

  பணிந்து கொண்டு அணைவான்

இரவும் பகலும் தொழுது இரக்க 

  இசைந்தார் அவரும் எழுந்து அருள.  127 

 

 

நங்கை பரவையார் உள்ளத்து இசைவால் 

  நம்பி எழுந்து அருளத்

திங்கள் முடியார் திரு அருளைப் 

  பரவிச் சேரமான் பெருமாள்

எங்கும் உள்ள அடியாருக்கு ஏற்ற 

  பூசை செய்து அருளிப்

பொங்கும் முயற்சி இருவரும் போய்ப் 

  புக்கார் புனிதர் பூங்கோயில்.  128 

 

 

தம்பிரானைத் தொழுது அருளால் போந்து 

  தொண்டர் சார்ந்து அணைய

நம்பி ஆருரரும் சேரர் 

  நன்னாட்டு அரசனார் ஆய

பைம் பொன் மணி நீள் முடிக் 

  கழறிற்றறிவார் தாமும் பயணம் உடன்

செம்பொன் நீடு மதில் ஆரூர் 

  தொழுது மேல் பால் செல்கின்றார்.  129 

 

 

பொன் பரப்பி மணிவரன்றி 

  புனல் பரக்கும் காவேரித்

தென் கரை போய்ச் சிவன் மகிழ்ந்த 

  கோயில் பல சென்று இறைஞ்சி

மின் பரப்பும் சடை அண்ணல் 

  விரும்பும் திருக் கண்டியூர்

அன்புருக்கும் சிந்தை உடன் 

  பணிந்து புறத்து அணைந்தார்கள்.  130 

 

 

வட கரையில் திருவையாறு எதிர் 

  தோன்ற மலர்க் கரங்கள்

உடலுருக உள்ளுருக உச்சியின்மேல் 

  குவித்து அருளிக்

கடல் பரந்தது எனப் பெருகும் 

  காவிரியைக் கடந்து ஏறித்

தொடர்வு உடைய திருவடியை 

  தொழுவதற்கு நினைவுற்றார்.  131 

 

 

ஐயாறு அதனைக் கண்டு தொழுது 

  அருள ஆரூரர் தமை நோக்கி

செய்யாள் பிரியாச் சேரமான் 

  பெருமாள் அருளிச் செய்கின்றார்

மையார் கண்டர் மருவு 

  திரு ஐயாறு இறைஞ்ச மனம் உருகி

நையா நின்றது இவ்வாறு கடந்து 

  பணிவோம் நாம் என்ன.  132 

 

 

ஆறு பெருகி இரு கரையும் 

  பொருது விசும்பில் எழுவது போல்

வேறு நாவாய் ஓடங்கள் மீது 

  செல்லா வகை மிகைப்ப

நீறு விளங்கும் திருமேனி 

  நிறுத்தர் பாதம் பணிந்தன்பின்

ஆறு நெறியாச் செலவுரியார் 

  தரியாது அழைத்துப் பாடுவார்.  133 

 

 

பரவும் பரிசு ஒன்று எடுத்து 

  அருளிப் பாடும் திருப்பாட்டின் முடிவில்

அரவம் புனைவார் தமை ஐயாறு 

  உடைய அடிகளோ என்று

விரவும் வேட்கை உடன் அழைத்து 

  விளங்கும் பெருமைத் திருப்பதிகம்

நிரவும் இசையில் வன்தொண்டர் 

  நின்று தொழுது பாடுதலும்.  134 

 

 

மன்றில் நிறைந்து நடமாட 

  வல்லார் தொல்லை ஐயாற்றில்

கன்று தடை உண்டு எதிர் 

  அழைக்க கதறிக் கனைக்கும் புனிற்றாப்போல்

ஒன்றும் உணர்வால் சராசரங்கள் எல்லாம் 

  கேட்க ஓலம் என

நின்று மொழிந்தார் பொன்னி மா 

  நதியும் நீங்கி நெறி காட்ட.  135 

 

 

விண்ணின் முட்டும் பெருக்காறு மேல்பால் 

  பளிக்கு வெற்பு என்ன

நண்ணி நிற்கக் கீழ்பால் நீர் 

  வடிந்த நடுவு நல்லவழிப்

பண்ணிக் குளிர்ந்த மணல் பரப்பக் 

  கண்டதொண்டர் பயில் மாரி

கண்ணில் பொழிந்து மயிர்ப் புளகம் 

  கலக்கக் கை அஞ்சலி குவித்தார்.  136 

 

 

