ஐந்தாம்-திருமுறை

092 கண்டு கொள்ளரி

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

கண்டு கொள்ளரி

  யானைக் கனிவித்துப்

பண்டு நான்செய்த

  பாழிமை கேட்டிரேல்

கொண்ட பாணி

  கொடுகொட்டி தாளங்கைக்

கொண்ட தொண்டரைத்

  துன்னிலுஞ் சூழலே.  1 

 

 

நடுக்கத் துள்ளும்

  நகையுளும் நம்பர்க்குக்

கடுக்கக் கல்ல

  வடமிடு வார்கட்குக்

கொடுக்கக் கொள்க

  வெனவுரைப் பார்களை

இடுக்கண் செய்யப்

  பெறீரிங்கு நீங்குமே.  2 

 

 

கார்கொள் கொன்றைக்

  கடிமலர்க் கண்ணியான்

சீர்கொள் நாமஞ்

  சிவனென் றரற்றுவார்

ஆர்க ளாகிலு

  மாக அவர்களை

நீர்கள் சாரப்

  பெறீரிங்கு நீங்குமே.  3 

 

 

சாற்றி னேன்சடை

  நீண்முடிச் சங்கரன்

சீற்றங் காமன்கண்

  வைத்தவன் சேவடி

ஆற்ற வுங்களிப்

  பட்ட மனத்தராய்ப்

போற்றி யென்றுரைப்

  பார்புடை போகலே.  4 

 

 

இறையென் சொன்மற

  வேல்நமன் றூதுவீர்

பிறையும் பாம்பு

  முடைப்பெரு மான்றமர்

நறவம் நாறிய

  நன்னறுஞ் சாந்திலும்

நிறைய நீறணி

  வாரெதிர் செல்லலே.  5 

 

 

வாம தேவன்

  வளநகர் வைகலுங்

காம மொன்றில

  ராய்க்கை விளக்கொடு

தாமந் தூபமுந்

  தண்ணறுஞ் சாந்தமும்

ஏம மும்புனை

  வாரெதிர் செல்லலே.  6 

 

 

படையும் பாசமும்

  பற்றிய கையினீர்

அடையன் மின்னம

  தீசன் அடியரை

விடைகொ ளூர்தியி

  னானடி யார்குழாம்

புடைபு காதுநீர்

  போற்றியே போமினே.  7 

 

 

விச்சை யாவதும்

  வேட்கைமை யாவதும்

நிச்சல் நீறணி

  வாரை நினைப்பதே

அச்ச மெய்தி

  அருகணை யாதுநீர்

பிச்சை புக்கவன்

  அன்பரைப் பேணுமே.  8 

 

 

இன்னங் கேண்மின்

  இளம்பிறை சூடிய

மன்னன் பாதம்

  மனத்துட னேத்துவார்

மன்னும் அஞ்செழுத்

  தாகிய மந்திரந்

தன்னி லொன்றுவல்

  லாரையுஞ் சாரலே.  9 

 

 

மற்றுங் கேண்மின்

  மனப்பரிப் பொன்றின்றிச்

சுற்றும் பூசிய

  நீற்றொடு கோவணம்

ஒற்றை யேறுடை

  யானடியே யல்லாற்

பற்றொன் றில்லிகள்

  மேற்படை போகலே.  10 

 

 

அரக்கன் ஈரைந்

  தலையுமோர் தாளினால்

நெருக்கி யூன்றியிட்

  டான்தமர் நிற்கிலுஞ்

சுருக்கெ னாதங்குப்

  பேர்மின்கண் மற்றுநீர்

சுருக்கெ னிற்சுட

  ரான்கழல் சூடுமே.  11 

திருச்சிற்றம்பலம்