முதல்-திருமுறை

134 கருத்தன் கடவுள்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  பறியலூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்

நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்

திருத்த முடையார் திருப்பறி யலூரில்

விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே.  1 

 

மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்

பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்

திருந்து மறையோர் திருப்பறி யலூரில்

விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.  2 

 

குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்

விளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்

தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்

மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.  3 

 

பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்

செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்

சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில்

விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.  4 

 

கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி

புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்

தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில்

விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.  5 

 

அரவுற்ற நாணா அனலம்ப தாகச்

செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்

தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில்

வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.  6 

 

நரையார் விடையான் நலங்கொள் பெருமான்

அரையா ரரவம் அழகா வசைத்தான்

திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில்

விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.  7 

 

வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்

இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்

திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில்

விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.  8 

 

வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்

துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்

இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும்

விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.  9 

 

சடையன் பிறையன் சமண்சாக் கியரோ

டடையன் பிலாதான் அடியார் பெருமான்

உடையன் புலியின் உரிதோல் அரைமேல்

விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.  10 

 

நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்

வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப்

பொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்

கறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சங்கப் பலகையளித்தல்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details
வேதப் பொருளுரைத்தல்
View Details