பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

047 புகழ்ச்சோழ நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

குலகிரியின் கொடுமுடிமேல் கொடி 

  வேங்கைக் குறி எழுதி

நிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு 

  நிலம் காத்து இனிது அளிக்கும்

மலர் புகழ் வண் தமிழ்ச் 

  சோழர் வளநாட்டு மாமூதூர்

உலகில் வளர் அணிக்கெல்லாம் 

  உள் உறையூராம் உறையூர்.  1 

 

 

அளவில் பெரும் புகழ் நகரம் 

  அதனில் அணிமணி விளக்கும்

இள வெயிலின் சுடர்படலை 

  இரவு ஒழிய எறிப்பனவாய்க்

கிளர் ஒளி சேர் நெடு வானப் 

  பேர்யாற்றுக் கொடு கெழுவும்

வளர் ஒளி மாளிகை நிரைகள் 

  மருங்கு உடைய மறுகு எல்லாம்.  2 

 

 

நாக தலத்தும் பிலத்தும் 

  நானிலத்தும் நலம் சிறந்த

போகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் 

  பொருவிறந்த வளத்தினவாய்

மாக நிறைந்திட மலிந்த 

  வரம்பில் பல பொருள் பிறங்கும்

ஆகரம் ஒத்து உள அளவில் 

  ஆவண வீதிகள் எல்லாம்.  3 

 

 

பார் நனைய மதம் பொழிந்து 

  பனி விசும்பு கொள முழங்கும்

போர் முக வெம் கறை அடியும் 

  புடையினம் என்று அடையவரும்

சோர் மழையின் விடு மதத்துச் 

  சுடரு நெடுமின் ஓடைக்

கார் முகிலும் பல தெரியா 

  களிற்று நிரைக் களம் எல்லாம்.  4 

 

 

படுமணியும் பரிச் செருக்கும் ஒலி 

  கிளரப் பயில் புரவி

நெடு நிரை முன் புல்லுண் வாய் 

  நீர்த் தரங்க நுரை நிவப்ப

விடு சுடர் மெய் உறை 

  அடுக்கல் முகில் படிய விளங்குதலால்

தொடு கடல்கள் அனைய பல 

  துரங்க சாலைகள் எல்லாம்.  5 

 

 

துளைக்கை ஐராவதக் களிறும் 

  துரங்க அரசும் திருவும்

விளைத்த அமுதும் தருவும் 

  விழுமணியும் கொடுபோத

உளைத்த கடல் இவற்று ஒன்று 

  பெற வேண்டி உம்பரூர்

வளைத்தது போன்று உளது அங்கண் 

  மதில் சூழ்ந்த மலர்க் கிடங்கு.  6 

 

 

கார் ஏறும் கோபுரங்கள் கதிர் 

  ஏறும் மலர்ச் சோலை

தேர் ஏறும் அணி வீதி 

  திசை ஏறும் வசையில் அணி

வார் ஏறு முலை மடவார் 

  மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண்

பார் ஏறும் புகழ் உறந்தைப் 

  பதியின் வளம் பகர்வரிதால்.  7 

 

 

அந் நகரில் பார் அளிக்கும் 

  அடல் அரசர் ஆகின்றார்

மன்னும் திருத் தில்லை நகர் 

  மணி வீதி அணி விளக்கும்

சென்னி நீடு அனபாயன் 

  திருக்குலத்து வழி முதலோர்

பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச் 

  சோழர் எனப் பொலிவார்.  8 

 

 

ஒரு குடைக் கீழ் மண்மகளை 

  உரிமையினில் மணம் புணர்ந்து

பருவரைத் தோள் வென்றியினால் பார் 

  மன்னர் பணி கேட்பத் 

திருமலர்த்தும் பேருலகும் 

  செங்கோலின் முறை நிற்ப

அருமறைச் சைவம் தழைப்ப 

  அரசு அளிக்கும் அந்நாளில்.  9 

 

 

பிறை வளரும் செஞ் சடையார் 

  பேணும் சிவாலயம் எல்லாம்

நிறை பெரும் பூசனை விளங்க 

  நீடு திருத்தொண்டர் தமைக்

குறை இரந்து வேண்டுவன 

  குறிப்பின் வழி கொடுத்தருளி

முறை புரிந்து திருநீற்று முதல் 

  நெறியே பாலிப் பார்.  10 

 

 

அங்கண் இனிது உறையும் நாள் 

  அரசு இறைஞ்ச வீற்றிருந்து

கொங்கரொடு குட புலத்துக் கோ 

  மன்னர் திறை கொணரத்

தங்கள் குல மரபின் முதல் 

  தனி நகராம் கருவூரில்

மங்கல நாள் அரசு உரிமைச் 

  சுற்றமுடன் வந்து அணைந்தார்.  11 

 