நம்பி பாதம் சேரமான் 

  பெருமாள் பணிய நாவலூர்

செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் 

  பெருமான் எதிர் வணங்கி

உம்பர் நாதர் உமக்கு அளித்தது 

  அன்றோ என்ன உடன் மகிழ்ந்து

தம்பிரானைப் போற்றி இசைத்து தடம் 

  காவேரி நடு அணைந்தார்.  137 

 

 

செஞ்சொல் தமிழ் நாவலர் கோனும் 

  சேரர் பிரானும் தம் பெருமான்

எஞ்சல் இல்லா நிறை ஆற்றின் 

  இடையே அளித்த மணல் வழியில்

தஞ்சம் உடைய பரிசனமும் 

  தாமும் ஏறித் தலைச்சென்று

பஞ்ச நதி வாணரைப் பணிந்து 

  விழுந்தார் எழுந்தார் பரவினார்.  138 

 

 

அங்கண் அரனார் கருணையினை ஆற்றாது 

  ஆற்றித் திளைத்து இறைஞ்சித்

தங்கள் பெருமான் திரு அருளால் 

  தாழ்ந்து மீண்டும் தடம்பொன்னித்

பொங்கு நதியின் முன் வந்த 

  படியே நடுவு போந்து ஏறத்

துங்க வரை போல் நின்ற 

  நீர் துரந்து தொடரப் பெருகியதால்.  139 

 

 

ஆய செயலின் அதிசயத்தைக் 

  கண்ட கரையில் ஐயாறு

மேய பெருமான் அருள் போற்றி 

  வீழ்ந்து தாழ்ந்து மேல்பால் போய்த்

தூய மதிவாழ் சடையார் தம் 

  பதிகள் பிறவும் தொழுது ஏத்திச்

சேய கொங்க நாடு அணைந்தார் 

  திருவாரூரர் சேரர் உடன்.  140 

 

 

கொங்கு நாடு கடந்து போய்க் 

  குலவு மலைநாட்டு எல்லையுற

நங்கள் பெருமான் தோழனார் 

  நம்பி தம்பிரான் தோழர்

அங்கண் உடனே அணை எழுந்து 

  அருளா நின்றார் எனும் விருப்பால்

எங்கும் அந் நாட்டு உள்ளவர்கள் 

  எல்லாம் எதிர்கொண்டு இன்புறுவர்.  141 

 

 

பதிகள் எங்கும் தோரணங்கள் 

  பாங்கர் எங்கும் பூவனங்கள்

வதிகள் எங்கும் குளிர் பந்தர் 

  மனைகள் எங்கும் அகில் புகைக்கார்

நதிகள் எங்கும் மலர்ப் பிறங்கல் 

  ஞாங்கர் எங்கும் ஓங்குவன

வீதிகள் எங்கும் முழவின் ஒலி 

  நிலங்கள் எங்கும் பொலம் சுடர்ப்பூ.  142 

 

 

திசைகள் தோறும் வரும் பெருமை 

  அமைச்சர் சேனைப் பெருவெள்ளம்

குசை கொள் வாசி நிரை வெள்ளம் 

  கும்ப யானை அணி வெள்ளம்

மிசை கொள் பண்ணும் பிடிவெள்ளம் 

  மேவும் சோற்று வெள்ளம் கண்டு

அசைவில் இன்பப் பெருவெள்ளத்து அமர்ந்து 

  கொடுங் கோளூர் அணைந்தார்.  143 

 

 

கொடுங்கோ ளூரின் மதில் வாயில் 

  அணி கோடித்து மருகில் உடுத்து

தொடுங்கோபுரங்கள் மாளிகைகள் சூளி 

  குளிர் சாலைகள் தெற்றி

நெடுங்கோ நகர்கள் ஆடல் அரங்கு 

  நிரந்த மணித் தாமம் கமுகு

விடுங்கோதைப் பூந் தாமங்கள் 

  நிரைத்து வெவ்வேறு அலங்கரித்து.  144 

 

 

நகர மாந்தர் எதிர் கொள்ள 

  நண்ணி எண்ணில் அரங்கு தொறும்

மகர குழை மாதர்கள் பாடி 

  ஆட மணி வீதியில் அணைவார்

சிகர நெடும் மாளிகை அணையார் 

  சென்று திருவஞ்சைக் களத்து

நிகரில் தொண்டர் தமைக் கொண்டு 

  புகுந்தார் உதியர் நெடுந்தகையார்.  145 

 

 

