பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 03. அருச்சனை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்

வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்

தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை

செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.  1 

 

 

சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்

தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்

பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து

ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.  2 

 

 

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே

பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்

துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்

இன்புட னேவந்து எய்திடும் முத்தியே.  3 

 

 

எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை

எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்

எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்

எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.  4 

 

 

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்

மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான

நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்

மண்ணும் அனல்பவ னத்தோடு வைகுமே.  5 

 

 

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோர்

வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்

வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்

வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.  6 

 

 

அறிவரு ஞானத்து எவரும் அறியார்

பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்

நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்

எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.  7 

 

 

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்

மருளறி யாமையும் மன்னும் அறிவு

மருளிவை விட்டெறி யாமை மயங்கும்

மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே.  8 

 

 

தான்அவ னாக அவனேதான் ஆயிட

ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்

போனவன் அன்பிது நாலாம் மரபுறத்

தான்அவன் ஆகுமோ ராசித்த தேவரே. 9

 

 

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்

நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்

பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்

வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே.  10 

 

 

நமவது ஆசனம் ஆன பசுவே

சிவமது சித்திச் சிவமாம் பதியே

நமவற ஆதி நாடுவது அன்றாம்

சிவமாகு மாமோனம் சேர்தல்மெய் வீடே.  11 

 

 

தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்

ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்

ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்

வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே.  12 

 

திருச்சிற்றம்பலம்