 

வந்து மணி மதில் கருவூர் 

  மருங்கு அணைவார் வானவர் சூழ்

இந்திரன் வந்து அமரர் புரி 

  எய்துவான் என எய்தி

சிந்தை களி கூர்ந்து அரனார் 

  மகிழ் திரு ஆநிலைக் கோயில்

முந்துற வந்து அணைந்து இறைஞ்சி 

  மொய்ஒளி மாளிகை புகுந்தார்.  12 

 

 

மாளிகை முன் அத்தாணி 

  மண்டபத்தின் மணிபுனை பொன்

கோளரி ஆசனத்து இருந்து குட 

  புல மன்னவர் கொணர்ந்த

ஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் 

  பரி துலைக் கனகம்

நீளிடைவில் விலகு மணி முதல் 

  நிறையும் திறை கண்டார்.  13 

 

 

திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் 

  உரிமைத் தொழில் அருளி

முறை புரியும் தனித் திகரி 

  முறைநில்லா முரண் அரசர்

உறை அரணம் உளவாகில் தெரிந்து 

  உரைப்பீர் என உணர்வு

நிறை மதி நீடு அமைச்சர்க்கு 

  மொழிந்தருளி நிகழும் நாள்.  14 

 

 

சென்று சிவகாமியார் கொணர் 

  திருப்பள்ளித் தாமம்

அன்று சிதறும் களிற்றை 

  அற எறிந்து பாகரையும்

கொன்ற எறி பத்தர் எதிர் 

  எனையும் கொன்று அருளும் என

வென்றி வடிவாள் கொடுத்துத் 

  திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.  15 

 

 

விளங்கு திரு மதிக் குடைக்கீழ் 

  வீற்றிருந்து பார் அளிக்கும்

துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் 

  முறைமை நெறி அமைச்சர்

அளந்த திறை முறை கொணரா 

  அரசன் உளன் ஒருவன் என

உளம் கொள்ளும் வகை உரைப்ப 

  உறுவியப் பால் முறுவலிப்பார்.  16 

 

 

ஆங்கவன் யார் என்று அருள 

  அதிகன் அவன் அணித்தாக

ஓங்கு எயில் சூழ் மலை 

  அரணத்துள் உறைவான் என உரைப்ப

ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் 

  அரண் உளதோ படை எழுந்த

பாங்கரணம் துகளாகப் பற்று 

  அறுப்பீர் எனப் பகர்ந்தார்.  17 

 

 

அடல் வளவர் ஆணையினால் 

  அமைச்சர்களும் புறம் போந்து

கடல் அனைய நெடும் படையைக் 

  கைவகுத்து மேல் செல்வார்

படர் வனமும் நெடும் கிரியும் 

  பயில் அரணும் பொடி ஆக

மிடல் உடை நால் கருவியுற 

  வெஞ்சமரம் மிக விளைத்தார்.  18 

 

 

வளவனார் பெரும் சேனை வஞ்சி 

  மலர் மிலைந்து ஏற

அளவில் அரண் அக்குறும்பில் அதிகர் 

  கோன் அடல் படையும்

உளம் நிறை வெம் சினம் திருகி 

  உயர் காஞ்சி மிலைந்து ஏறக்

கிளர் கடல்கள் இரண்டு 

  என்ன இருபடையும் கிடைத்தனவால்.  19 

 

 

கயமொடு கயம் எதிர் குத்தின

அயமுடன் அயமுனை முட்டின

வயவரும் வயவரும் உற்றனர்

வியனமர் வியல் இடம் மிக்கதே.  20 

 

 

மலையொடு மலைகள் மலைந்தென

அலை மத அருவி கொழிப்பொடு

சிலையினர் விசையின் மிசைத் தெருங் 

கொலை மத கரிகொலை உற்றவே.  21 

 

 

சூறை மாருதம் ஒத்து எதிர்

ஏறு பாய் பரி வித்தகர்

வேறு வேறு தலைப் பெய்து

சீறி ஆவி செகுத்தனர்.  22 

 

 

மண்டு போரின் மலைப்பவர்

துண்டம் ஆயிட உற்று எதிர்

கண்டர் ஆவி கழித்தனர்

உண்ட சோறு கழிக்கவே.  23 

 

 

வீடினார் உடலில் பொழி

நீடுவார் குருதிப் புனல்

ஓடும் யாறென ஒத்தது

கோடு போல்வ பிணக் குவை.  24 

 

 

வானிலாவு கருங்கொடி

மேனிலாவு பருந்து இனம்

ஏனை நீள் கழுகின் குலம்

ஆன ஊணொடு எழுந்தவே.  25 

 

 

வரிவில் கதை சக்கர(ம்)முற்கரம் வாள்

சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல்

எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல்

முரி உற்றன உற்றன மொய்க் களமே.  26 

 