இறைவர் கோயில் மணி முன்றில் 

  வலம் கொண்டு இறைஞ்சி எதிர்புக்கு

நிறையும் காதல் உடன் வீழ்ந்து 

  பணிந்து நேர் நின்று ஆரூரர்

முறையில் விளம்பும் திருப்பதிகம் முடிப்பது 

  கங்கை என்று எடுத்துப்

பிறை கொள் முடியார் தமைப்பாடி 

  பரவிப் பெருமாளுடன் தொழுதார்.  146 

 

 

தொழுது தினைத்துப் புறம் போந்து 

  தோன்றப் பண்ணும் பிடிமேற்பார்

முழுதும் ஏத்த நம்பியை முன்பு  

  ஏற்றிப் பின்பு தாம் ஏறிப்

பழுதில் மணிச் சாமரை வீசிப் 

  பைம்பொன் மணி மாளிகையில் வரும்

பொழுது மறுகில் இருபுடையும் 

  மிடைந்தார் வாழ்த்திப் புகல்கின்றார்.  147 

 

 

நல்ல தோழர் நம் பெருமாள் 

  தமக்கு நம்பி இவர் என்பார்

எல்லை இல்லாத் தவம் முன்பு என் 

  செய்தோம் இவரைத் தொழ என்பார்

செல்வம் இனி என் பெறுவது நம் 

  சிலம்பு நாட்டுக்கு என உரைப்பார்

சொல்லும் தரமோ பெருமாள் செய் 

  தொழிலைப் பாரீர் எனத் தொழுவார்.  148 

 

 

பூவும் பொரியும் பொன் துகளும் 

  பொழிந்து பணிவார் பொருவில் இவர்

மேவும் பொன்னித் திருநாடே புவிக்குத் 

  திலதம் என வியப்பார்

பாவும் துதிகள் எம் மருங்கும் 

  பயில வந்து மாளிகையின்

மாவும் களிறும் நெருங்கும் மணி 

  வாயில் புகுந்து மருங்கு இழிந்தார்.  149 

 

 

கழறிற்றறியுந் திருவடியும் கலை 

  நாவலர் தம் பெருமானாம்

முழவில் பொலியும் திரு நெடுந்தோள் 

  முனைவர் தம்மை உடன் கொண்டு

விழவில் பொலியும் மாளிகையில் 

  விளங்கு சிங்காசனத்தின் மிசை

நிழல் திக்கு ஒளிரும் பூணாரை 

  இருத்தித் தாமும் நேர் நின்று.  150 

 

 

செம்பொன் கரக வாச நீர் 

  தேவிமார்கள் எடுத்து ஏந்த

அம்பொன் பாதம் தாம் விளக்கி 

  அருளப் புகலும் ஆரூரர்

தம்பொன் தாளை வாங்கி இது தகாது 

  என்று அருளத் தரணியில் வீழ்ந்து

எம் பெற்றிமையால் செய்தன இங்கு 

  எல்லாம் இசைய வேண்டும் என.  151 

 

 

பெருமாள் வேண்ட எதிர் மறுக்க 

  மாட்டார் அன்பில் பெரும் தகையார்

திருமா நெடுந்தோள் உதியர் பிரான் 

  செய்த எல்லாம் கண்டு இருந்தார்

அருமானம் கொள் பூசனைகள் அடைவே 

  எல்லாம் அளித்து அதன்பின்

ஒருமா மதிவெண்குடை வேந்தர் உடனே 

  அமுது செய்து வந்தார்.  152 

 

 

சேரர் உடனே திருவமுது செய்த 

  பின்பு கை கோட்டி

ஆரம் நறுமென் கலவை மான் மதச் 

  சாந்து ஆடை அணிமணிப் பூண்

ஈர விரை மென்மலர்ப் பணிகள் 

  இனைய முதலாயின வருக்கம்

சார எடுத்து வன் தொண்டர் 

  சாத்தி மிகத் தமக்கு ஆக்கி.  153 

 

 

பாடல் ஆடல் இன்னியங்கள் 

  பயில்தல் முதலாம் பண்ணையினில்

நீடும் இனிய விநோதங்கள் நெருங்கு 

  காலம் தொறும் நிகழ

மாடு விரைப்பூந்தருமணஞ்செய் 

  ஆராமங்கள் வைகுவித்துக்

கூட முனைப் பாடியார் கோவை 

  கொண்டு மகிழ்ந்தார் கோதையார்.  154 

 

 

