முதல்-திருமுறை

031 விழுநீர்மழு வாள்படை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : குரங்கணில்முட்டம்

திருச்சிற்றம்பலம்

 

விழுநீர்மழு வாள்படை அண்ணல் விளங்கும்

கழுநீர் குவளைம்மல ரக்கயல் பாயும்

கொழுநீர்வயல் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே.  1 

 

விடைசேர்கொடி அண்ணல் விளங்குயர் மாடக்

கடைசேர்கரு மென்குளத் தோங்கிய1 காட்டில்

குடையார் புனல் மல்கு குரங்கணில் முட்டம்

உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 2

 

சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்

காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்

கோலப்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே.  3 

 

வாடாவிரி கொன்றை வலத்தொரு காதில்

தோடார் குழை யான்நல பாலன நோக்கிக்

கூடாதன செய்த குரங்கணில் முட்டம்

ஆடாவரு வாரவ ரன்புடை யாரே.  4 

 

இறையார்வளை யாளையொர் பாகத் தடக்கிக்

கறையார்மிடற் றான்கரி கீறிய கையான்

குறையார் மதிசூடி குரங்கணில் முட்டத்

துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.  5 

 

பலவும்பய னுள்ளன பற்றும் ஒழிந்தோம்

கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்

குலவும்பொழில் சூழ்ந்த குரங்கணில் முட்டம்

நிலவும்பெரு மான்டி நித்தல் நினைந்தே.  6 

 

மாடார்மலர்க் கொன்றை வளர்சடை வைத்துத்

தோடார்குழை தானொரு காதில்2 இலங்கக்

கூடார்மதி லெய்து குரங்கணில் முட்டத்

தாடாரர வம்மரை யார்த்தமர் வானே. 7

 

மையார்நிறம் மேனி யரக்கர்தங் கோனை

உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த

கொய்யாமலர் சூடி குரங்கணில் முட்டம்

கையால்தொழு வார்வினை காண்ட லரிதே.  8 

 

வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும்

அறியாதசைந் தேத்தவோர் ஆரழ லாகும்

குறியால் நிமிர்ந் தான்றன் குரங்கணில் முட்டம்

நெறியால்தொழு வார்வினை நிற்ககிலாவே. 9

 

கழுவார்துவ ராடை கலந்துமெய் போர்க்கும்

வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல்

குழுமின்சடை யண்ணல் குரங்கணில் முட்டத்

தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.  10 

 

கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன்

கொல்லார்மழு வேந்தி குரங்கணில் முட்டம்

சொல்லார் தமிழ்மாலை செவிக்கினி தாக

வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே. 11

 

திருச்சிற்றம்பலம்