பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 01. உபதேசம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

விண்ணின்று இழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின்று உருக்கியோர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே.  1 

 

 

களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருள் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பளிங்கிற் பவளம் பதித்தான் பதியே.  2 

 

 

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்

பதியினைப் போற்பசு பாசம் அனாதி

பதியினைச் சென்றணு காப்பசு பாசம்

பதியணு கிற்பசு பாசம் நில் லாவே.  3 

 

 

வேயின் எழுங்கனல் போலேஇம் மெய்யெனும்

கோயி லிருந்து குடிகொண்ட கோன்நந்தி

தாயினும் மும்மலம் மாற்றித் தயாஎன்னும்

தோயம தாய் எழுஞ் சூரிய னாமே.  4 

 

 

சூரிய காந்தமும் சூழ்பஞ்சும் போலவே

சூரிய காந்தம் சூழ்பஞ்சைச் சுட்டிடா

சூரியன் சந்நிதி யிற்சுடு மாறுபோல்

ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.  5 

 

 

மலங்கள்ஐந் தாமென மாற்றி அருளித்

தலங்கள்ஐந் தானற் சதாசிவ மான

புலங்களைந் தான்அப் பொதுவினுள் நந்தி

நலங்களைந் தான்உள் நயந்தான் அறிந்தே.  6 

 

 

அறிவுஐம் புலனுட னேநான் றதாகி

நெறியறி யாதுற்ற நீர்ஆழம் போல

அறிவுஅறி வுள்ளே அழிந்தது போலக்

குறியறி விப்பான் குருபர னாமே.  7 

 

 

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்

தீமேவு பல்கர ணங்களுள் உற்றன

தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.  8 

 

 

வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிகச்

சுத்தத் துரியம் பிறந்து துடக்கற

ஒத்துப் புலனுயிர் ஒன்றாய் உடம்பொடு

செத்திட் டிருப்பர் சிவயோகி யார்களே.  9 

 

 

சிவயோக மாவது சித்தசித் தென்று

தவயோகத் துள்புக்குத் தன்னொளி தானாய்

அவயோகஞ் சாராதவன்பதி போக

நவயோக நந்தி நமக்களித் தானே.  10 

 

 

அளித்தான் உலகெங்கும் தானான உண்மை

அளித்தான் அமரர் அறியா உலகம்

அளித்தான் திருமன்றுள் ஆடுந் திருத்தாள்

அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.  11 

 

 

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்

அளியில் அளிபோய் அடங்கிய வாறும்

ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்

தெளியும் அவரே சிவ சித்தர் தாமே.  12 

 

 

சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர்

சத்தமும் சத்த முடிவுந்தம் முள்கொண்டோர்

நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர

முத்தர்தம் முத்தி முதல்முப்பத் தாறே.  13 

 

 

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்

ஒப்பிலா ஆனந்தத் துள்ளொளி புக்குச்

செப்ப அரிய சிவங்கண்டு தான்தெளிந்து

அப்பரி சாக அமர்ந்திருந் தாரே.  14 

 

 

இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி

இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி

இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்தங்கு

இருந்தார் இழவுவந்து எய்திய சோம்பே.  15 

 

 

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே

சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே

சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்

சோம்பர் கண் டார்அச் சுருதிக்கண் தூக்கமே.  16 

 

 

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்முள்ளே

தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்முள்ளே

தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்முள்ளே

தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.  17 

 

 

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கெல்லை

அவ்வாறு அருட்செய்வன் ஆதிஅரன் தானும்

ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்

செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.  18 

 

 

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்

மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்

ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்

பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.  19 

 

 

பெற்றார் உலகிற் பிரியாப் பெருநெறி

பெற்றார் உலகிற் பிறவாப் பெரும்பயன்

பெற்றார் அம்மன்றில் பிரியாப் பெரும்பேறு

பெற்றார் உலகுடன் பேசாப் பெருமையே.  20 

 

 

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்

அருமை எளிமை அறிந்தறி வார்ஆர்

ஒருமையுள் ஆமைபோல் உள்ஐந்து அடக்கி

இருமையுங் கேட்டிருந் தார்புரை அற்றே.  21 

 

 

புரைஅற்ற பாலினுள் நெய்கலந் தாற்போல்

திரைஅற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்

உரையற்று உணர்வோர் உடம்பிங்கு ஒழிந்தால்

கரையற்ற சோதி கலந்தசத் தாமே.  22 

 

 

சத்த முதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில்

சித்துக்குச் சித்தன்றி சேர்விடம் வேறுண்டோ

சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும்

அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே.  23 

 

 

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்

உப்பெனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு

அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோல்

செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே.  24 

 

 

அடங்குபேர் அண்டத்து அணுஅண்டம் சென்றங்கு

இடங்கொண்டது இல்லை இதுவன்றி வேறுண்டோ

கடந்தொறும் நின்ற உயிர்க்கரை காணில்

திடம்பெற நின்றான் திருவடி தானே.  25 

 

 

திருவடி யேசிவ மாவது தேரில்

திருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்

திருவடி யேசெல் கதியது செப்பில்

திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.  26 

 

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.  27 

 

 

தானே புலன்ஐந்துந் தன்வசம் ஆயிடும்

தானே புலன்ஐந்துந் தன்வசம் போயிடும்

தானே புலன்ஐந்துந் தன்னில் மடைமாறும்

தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்தே.  28 

 

 

சந்திப் பதுநந்தி தன்திருத் தாளிணை

சிந்திப் பதுநந்தி செய்ய திருமேனி

வந்திப் பதுநந்தி நாமம் என் வாய்மையால்

புந்திக்குள் நிற்பது நந்திபொற் போதமே.  29 

 

 

போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்

போதந் தனில்வைத்துப் புண்ணியர் ஆயினார்

நாதன் நடத்தால் நயனங் களிகூர

வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.  30 

 

 

திருச்சிற்றம்பலம்