செண்டாடும் தொழில் மகிழ்வும் சிறு 

  சோற்றுப் பெரும் சிறப்பும்

வண்டாடும் மலர் வாவி 

  மருவிய நீர் விளையாட்டும்

தண்டாமும் மத கும்பத் தட 

  மலைப்போர் சல மற்போர்

கண்டாரா விருப்பு எய்தக் 

  காவலனார் காதல் செய்நாள்.  155 

 

 

நாவலர் தம் பெருமானும் 

  திருவாரூர் நகர் ஆளும்

தேவர் பிரான் கழல் ஒரு 

  நாள் மிக நினைந்த சிந்தையராய்

ஆவியை ஆரூரானை 

  மறக்கலுமாமே என்னும்

மேவிய சொல் திருப்பதிகம் 

  பாடியே வெருவுற்றார்.  156 

 

 

திருவாரூர் தனை நினைந்து 

  சென்று தொழுவேன் என்று

மரு ஆர்வத் தொண்டர் உடன் 

  வழி கொண்டு செல்பொழுதில்

ஒருவா நண் புள்ளுருக உடன் 

  எழுந்து கை தொழுது

பெருவான வரம்பனார் பிரிவு 

  ஆற்றார் பின் செல்வார்.  157 

 

 

வன் தொண்டர் முன் எய்தி 

  மனம் அழிந்த உணர்வினராய்

இன்று உமது பிரிவு ஆற்றேன் 

  என் செய்கேன் யான் என்ன

ஒன்றுநீர் வருந்தாதே உமது 

  பதியின் கண் இருந்து

அன்றினார் முனை முருக்கி அரசு 

  ஆளும் என மொழிந்தார்.  158 

 

 

ஆரூரர் மொழிந்து அருள அது 

  கேட்ட அருள் சேரர்

பாரோடு விசும்பு ஆட்சி 

  எனக்கு உமது பாதமலர்

தேரூரும் நெடும் வீதித் 

  திருவாரூர்க்கு எழுந்து அருள

நேரூரும் மனக் காதல் 

  நீக்கவும் அஞ்சுவன் என்றார்.  159 

 

 

மன்னவனார் அது மொழிய 

  வன்தொண்டர் எதிர் மொழிவார்

என்னுயிருக்கு இன் உயிராம் 

  எழில் ஆரூர்ப் பெருமானை

வன்னெஞ்சக் கள்வனேன் மறந்து 

  இரேன் மதி அணிந்தார்

இன்னருளால் அரசளிப்பீர் நீர் 

  இருப்பீர் என இறைஞ்ச.  160 

 

 

மற்றவரும் பணிந்து இசைந்தே 

  மந்திரிகள் தமை அழைத்து

பொற்பு நிறை தொல் 

  நகரில் இற்றைக்கு முன்புகுந்த

நற்பெரும் பண்டார நானா 

  வருக்கம் ஆன வெலாம்

பற்பலவாம் ஆளின் மிசை 

  ஏற்றிவரப் பண்ணும் என.  161 

 

 

ஆங்கவரும் அன்று வரை 

  ஆயம் ஆகிய தனங்கள்

ஓங்கிய பொன் நவ மணிகள் 

  ஒளிர் மணிப்பூண் துகில் வருக்கம்

ஞாங்கர் நிறை விரையுறுப்பு வருக்கம் 

  முதல் நலம் சிறப்பத்

தாங்கு பொதி வினைஞர் மேல் 

  தலம் மலியக் கொண்டு அணைந்தார்.  162 

 

 

மற்றவற்றின் பரப்பு எல்லாம் 

  வன் தொண்டர் பரிசனத்தின்

முற்படவே செலவு இட்டு 

  முனைப்பாடித் திருநாடார்

பொற் பதங்கள் பணிந்து அவரைத் 

  தொழுது எடுத்துப் புணை அலங்கல்

வெற்புயர் தோள் உறத் தழுவி 

  விடை அளித்தார் வன்தொண்டர்.  163 

 

 

ஆரூரர் அவர் தமக்கு விடை 

  அருளி அங்கு அன்று

காரூரும் மலைநாடு கடந்து 

  அருளிக் கல் சுரமும்

நீரூரும் கான் யாரும் 

  நெடும் கானும் பலகழிய

சீரூரும் திருமுருன் 

  பூண்டி வழிச்செல்கின்றார்.  164 

 

 

திரு முருகன் பூண்டி அயல் 

  செல்கின்ற போழ்தின் கண்

பொருவிடையார் நம்பிக்குத் 

  தாமே பொன் கொடுப்பதலால்

ஒருவர் கொடுப்பக் கொள்ள 

  ஒண்ணாமைக்கு அதுவாங்கிப்

பெருகருளால் தாம் கொடுக்கப் 

  பெறுவதற்கோ அது அறியோம்.  165 

 