 

வடிவேல் அதிகன் படைமாள வரைக்

கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்

கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்

முடி நேரியனார் படை முற்றியதே.  27 

 

 

முற்றும் பொரு சேனை முனைத் தலையில்

கற்றிண் புரிசைப் பதி கட்டழியப்

பற்றும் துறை நொச்சி பரிந்து உடையச்

சுற்றும் படை வீரர் துணித்தனரே.  28 

 

 

மாறுற்ற விறல் படை வாள் அதிகன்

நூறுற்ற பெரும்படை நூழில் படப்

பாறுற்ற எயில் பதி பற்றற விட்டு

ஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே.  29 

 

 

அதிகன் படை போர் பொருதற்றதலைப் 

பொதியின் குவை எண்ணில போயின பின்

நிதியின் குவை மங்கையர் நீள் பரிமா

எதிரும் கரி பற்றினர் எண்ணிலரே.  30 

 

 

அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்

இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்

முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்

தரணித் தலைவன் கழல் சார்வுறவே.  31 

 

 

மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்

முன் வந்த கரும் தலை மொய் குவைதான்

மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்

தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்.  32 

 

 

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்

எண்ணில் பெருகும் தலை யாவையினும்

நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக்

கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே.  33 

 

 

கண்ட பொழுதே நடுங்கி 

  மனம் கலங்கிக் கைதொழுது

கொண்ட பெரும் பயத்துடனும் குறித்து 

  எதிர் சென்று அது கொணர்ந்த

திண்டிறலோன் கைத் தலையில் 

  சடை தெரியப் பார்த்தருளிப் 

புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து 

  இழியப் புரவலனார்.  34 

 

 

முரசுடைத்திண் படை கொடு போய் 

  முதல் அமைச்சர் முனை முருக்கி

உரை சிறக்கும் புகழ்வென்றி 

  ஒன்று ஒழிய ஒன்றாமல்

திரை சரிந்த கடல் உலகில் 

  திருநீற்றின் நெறி புரந்துயான்

அரசு அளித்தபடி சால 

  அழகிதென அழிந்து அயர்வார்.  35 

 

 

தார் தாங்கிக் கடன் முடித்த 

  சடைதாங்கும் சடை முடையார்

நீர் தாங்கும் சடைப் பெருமான் 

  நெறிதாம் கண்டவரானார்

சீர் தாங்கும் இவர் வேணிச் 

  சிரம் தாங்கி வரக் கண்டும்

பார் தாங்க இருந்தேனோ 

  பழிதாங்குவேன் என்றார்.  36 

 

 

என்று அருளிச் செய்து அருளி 

  இதற்கு இசையும் படி துணிவார்

நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் 

  நிலம் காத்து அரசு அளித்து

மன்றில் நடம் புரிவார் தம் 

  வழித் தொண்டின் வழி நிற்ப

வென்றி முடி என் குமரன்தனைப் 

  புனைவீர் என விதித்தார்.  37 

 

 

அம்மாற்றம் கேட்டழியும் அமைச்சரையும் 

  இடர் அதற்றிக்

கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் 

  கருத்து உடையார்

செம்மார்க்கம் தலை நின்று 

  செந்தீ முன் வளர்ப்பித்துப்

பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை 

  கோலத்தினில் பொலிந்தார்.  38 

 

 

கண்ட சடைச் சிரத்தினையோர் 

  கனகமணி கலத்து ஏந்தி

கொண்டு திருமுடித் தாங்கிக் 

  குலவும் எரிவலம் கொள்வார்

அண்டர் பிரான் திரு நாமத்து 

  அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதி

மண்டு தழல் பிழம்பின் இடை 

  மகிழ்ந்தருளி உள் புக்கார்.  39 

 

 

புக்க பொழுது அலர் மாரி 

  புவி நிறையப் பொழிந்து இழிய

மிக்க பெரு மங்கல தூரியம் 

  விசும்பின் முழக்கு எடுப்பச் 

செக்கர் நெடும் சடை 

  முடியார் சிலம்பலம்பு சேவடியின்

அக்கருணைத் திருநிழல் கீழ் 

  ஆராமை அமர்ந்திருந்தார்.  40 

 

 

முரசங் கொள் கடல் தானை 

  மூவேந்தர் தங்களின் முன்

பிரசம் கொள் நறுந்தொடையல் 

  புகழ்ச் சோழர் பெருமையினைப்

பரசும் குற்றேவலினால் அவர் 

  பாதம் பணிந்து ஏத்தி

நரசிங்க முனையர் திறம் 

  நாம் அறிந்தபடி உரைப்பாம்.  41 

 

திருச்சிற்றம்பலம்