ஏழாம்-திருமுறை

041 முதுவாய் ஓரி கதற

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கச்சூர் ஆலக்கோயில்

திருச்சிற்றம்பலம்

 

முதுவாய் ஓரி கதற முதுகாட்

  டெரிகொண் டாடல் முயல்வானே

மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்

  மலையான் மகள்தன் மணவாளா

கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்

  கண்டால் அடியார் கவலாரே

அதுவே ஆமா றிதுவோ கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானே.  1 

 

 

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக்

  கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்

றுச்சம் போதா ஊரூர் திரியக்

  கண்டால் அடியார் உருகாரே

இச்சை அறியோம் எங்கள் பெருமான்

  ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்

அச்சம் இல்லாக் கச்சூர் வடபால்

  ஆலக் கோயில் அம்மானே.  2 

 

 

சாலக் கோயில் உளநின் கோயில்

  அவையென் றலைமேற் கொண்டாடி

மாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன்

  வானோர் அறியா நெறியானே

கோலக் கோயில் குறையாக் கோயில்

  குளிர்பூங் கச்சூர் வடபாலை

ஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ்

  அறங்கட் டுரைத்த அம்மானே.  3 

 

 

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய்

  மின்னேர் உருவத் தொளியானே

கடையும் புடைசூழ் மணிமண் டபமுங்

  கன்னி மாடங் கலந்தெங்கும்

புடையும் பொழிலும் புனலுந் தழுவிப்

  பூமேல் திருமா மகள்புல்கி

அடையுங் கழனிப் பழனக் கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானே.  4 

 

 

மேலை விதியே வினையின் பயனே

  விரவார் புரமூன் றெரிசெய்தாய்

காலை யெழுந்து தொழுவார் தங்கள்

  கவலை களைவாய் கறைக்கண்டா

மாலை மதியே மலைமேல் மருந்தே

  மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானே.  5 

 

 

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய்

  பெற்ற மேறிப் பேய்சூழ்தல்

துறவாய் மறவாய் சுடுகா டென்றும்

  இடமாக் கொண்டு நடமாடி

ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்

  கண்டால் அடியார் உருகாரே

அறவே ஒழியாய் கச்சூர் வடபால்

  ஆலக் கோயில் அம்மானே.  6 

 

 

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால்

  அதுவும் பொருளாக் கொள்வானே

மெய்யே எங்கள் பெருமான் உன்னை

  நினைவார் அவரை நினைகண்டாய்

மையார் தடங்கண் மங்கை பங்கா

  கங்கார் மதியஞ் சடைவைத்த

ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானே.  7 

 

 

ஊனைப் பெருக்கி உன்னை நினையா

  தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்

கானக் கொன்றை கமழ மலருங்

  கடிநா றுடையாய் கச்சூராய்

மானைப் புரையும் மடமென் னோக்கி

  மடவா ளஞ்ச மறைத்திட்ட

ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய்

  ஆலக் கோயில் அம்மானே.  8 

 

 

காதல் செய்து களித்துப் பிதற்றிக்

  கடிமா மலரிட் டுனையேத்தி

ஆதல் செய்யும் அடியார் இருக்க

  ஐயங் கொள்வ தழகிதே

ஓதக் கண்டேன் உன்னை மறவேன்

  உமையாள் கணவா எனையாள்வாய்

ஆதற் பழனக் கழனிக் கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானே.  9 

 

 

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர்

  ஆலக் கோயில் அம்மானை

உன்ன முன்னும் மனத்தா ரூரன்

  ஆரூ ரன்பேர் முடிவைத்த

மன்னு புலவன் வயல்நா வலர்கோன்

  செஞ்சொல் நாவன் வன்றொண்டன்

பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்

  அவரெந் தலைமேற் பயில்வாரே.  10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கோச் செங்கட் சோழ நாயனார்
View Details
வெள்ளையானை சாபம் தீர்த்தல்
View Details
பொற்கிழி அளித்தல்
View Details