பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 18. கேசரி யோகம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்

அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி

விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து

நட்ட மிருக்க நமனில்லை தானே  1 

 

 

வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்

கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி

விண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்

அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே  2 

 

 

இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல் லார்க்கட்

கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே  3 

 

 

ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்

வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து

நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்

பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே  4 

 

 

நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்

சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்

மூவரு முப்பத்து மூவருந் தோன்றுவர்

சாவதும் இல்லை சதகோடி யூனே  5 

 

 

ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்

வானூறல் பாயும் வகையறி வாரில்லை

வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்

தேனூறல் உண்டு தெளியலு மாமே  6 

 

 

மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்

காலனும் இல்லை கதவுந் திறந்திடும்

ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்

பாலனு மாவான் பராநந்தி ஆணையே  7 

 

 

நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்

சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்

பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்

சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே  8 

 

 

தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்

நாவினை நாடின் நமனுக் கிடமில்லை

பாவினை நாடிப் பயனறக் கண்டவர்

தேவினை யாடிய தீங்கரும் பாமே  9 

 

 

தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்

ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்

கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட

ஊங்கரும் பாகியே ஊனீர் வருமே  10 

 

 

ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்

தேனீர் பருகிச் சிவாய நமவென்று

கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்

வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே  11 

 

 

வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்

காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்

பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்

கூய்ந்தறிந்1 துள்ளுறை கோயிலு மாமே  12 

 

 

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்

தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்

காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்

தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே  13 

 

 

தீவினை யாளர்த்தஞ் சென்னியி லுள்ளவன்

பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்

பாவினை யாளர்தம் பாகவத் துள்ளவன்

மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே  14 

 

 

மதியி நெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்

பதிமனை நூறு1நூற் றிருபத்து நாலாய்க்

கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி

எதிர்மலை யாமல் இருந்தனன் தானே  15 

 

 

இருந்தனள் சத்தியு மக்கலை சூழ

இருந்தனள் கன்னியு மந்நடு வாக

இருந்தனள் மானேர் முகநில வார

இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே  16 

 

 

பொழிந்த இருவெள்ளி பொன்மன் றடையில்

வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்

கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்

கொழுந்தது வாகுங் குணமது தானே  17 

 

 

குணமது வாகிய கோமள வல்லி

மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்

தனமது வாகிய தத்துவ ஞானம்

இனமது வாக இருந்தனன் தானே  18 

 

 

இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்

பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய

விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்

மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே  19 

 

 

மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்

கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்

பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்

குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே  20 

 

 

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்

கழிகின்ற வாயுவுங் காக்கலு மாகும்

வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்

பழிக்கின்ற காலத்துப் பையகற் றீரே  21 

 

 

பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்

மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்

கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்

மையணி கோயில் மணிவிளக் காமே  22 

 

 

விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி

நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே

வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்

சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே  23 

 

 

சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்

சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்

சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்

சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே  24 

 

 

தூர தெரிசனஞ் சொல்லுவன் காணலாங்

காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி

ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்

பாரா ருலகம் பகன்முன்ன தாமே  25 

 

 

முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழே

பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்

நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்

தன்னெழு கோயில் தலைவனு மாமே  26 

 

திருச்சிற்றம்பலம்