 

வென்றி மிகு பூதங்கள் 

  வேடர் வடிவாய் சென்று

வன்தொண்டர் பண்டாரம் கவர 

  அருள் வைத்து அருள

அன்றினார் புரம் எரித்தார் 

  அருளால் வேட்டுவப் படையாய்ச்

சென்று அவர் தாம் வரும் 

  வழியில் இருபாலும் செயிர்த்து எழுந்து.  166 

 

 

வில் வாங்கி அலகம்பு 

  விசை நாணில் சந்தித்துக்

கொல்வோம் இங்கு இட்டுப்போம் 

  எனக் கோபத்தால் குத்தி

எல்லையில் பண்டாரம் எல்லாம் 

  கவர்ந்து கொள இரிந்தோடி

அல்லலுடன் பறியுண்டார் ஆரூரர் 

  மருங்கு அணைந்தார்.  167 

 

 

ஆரூரர் தம்பால் அவ்வேடுவர் 

  சென்று அணையாதே

நீரூருஞ் செஞ்சடையார் அருளினால் 

  நீங்க அவர்

சேரூராம் திருமுருகன் பூண்டியினில் 

  சென்று எய்திப்

போரூரு மழவிடையார் கோயிலை 

  நாடிப் புக்கார்.  168 

 

 

அங்கணர் தம் கோயிலினை 

  அஞ்சலி கூப்பித் தொழுது

மங்குலுற நீண்ட திருவாயிலினை 

  வந்து இறைஞ்சிப்

பொங்கு விருப்புடன் புக்கு வலம் 

  கொண்டு புனித நதி

திங்கள் முடிக்கு அணிந்தவர் தம் 

  திருமுன்பு சென்று அணைந்தார்.  169 

 

 

உருகிய அன்பொடு கைகள் 

  குவித்து விழுந்து உமைபாகம்

மருவிய தம் பெருமான் 

  முன் வன்தொண்டர் பாடினார்

வெருவுறவேடுவர் பறிக்கும் 

  வெஞ்சுரத்தில் எத்துக்கு இங்கு

அருகு இருந்தீர் எனக்கு 

  கொடுகு வெஞ்சிலை அஞ்சொற்பதிகம்.  170 

 

 

பாடியவர் பரவுதலும் பரம்பொருளாம் 

  அவர் அருளால்

வேடுவர் தாம் பறித்த பொருள் 

  அவை எல்லாம் விண்ணெருங்க

நீடு திரு வாயிலின் முன் 

  குவித்திடலும் நேர் இறைஞ்சி

ஆடும் அவர் திருவருளால் 

  அப்படியே கைக் கொண்டார்.  171 

 

 

கைக்கொண்டு கொடுபோம் அக் 

  கைவினைஞர் தமை ஏவி

மைக் கொண்ட மிடற்றாரை 

  வணங்கிப்போய்க் கொங்கு அன்று

மெய்க் கொண்ட காதலினால் விரைந்து 

  ஏகி மென் கரும்பும்

செய்க் கொண்ட சாலியுஞ்சூழ் 

  திருவாரூர் சென்று அணைந்தார்.  172 

 

 

நாவலர் மன்னவர் அருளால் 

  விடை கொண்ட நரபதியார்

ஆவியின் ஒன்றா நண்பின் 

  ஆரூரர் தமை நினைந்து

மாவலரும் சோலை மா 

  கோதையினில் மன்னிமலைப்

பூவலயம் பொது நீக்கி அரசு 

  உரிமை புரிந்து இருந்தார்.  173 

 

 

இந் நிலைமை உதியர் பிரான் 

  எம்பிரான் வன்தொண்டர்

பொன்னி வளநாடு அகன்று 

  மாகோதையினில் மேல் புகுந்து

மன்னு திருக் கயிலை யினில் 

  மத வரைமேல் எழுந்து அருள

முன்னர் வயப்பரி உகைக்கும் 

  திருத்தொழில் பின்மொழிகின்றாம்.  174 

 

 

மலை மலிந்த திருநாட்டு மன்னவனார் 

  மா கடல் போல்

சிலை மலிந்த கொடித் தானைச் 

  சேரலனார் கழல் போற்றி

நிலை மலிந்த மணிமாடம் நீள் 

  மறுகு நான் மறை சூழ்

கலை மலிந்த புகழ்க் காழிக் 

  கணநாதர் திறம் உரைப்பாம்.  175 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

பூசலார் நாயனார்
View Details
திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details