ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

016 உலகெலாம் தொழவந்து

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : தஞ்சை இராசராசேச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

உலகெலாம் தொழவந்(து) எழுகதிர்ப் பருதி

  ஒன்றுநூ றாயிர கோடி

அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ !

  அங்ஙனே அழகிதோ, அரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம்

  பருவரை ஞாங்கர்வெண் திங்கள்

இலைகுலாம் பதணத்(து) இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத்(து) இவர்க்கே.  1 

 

 

நெற்றியிற் கண்என் கண்ணில்நின் றகலா

  நெஞ்சினில் அஞ்சிலம்(பு) அலைக்கும்

பொற்றிரு வடிஎன் குடிமுழு தாளப்

  புகுந்தன போந்தன இல்லை

மற்றெனக்(கு) உறவேன் மறிதிரை வடவாற்

  றிடுபுனல் மதகில்வாழ் முதலை

ஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  2 

 

 

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய

  வெண்ணிலா விரிதரு தரளக்

குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்

  குறிப்பெனோ கோங்கிணர் அனைய

குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந்து

  உக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்(கு)

இடைகெழு மாடத்து இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  3 

 

 

வாழியம் போதத்(து) அருகுபாய் விடையம்

  வரிசையின் விளக்கலின் அடுத்த

சூழலம் பளிங்கின் பாசலர் ஆதிச்

  சுடர்விடு மண்டலம் பொலியக்

காழகில் கமழும் மாளிகை மகளிர்

  கங்குல்வாய் அங்குலி கெழும

யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  4 

 

 

எவரும்மா மறைகள் எவையும் வானவர்கள்

  ஈட்டமும் தாட்டிருக் கமலத்

தவரும்மா லவனும் அறிவரும் பெருமை

  அடலழல் உமிழ்தழற் பிழம்பர்

உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்

  உறுகளிற்(று) அரசின(து) ஈட்டம்

இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  5 

 

 

அருளுமா(று) அருளி ஆளுமா(று) ஆள

  அடிகள்தம் அழகிய விழியும்

குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற

  குயிலினை மயல்செய்வ(து) அழகோ

தரளவான் குன்றில் தண்நிலா ஒளியும்

  தருகுவால் பெருகுவான் தெருவில்

இருளெலாம் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  6 

 

 

தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின்

  தளிர்இறப்(பு) இலைஉதிர்(வு) என்றால்

நினைப்பருந் தம்பால்சேறலின் றேனும்

  நெஞ்சிடிந்(து) உருகுவ(து) என்னோ 

கனைப்பெருங் கலங்கல் பொய்கையங் கழுநீர்ச்

  சூழல்மா ளிகைசுடர் வீசும்

எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  7 

 

 

பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்

  தாம்பலர் ஏம்பலித் திருக்க

என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த

  எளிமையை என்றும் நான் மறக்கேன்

மின்நெடும் புருவத்(து) இளமயில் அனையார்

  விலங்கல்செய் நாடக சாலை

இன்நடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  8 

 

 

மங்குல்சூழ் போதின் ஒழிவற நிறைந்து

  வஞ்சகர் நெஞ்சகத்(து) ஒளிப்பார்

அங்கழல் சுடராம் அவர்க்கிள வேனல்

  அலர்கதிர் அனையர் வாழியரோ !

பொங்கெழில் திருநீறு அழிபொசி வனப்பில்

  புனல்துளும்(பு) அவிர்சடை மொழுப்பர்

எங்களுக்(கு) இனியர் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  9 

 

 

தனியர்எத் தனைஓ ராயிர வருமாம்

  தன்மையர் என்வயத் தினராம்

கனியரத் திருதீங் கரும்பர்வெண் புரிநூற்

  கட்டியர் அட்டஆ ரமிர்தர்

புனிதர்பொற் கழலர்புரி சடா மகுடர்

  புண்ணியர் பொய்யிலா மெய்யர்க்(கு)

இனியர்எத் தனையும் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவர்க்கே.  10 

 

 

சரளமந் தார சண்பக வகுள

  சந்தன நந்தன வனத்தின்

இருள்விரி மொழுப்பின் இஞ்சிசூழ் தஞ்சை

  இராசரா சேச்சரத் திவரை

அருமருந்து அருந்தி அல்லல்தீர் கருவூர்

  அறைந்தசொல் மாலைஈ ரைந்தின்

பொருள்மருந்(து) உடையோர் சிவபதம் என்னும்

  பொன்நெடுங் குன்றுடை யோரே. 11

 

திருச்சிற்றம்பலம்